Skip to main content

கடைசி கேள்வி, சந்திப்பு, கையெழுத்து - ராஜீவ்காந்தி மரண நொடிகள்

Published on 21/05/2018 | Edited on 22/05/2018

ராஜீவ்காந்தியின் 27-ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று நாடுமுழுவதும் அனுசரிக்கப்பட்டுவருகிது. அவர் உயிரிழப்பதற்கு முன் அவருடைய கடைசி கூட்டம், கடைசி சந்திப்பு, கடைசி கேள்வி, கடைசி கையெழுத்து என அவருடைய அந்த இறுதி நிகழ்வுகள் நமது நக்கீரனில் அன்று பிரசுரமானது. அது தற்போது மீண்டும் உங்களுக்காக,
 

rajeev

 


கடைசி கூட்டம்!

 

ஸ்ரீபெரும்புதூர் செல்லும் வழியில் பூந்தமல்லியில் அமைக்கப்பட்டிருந்த தேர்தல் பிரச்சார மேடையில் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரசேகரையும், பூந்தமல்லி காங்கிரஸ் வேட்பாளர் சுதர்சனத்தையும் ஆதரித்து பேசினார் ராஜீவ். 

 

அப்போது நேரம் இரவு ஒன்பதரை மணி, கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்த ''மைக்'' சரிவர வேலை செய்யாததால்  மைக் இல்லாமலே சில நிமிடங்கள் பேசினார். ரஜீவ்காந்தி பேசிய கடைசி பொதுக்கூட்டம் இதுதான்.

 

கடைசி கேள்வி!

 

வழக்கமாக சென்னை வரும்போதெல்லாம் நிருபர் கூட்டத்திற்கு அதிக நேரம் செலவிடமாட்டார் ராஜீவ்.. ஆனால் விசாகப்பட்டணத்திலிருந்து சென்னை வந்து சேர்ந்தவுடன், விமான நிலையத்தில் சுமார் பதினைந்து நிமிடங்கள் நிருபர்களுடன் சிரித்துப் பேசியபடி கலகலப்பாக பேட்டியளித்தார். பேட்டி முடிந்தவுடன் '' அவ்வளவுதானா..? கேள்விகள் அதற்குள் தீர்ந்துவிட்டதா..?'' என்று கேட்ட ராஜீவ் ''யாராவது கடைசியாக ஒரு கேள்வி கேளுங்கள்...'' என்றார்.

 

''தமிழ்நாட்டில் உங்கள் கூட்டணி ஆட்சியைப் பிடித்தால்  காங்கிரஸ், மந்திரி சபையில் பங்கேற்குமா...?'' என்று அந்தக் கடைசி கேள்வியை கேட்டார் ஒரு நிருபர்.

 

''இந்த யோசனையெல்லாம் உங்களுக்கு எங்கிருந்து கிடைக்கிறது'' என்று சிரித்தபடி கேட்ட ராஜீவ் . தமிழ்நாட்டில் அதிமுகவே தனியாக அமைச்சரவை அமைக்கும் என்றார். ஆனால் ராஜீவின் வாழ்க்கையிலேயே அதுதான் கடைசி கேள்வி என்பது யாருக்கும் தெரியவில்லை...

 

rajeev

 

 

கடைசி சந்திப்பு!

 

மரணம் நிச்சயிக்கப்பட்டது தெரிந்துதானோ என்னவோ, கடைசி நேரத்தில் தன் முன்னோர்களை சிலை வடிவில் சந்தித்தார்.

 

சென்னை விமான நிலையத்திலிருந்து ஸ்ரீபெரும்புதூர் செல்லும் வழியில் கத்திப்பாரா சந்திப்பில் காரை நிறுத்தி அங்கிருந்த பிரமாண்டமான நேரு சிலையை பார்த்துவிட்டு கிளம்பினார்.

 

அதேபோல் ஸ்ரீபெரும்புதூர் கூட்ட மேடைக்கு செல்லும் முன் இந்திராகாந்தி சிலைக்கு மாலை அணிவித்தார் அவர்.

 

 

கடைசி கையெழுத்து!

 

ராஜீவ் விமான நிலையத்தில் இருந்து சென்னையில் இறங்கியதும் அவரை பார்க்க அனுமதிக்கப்பட்டிருந்த ஒரே நடிகை, சமீபத்தில் (1991-ஆம் ஆண்டு காலகட்டத்தில்) காங்கிரஸில் சேர்ந்த ஜெயசித்ரா.

