Skip to main content

வீட்டுக்குள்ளேயே இருக்கச் சொல்லும் அரசாங்கம் ஒருபுறம்... வீட்டுக்குப் போக வழி கேட்கும் ஏழைகள் மறுபுறம்...!

Published on 28/03/2020 | Edited on 28/03/2020

கூட்டம் சேரக்கூடாது, கும்பலாக சுற்றக்கூடாது என நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டிருக்கும் சூழலில்தான், இந்தியாவின் தலைநகர் டெல்லியிலிருந்து பேரணி போல திரண்ட மக்கள் தங்கள் சொந்த மாநிலங்கள் நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றனர். அவர்கள் பிற மாநிலங்களிலிருந்து தலைநகருக்கு வந்த தொழிலாளர்கள்.

 

Corona virus issue - Government curfew - Poors waiting in Delhi

 

 

உத்தரபிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து வந்த தொழிலாளர்கள் டெல்லியில் குடும்பத்தோடு தங்கி வேலை பார்த்து வந்த நிலையில், ஊரடங்கு உத்தரவால் அவர்களுக்கு வேலை எதுவும் கிடைக்கவில்லை. அன்றாடம் உழைத்தால்தான் சாப்பாடு என்ற நிலையில், 4 நாட்களாக உணவுக்கு வழியில்லை. கைக்குழந்தைகளின் அழுகையை நிறுத்த முடியவில்லை. பசியும் பட்டினியுமாக எத்தனை காலம் தலைநகரில் உயிரைத் தாங்கிப் பிடித்துக் கொண்டிருக்க முடியும் என்று அவர்களுக்குத் தெரியவில்லை. அத்துடன், அவர்கள் முடங்கியிருப்பதற்கு வீடும் கிடையாது. தெருவோரமே பல குடும்பங்களின் வசிப்பிடம்.

 

Corona virus issue - Government curfew - Poors waiting in Delhi

 

 

போக்குவரத்தும் முடக்கப்பட்ட நிலையில், கொடும்பசியுடன் தலைநகரிலிருந்து 500, 600 கி.மீ தொலைவில் உள்ள தங்கள் சொந்த ஊருக்கே போய்விடலாம் எனப் புறப்பட்டுவிட்டனர். கரோனா தொற்று பரவும் அச்சத்தில் உள்ள மத்திய-மாநில அரசாங்கங்கள் இந்தத் தொழிலாளர்களின் அவலத்தை இப்போதுதான் தங்கள் கழுத்தை லேசாகத் திருப்பி பார்க்கத் தொடங்கியுள்ளன.

பிற மாநிலத் தொழிலாளர்களை டெல்லி காப்பாற்றும் என அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். சொந்த ஊருக்குச்  செல்பவர்களுக்கு போக்குவரத்து வசதி செய்து தரப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

Corona virus issue - Government curfew - Poors waiting in Delhi

 

 

ஆனால், இத்தனை பேருக்கும் எப்படி பேருந்து அல்லது பிற வாகன வசதி செய்து தரப்படும், எத்தனை நாட்களுக்குள் செய்து தரப்படும், அதுவரை அவர்கள் கரோனா தொற்று ஏற்படாமல் தங்குவதற்கு எங்கே இடம், உணவுக்கு என்ன வழி என்று தெரியாத நிலையே நீடிக்கிறது. 

இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சகத்தின் பேரிடர் மேலாண்மை பிரிவு இன்று (மார்ச் 28) அனைத்து மாநில அரசுகளின் தலைமைச் செயலாளர்களுக்கும் அனுப்பியுள்ள கடிதத்தில், கொரோனா வைரஸ் பரவலைத்  தடுக்கும் வகையில் பிறப்பிக்கட்டுள்ள ஊரடங்கு உத்தரவால் நாடு முடங்கியுள்ள நிலையில் வெளிமாநிலங்களிலிருந்து வேலைக்கு வந்த தொழிலாளர்கள் உள்ளிட்ட வீடற்ற மக்களுக்கு மறுவாழ்வு முகாம்கள் மற்றும் பிற இடங்களில் தங்க வைத்து, உணவு உள்ளிட்ட வசதிகளை மாநில பேரிடர் பொறுப்பு நிதியிலிருந்து செய்து தர வேண்டும் எனத் தெரிவித்துள்ளது.

