Skip to main content

இந்து அரவணைப்பு அரசியல்! -தி.மு.க. வியூகம்!

Published on 10/08/2020 | Edited on 10/08/2020
DMK

 

 

மத்திய, மாநில உளவுப்பிரிவுகள் இந்த கரோனா காலத்தில் எடுத்த சர்வே முடிவுகள், தமிழகத்தில் தி.மு.க.வுக்கே ஆதரவு பலமாக இருப்பதாக சொல்வதை, மோடியும், அமித்ஷாவும் தொடர்ந்து கவனித்து வருகிறார்கள். இ.பி.எஸ்.-ஓ.பி.எஸ். இருவரையும் இந்த முடிவுகள் அதிர்ச்சி அடைய வைத்தாலும் ஆட்சியதிகாரம் நீடிப்பதால் தொழில் முதலீட்டு ஒப்பந்தங்கள், குடிமராமத்து பணிகள், காவிரி டெல்டாவை வேளாண் மண்டலமாக அறிவித்தல் போன்ற புதுப்புது அரசு திட்டங்களை அறிவிக்கிறார்கள்.

 

மக்களின் மனநிலையை மாற்றும் வகையில், தி.மு.க.வை இந்து விரோத கட்சியாக காட்டுவதற்கு கந்த சஷ்டி கவசம் பற்றிய யூடியூப் சர்ச்சை முதல் பலவற்றையும் இழுத்து வருகிறது பா.ஜக. தரப்பு. அதற்கேற்ப வழக்குகளைப் பதிவுசெய்து ஊடக விவாதமாக மாற்றுகிறது அ.தி.மு.க. அரசு. தி.மு.கவுக்கு எதிரான சின்னச்சின்ன செய்திகளும் சமூக வலைதளத்தில் மதரீதியாக வைரலாக்கப்படுகின்றன. தி.மு.க.வோ, இதுபோன்ற பரப்புதல்களுக்கு உணர்ச்சி வசப்பட்டு ரியாக்ட் செய்யாமல், தனக்கான வாக்குவங்கியைப் பலப்படுத்துவதிலேயே குறியாக இருக்கிறது.

 

"நாங்கள் இந்துக்களுக்கு எதிரானவர்கள் அல்ல. தமிழகத்தில் 69% இடஒதுக்கீட்டுக்கு வழிவகுத்து அதில் இந்துக்களுக்கு 65.5% இடஒதுக்கீடு கொடுத்தது தி.மு.க.தான். இதனால், ஒவ்வொரு குடும்பத்திலும் வேலைவாய்ப்பு கிடைத்தது. டாக்டர்கள்-இன்ஜினியர்கள் உருவாகினார்கள். ஆனால், மத்தியில் ஆளும் பா.ஜ.க.வோ, ஓ.பி.சி. எனப்படும் பிற்படுத்தப்பட்ட- மிக பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 27 சதவீதம் இடஒதுக்கீட்டை வழங்காமல் இந்துக்களுக்கு துரோகம் செய்துவருகிறது'' என்று தி.மு.க.வினர் பதிலடி கொடுக்கின்றனர்.

 

dmk

 

அத்துடன், தி.மு.க. எதிர்ப்புணர்வு அதிகம் கொண்ட பிராமண சமுதாயத்தினரை அரவணைக்கும் விதமாக, "ஒன்றிணைவோம் வா' திட்டத்தின் மூலம் பல்வேறு உதவிகளை தி.மு.க.வினர் செய்துள்ளனர். குறிப்பாக, திருச்சியில் தி.மு.க. முன்னாள் அமைச்சரும் முதன்மை செயலாளருமான கே.என்.நேரு, ஸ்ரீரங்கம் கோவிலில் பணிபுரியும் ஆயிரம் பிராமணர்களின் குடும்பங்களுக்கு மளிகை மற்றும் அத்தியாவசியப் பொருட்களை வழங்கி இருக்கிறார். இதேபோல், திருவள்ளூர் மாவட்ட தி.மு.க. மருத்துவர் அணி அமைப்பாளரான டாக்டர் வி.சி.ஆர்.குமரன், திருவள்ளூரில் அமைந்துள்ள ஸ்ரீவீரராகவர் பெருமாள் கோவிலில் பணிபுரியும் இருநூறுக்கும் மேற்பட்ட பிராமணர்களின் குடும்பங்களுக்கு நிதி மற்றும் நிவாரண உதவிகளை வழங்கியுள்ளார்.