 

ராஜீவை சந்தித்த ஜெயசித்ரா அவர் கொண்டுவந்த ரோஜா மலர்களை கொடுத்து பொன்னாடை போர்த்தியிருக்கிறார். மேலும் தஞ்சாவூர் தட்டும் கொடுத்து தேர்தலில் வெற்றி பெற வாழ்த்துக்களும் தெரிவித்திருக்கிறார்.

 

 

ராஜீவ் மிகவும் சந்தோஷமாக இருப்பதை பார்த்ததும் அவரது ''புதிய ராகம்'' படத்திற்கான வாழ்த்து அட்டையில் கையெழுத்து போட்டு தர கேட்டிருக்கிறார். ''படம் இன்னும் ரிலீஸ் ஆகாமல் இருப்பதால் ஒன்றும் பிரச்னை இல்லையே'' என்று கேட்டிருக்கிறார். படம் ஜூன் 15-ல் ரிலீஸ் ஆகிறது, நீங்கள் கையெழுத்து போடுங்கள் என்று கேட்டதும் சந்தோசமாக கையெழுத்து போட்டுக்கொடுத்தார். அதுதான் அவர் போடப்போகும் கடைசி கையெழுத்து என்பது தெரியாமல்...

 

ராஜீவ் அதே சந்தோஷத்தோடு வேறு என்ன விஷயம் என்று கேட்க ''நேரம் இருக்கும் போது  இதைக் கேட்டுப்பாருங்கள்'' என்று புதிய ஆடியோ கேசட்டும் கொடுத்திருக்கிறார்.

வாங்கிய கேசட்டை போட்டு கேட்க முடியமால் அவரது வாழ்கை முடிந்து போனது. 

Next Story

“தேர்தலை புறக்கணியுங்கள்..” - மக்களுக்கு பகிரங்க மிரட்டல்; கேரளாவில் பரபரப்பு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
 threat to public to boycott election in Wayanad

நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்.19 ஆம் தேதி தொடங்கி, வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. அதில் பதிவாகும் வாக்கு எண்ணிக்கையானது ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இதனிடையே, முதற்கட்டமாக தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த ஏப்.19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

அதே வேளையில், மொத்தம் 20 மக்களவைத் தொகுதிகள் கொண்ட கேரளா மாநிலத்தில், இரண்டாம் கட்டமாக வருகிற ஏப்ரல் 26ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற இருக்கிறது. இங்கு நடைபெறும் தேர்தலை எதிர்கொள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ், பா.ஜ.க ஆகிய கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதற்கான தேர்தல் பிரச்சாரம்  இன்று (24-04-24) மாலையுடன் நிறைவு பெறுகிறது.

இந்த நிலையில் இன்று காலை வயநாடு நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கம்பமலை கிராமத்திற்கு வந்த ஆயுதம் ஏந்திய மாவோயிஸ்டுகள் 4 பேர் பொதுமக்களிடையே தேர்தலை புறக்கணியுங்கள் என்று எச்சரித்துள்ளனர். மேலும் அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பி அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளனர். இதனை அங்கிருந்த ஒருவர் வீடியோவாக பதிவு செய்து வெளியிட்டுள்ளார்.

வயநாடு தொகுதியில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும் இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் ஆனி ராஜவும் போட்டியிடுகின்றனர். இந்த நிலையில் மாவோயிஸ்டுகள் பகிரங்கமாக மிரட்டல் விடுத்துள்ளது கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

வெறுப்பு பிரச்சாரம்; மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டி போராட்டம் (படங்கள்)

Published on 24/04/2024 | Edited on 24/04/2024

 

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது.." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது. பிரதமர் மோடியின் இந்த பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சியினர் கூறிவருகின்றனர்.

இந்த நிலையில், தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி, வெறுப்பு பிரச்சாரம் செய்துவரும்  பிரதமர் மோடி மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவும், வழக்கு பதிவு செய்திடவும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் மத்திய சென்னை மாவட்டம் சார்பில், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று காலை கண்டனம் முழக்கப் போராட்டம் நடைபெற்றது. பிறகு நுங்கம்பாக்கம் காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க, பேரணியாக சென்றனர்.