 

Corona virus issue - Government curfew - Poors waiting in Delhi

 



ஒவ்வொரு மாநிலத்திலும், (குறிப்பாக தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநிலங்களில்) குவிந்திருக்கும் வெளிமாநிலத் தொழிலாளர்கள் தங்கும் இடமின்றி, தின்பதற்கு உணவின்றி சுற்றுத் திரிவது, கொரோனா தொற்றுப் பரவல்  குறித்து அந்தந்த மாநில மக்களிடமும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. சொந்த மாநிலம் என்றாலும் வெளி மாநிலம் என்றாலும் மக்களுக்கு வயிறும் பசியும் ஒன்றுதான். அவர்களைப் பாதுகாக்க வேண்டியது அரசாங்கங்களின் கடமை.

வீட்டுக்குள் முடங்குங்கள் என்று பிரதமரும் மாநிலங்களின் முதல்வர்களும் தெரிவித்தனர். வீட்டுக்குப் போக வழி காட்டுங்கள் என்கிறார்கள் ஏழைத் தொழிலாளர்கள். பால்கனியில் நின்று கைதட்டி பாரத் மாதாவுக்கு ஜே என்று முழக்கமிட்டவர்கள், இப்போதுதான் குனிந்து பார்க்கத் தொடங்கியிருக்கிறார்கள், உண்மையான பாரதத்தை.

 

Next Story

டெல்லி மேயர் தேர்தல் ரத்து; பா.ஜ.க.வுக்கு எதிராக ஆம் ஆத்மி ஆர்ப்பாட்டம்

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 Aam Aadmi struggle for Canceled Delhi Mayoral Election

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இதற்கிடையில், டெல்லி மேயர் மற்றும் துணை மேயரைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் இன்று (26-04-24) நடைபெற இருந்த நிலையில், திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. இதற்கு ஆம் ஆத்மி கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

டெல்லி மாநிலத்தில் மொத்தம் 250 கவுன்சிலர்கள் உள்ளனர். டெல்லியில் உள்ள மேயரைத் தேர்ந்தெடுக்க 10 எம்.பி.க்கள், 14 எம்.எல்.ஏ.க்கள் மற்றும் 250 கவுன்சிலர்கள் 274 வாக்காளர்கள் வாக்களிப்பார்கள். இதில் மேயர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளருக்கு அதிகபட்சமாக 138 வாக்குகள் தேவை. அந்த வகையில், ஆம் ஆத்மி கட்சிக்கு, காங்கிரஸ் கவுன்சிலர்கள் மற்றும் சுயேட்சை கவுன்சிலர்கள் உட்பட 151க்கும் மேற்பட்ட வாக்குகள் கிடைக்கப்பெற இருந்தது. இதனால், டெல்லி மேயர் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி வாய்ப்பு அதிகமாக இருந்தது.

இந்த நிலையில், டெல்லி மேயர் தேர்தலை ஆளுநர் அலுவலகம் ரத்து செய்யப்படவுள்ளதாக டெல்லி மாநகராட்சி அறிவித்துள்ளது. இது குறித்து தெரிவிக்கையில், ‘தலைமை அதிகாரி நியமிக்கப்படாததால் டெல்லி மேயர் தேர்தல் தள்ளி வைக்கப்படுகிறது; எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஆம் ஆத்மி கடும் கண்டனம் தெரிவித்து மேயர் சபையில் போராட்டம் நடத்தி வருகின்றது.

இது குறித்து ஆம் ஆத்மி எம்.பி சஞ்சய் சிங் கூறுகையில், “ பட்டியலின சமூகத்தைத் தடுக்க இவர்கள் சதி செய்கிறார்கள். இந்த முறை, பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவர்தான் டெல்லி எம்சிடியின் மேயராக வர இருந்தது. ஆனால் தேர்தலை ரத்து செய்ததன் மூலம், அவர் தனது பட்டியலின விரோத மனநிலை மற்றும் அரசியலமைப்புச் சட்டத்தை சிதைத்ததற்கு மற்றொரு சான்றைக் கொடுத்துள்ளனர்” எனப் பேசினார். தற்போது மேயர் ஷெல்லி ஓபராயின் பதவிக்காலம் மார்ச் 31-ஆம் தேதியுடன் முடிவடைந்த நிலையில் புதிய மேயர் தேர்ந்தெடுக்கப்படும் வரை அவர் பதவியில் நீடிப்பார் என்று கூறப்பட்டுள்ளது. 