 

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, பிராமணர்களை எந்த கட்சியினரும் சரிவர கண்டு கொள்ளவில்லை என்ற வெற்றிடத்தை நிரப்பும் தி.மு.க.வின் இந்த செயல்பாடுகளும், அந்த சமுதாயத்தினரிடம் ஓரளவுக்கு எடுபடத்தான் செய்திருக்கிறது.

 

 

Next Story

முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற திண்டுக்கல் தொகுதி வேட்பாளர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Chief Minister Stalin congratulates Dindigul candidate Sachithanantham

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் சிபிஎம். கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் சச்சிதானந்தத்தை திமுக மாநில துணைப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகிய இருவருடன் மாவட்டச் செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி செந்தில் குமார் ஆகியோரும் சென்னைக்கு நேரில் அழைத்து சென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற வைத்தனர்.

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறப் போகிறீர்கள் என்ற செய்தி கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன் எனக் கூறியதோடு எவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவீர்கள் எனக் கேட்டபோது சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியசாத்தில் வெற்றி பெறுவேன் எனக்கூறினார். அப்போது உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, இல்லை 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சிபிஎம் வேட்பாளர் வெற்றி பெறுவார் எனக் கூறினார்.   

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் ஐ.பெரியசாமியை பார்த்து நீங்கள் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என கூறுகிறீர்களா? எனக் கேட்டவுடன் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், உங்களின் வழிகாட்டுதலின் படி திண்டுக்கல் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தோம். தமிழக அரசின் நலத்திட்டங்களை பாராட்டி திண்டுக்கல் தொகுதியில் உள்ள வாக்காளர்கள் திமுக தலைமையிலான கூட்டணிக்கு அமோகமான வாக்குகளை அளித்துள்ளனர் என்றார். இந்த சந்திப்பின் போது  அமைச்சர் துரைமுருகன், அமைச்சர்  ஐ.பெரியசாமி,  அமைச்சர் சக்கரபாணி,  எம்.எல்.ஏ., ஐ.பி.செ ந்தில்குமார், ஆத்தூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கள்ளிப்பட்டி மணி, சிபிஎம்.வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் உடன் இருந்தனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தது குறித்து திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி சச்சிதானந்தம் கூறுகையில், “திமுக சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றிகளை தெரிந்து கொள்ள எவ்வளவு ஆர்வம் காட்டினாரோ அந்த அளவிற்கு கூட்டணி கட்சி சார்பாக (சிபிஎம்) போட்டியிட்ட எனது வெற்றி குறித்தும் தமிழக முதல்வர் ஆர்வமுடன் கேட்டதும், தொடர்ந்து மக்கள் பணியை சிறப்பாக செய்யுங்கள் என வாழ்த்தியதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நேரத்தில் எனது வெற்றிக்கு அயராது உழைத்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும், அமைச்சர் சக்கரபாணிக்கும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஐ.பி. செந்தில்குமாருக்கும் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் என்றும் நான் உறுதுணையாக இருப்பேன்” என்று கூறினார்

Next Story

'வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உத்தரவாதம்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns


18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் களைகட்டி வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும்.

அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்குக் கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார். பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது.

பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்துள்ளனர். சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns

இந்நிலையில் பிரதமர் மோடியின் பேச்சுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 'பிரதமர் மோடியின் நச்சு பேச்சு கேவலமானது, மிகவும் வருந்தத்தக்கது. மக்களின் கோபத்திற்கு அஞ்சி மத உணர்வுகளைத் தூண்டி வெறுப்பு பேச்சை நாடி உள்ளார் பிரதமர் மோடி. பிரதமரின் அப்பட்டமான வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடுநிலைமையைக் கைவிட்டு விட்டது. வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உண்மையான உத்தரவாதம்' என  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.