Next Story

“இதை செய்ய சொன்னால் இந்தியாவை விட்டு வெளியேறுவோம்” - வாட்ஸ் அப் எச்சரிக்கை!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 WhatsApp warning May have to leave India

உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான மக்கள் உபயோகிக்கும் செயலி தான் வாட்ஸ் அப். இந்த செயலி மூலம், தகவல்களை பரிமாறவும், இணைய சேவை மூலம் எந்தவித கட்டணமுமின்றி வீடியோ கால், ஆடியோ கால் போன்றவற்றை பயன்படுத்தவும் முடியும். மேலும், புகைப்படங்கள், வீடியோக்கள், ஸ்டிக்கர்கள் என அனைத்து விதமான பரிமாற்றங்களையும் இந்த செயலி மூலம் அனுப்பக்கூடிய வசதிகள் உண்டு. இந்த செயலியை உபயோகிக்காத மக்கள் மிகவும் சொற்பமாக தான் இருக்க முடியும் என்றுதான் கூற வேண்டும். 

இதற்கிடையில் வாட்ஸ் அப் பயனர்களின் வசதிகளுக்கு ஏற்றவாறு வாட்ஸ் அப் நிறுவனம் அவ்வப்போது புதிய அப்டேட்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில், இந்த செயலி மூலம் பயனர் ஒருவருக்கு அனுப்பும் செய்திகளை மூன்றாம் நபர்கள் பார்க்க முடியாதவாறு எண்டு டு எண்டு என்கிரிப்ஷன் ( End to End Encryption) முறையை கொண்டு வந்தது. இதனைப் பயன்படுத்தி பயனர்கள், தாங்கள் அனுப்பும் செய்திகளை பாதுகாத்து கொள்ளலாம். இதனால், தனிப்பட்ட ஒருவரின் செய்திகள் பாதுகாக்கப்படும் என்று கூறப்படுகிறது. 

இந்த நிலையில், கடந்த 2021ஆம் ஆண்டு இந்தியாவில் தகவல் தொழில்நுட்ப சட்டங்களில் மத்திய அரசு புதிய மாற்றத்தை கொண்டு வந்தது. மத்திய அரசு கொண்டு வந்த அந்த சட்டத்தில் கூறியதாவது, போலி செய்திகளையும், நாட்டின் பாதுகாப்பு காரணங்களுக்காகவும் தவறான செய்தி பகிர்வுகளை கண்டறிய வேண்டும். இதனால், வாட்ஸ் அப், பேஸ்புக் போன்ற செய்தி பகிர்வு செயலி வாயிலாக பகிரப்படும் அனைத்து செய்திகளும் சேமிக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டது.

இதனை எதிர்த்து வாட்ஸ் அப், பேஸ் புக் ஆகிய நிறுவனங்கள் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இது தொடர்பான வழக்கு நேற்று (25-04-24) டெல்லி உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறுகையில், ‘வாட்ஸ் அப் எண்டு டு எண்ட் என்கிரிப்ஷன் காரணமாக போலி செய்திகளை கண்டறிவதில் சிக்கல் ஏற்படுகிறது. மேலும், இது போலி செய்திகளால் நாட்டில் நிலவும் அமைதி மற்றும் ஒற்றுமையை சீர்குலைத்துவிடும்’ என வாதிட்டார். 

இதனையடுத்து, வாட்ஸ் அப் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தேஜஸ் காரியா, “இந்த சட்டத்தை அமல்படுத்துவதால் நாங்கள் ஒரு முழுமையான சங்கிலியை வைத்திருக்க வேண்டும். மேலும், மில்லியன் கணக்கான செய்திகளை பல ஆண்டுகளாக சேமிக்க வேண்டும் நிலை உருவாகும். உலகில் எந்த நாட்டிலும் இது போன்ற சட்டங்கள் இல்லை.  இது போன்ற சட்டங்களை கொண்டு வந்து  என்கிரிப்ஷனை எடுக்க சொன்னால் வாட்ஸ்அப் இந்தியாவை விட்டு செல்ல வேண்டி இருக்கும்” எனத் தெரிவித்தார். இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், இது தொடர்பான வழக்கை ஒத்திவைத்தனர்.