Skip to main content

"வா அதற்காக விழா எடுப்போம்" சென்னை தினம்...உணர்வுகளின் வெளிப்பாடு...

Published on 22/08/2022 | Edited on 22/08/2022

 

chennai

 

சென்னை... இது வெறும் ஊரின் பெயர் அல்ல. தமிழக மக்களின் அடையாளம். எப்பொழுதும் தமிழ் மக்களின் கருத்து, "சென்னைக்குப் போனால் பொழச்சிக்கலாம்பா" என்பதே. எந்த ஒரு மனிதனும் முதலில் சென்னைக்கு வரும்போது முதலில் சென்னை அவனை பயமுறுத்தும். அதன் பின் பிரமிக்க வைக்கும். பின்னர் தன்னுடன் பழகவிடும். கடைசியில் தன்னுடன் அரவணைத்துக் கொள்ளும். வந்தாரை வாழ வைக்கும் சென்னை நம் எல்லோரையும் வாழ வைக்கிறது.

 

இன்றுடன் சென்னை தினம் பிறந்து 383 ஆண்டு ஆகிறது. வருடத்தில் ஒரு நாள் ஒதுக்கி சென்னையின் பெருமையை பேசி விட முடியுமா.... பருவம் அடைந்த பெண்ணைப்போல நாளுக்கு நாள் மெறுகேறி பார்ப்போரை எல்லாம் தன்னகத்தே காதல் கொள்ளவைக்கும் திறன் சென்னைக்கு உண்டு. நாள் தோறும் பேசினாலும் தீர்ந்து விடாத, பேசி பேசி சலிக்காத வரலாறை சென்னை தன்னுடன் கொண்டுள்ளது. இந்தியாவின் வளர்ந்த நகரங்களை எல்லாம் ஒப்பிட்டால் சென்னையின் வளர்ச்சி அபரிமிதமானது. தமிழகத்தின் ஒட்டு மொத்த வளர்ச்சியும் சென்னை என்ற ஒற்றை நகரைக் கொண்டு கணிக்கலாம்.  எந்த ஒரு விஷயத்துக்கும் நேர்மறை எதிர்மறை என இரண்டும் இருக்கும். நேர்மறை ஒரு படி அதிகம் இருந்தால் அதுவே போதும்.அந்த வகையில் சென்னை நேர்மறையாக பல படிகள் மேலே இருக்கின்றது. 

 

சென்னையின் வரலாற்றைத் தாண்டி அது தற்போது கொண்டிருக்கும் அழகியலையும் சென்னையின் தாக்கம் கிராமங்களில் என்ன என்பன போன்ற சில விஷயங்களை மேலோட்டமாக தூசு தட்டினால் இந்த கட்டுரை கிடைத்தது. 

 

சென்னையின் ஒவ்வொரு பகுதிக்கும் தனிச்சிறப்பு, பழைய வரலாறு உள்ளது. இன்றும் திராவிட மாநிலங்கள் என கூறப்படும் கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா என பல்வேறு மாநில மக்களும் நம்மை நம்பி சென்னையை நம்பி வந்து வாழ்கின்றனர். பல்வேறு கலாச்சாரங்கள், பல்வேறு மொழிகள் பல ஊர்களின் மக்கள் என சென்னைக்கு பல்வேறு முகங்கள் உண்டு. உலகின் மிகத் தொன்மையான மாநகராட்சி சென்னை.

 

பெண்களுக்கு சுதந்திரமான சிறைகளை கொண்டது கிராமங்கள். சென்னைக்கு படிப்பிற்காகவோ, பணிக்காகவோ பயணிக்கும் கிராமத்து பெண்களுக்கு ஆகப்பெரிய  விடுதலை உணர்வு தானாகவே சென்னையில் கிடைக்கும்.  கிராமத்தில் இருந்து தன் சமூகப் பெருமையை கொண்டு வருபருக்கும் சரி,  தன் சமூகத்தின் பெயரை வெளியில் கூற விரும்பாதவர்க்கும் சரி, பணக்காரர் ஆனாலும் சரி ஏழையானாலும் சரி எந்த மொழியானாலும் சரி  அனைவருக்கும் ஒரே மரியாதையையும் ஒரே விதமான வரவேற்பையும் அளிக்கும் ஊர் இது  

 

கிராமங்களில் இருந்து சென்னைக்கு செல்ல ஒரு பேருந்து கிடைத்தால் போதும். சென்னையில் இருந்து நாம் செல்ல வேண்டிய பகுதிக்கு இங்கிருக்கும் ஆட்டோ நண்பர்கள் சென்று சேர்த்துவிடுவர். "என்ன தல எங்க போகணும்" என எப்போதும் அனைவரையும் வரவேற்க தயாராகவே சென்னை எப்போதும் இருக்கும்.

 

சென்னைக்கு மற்றுமொரு சிறப்பு. உணவு. மாதம் எவ்வளவு ரூபாய் சம்பளமாக வாங்கினாலும் சரி அதற்கேற்றார் போல் மூன்று வேலையும் சாப்பிடும் வகையில் உணவகங்கள் வீதிக்கு வீதி இருக்கும். நம் பொருளாதார தரத்திற்கு ஏற்ற உணவகங்களில் இருந்து துணிக்கடைகள் வரை அத்தனையும் கிடைக்கும்

 

இயற்கை எப்படி அடித்தாலும் இந்த சென்னை தாங்கும். மழை, வெயில், புயல், வெள்ளம் என எந்த தட்ப வெப்ப நிலையாகிலும் தன்னை தகவமைத்துக் கொள்ளும் தன்மை இதற்குண்டு. உலகையே ஆட்டிப்படைத்த கொரோனா பெருந்தொற்றையும் சென்னை சமாளித்து மீண்டு எழுந்து வந்திருக்கிறது. இவையனைத்தையும் ஒரு சேரப் பார்க்கும் ஒரே ஊர் சென்னை. ஒரு பக்கம் கானா பாடல்கள் நம்மை நடனம் ஆட வைத்தால்  மறுபக்கம் சங்கீத சபாக்கள் மெல்லிசையை உணர வைக்கும். சென்னையின் ஒவ்வொரு விடியலும் புதுவிதமான உணர்வை தொடர்ந்து தந்து கொண்டிருக்கிறது. 

 

இங்கிருக்கும் எல்லாம் மக்களும் ஒரு தாயின் பிள்ளைகளாக சென்னையின் பிள்ளைகளாக இருப்பதால் 383-ம் சென்னை தினம் என்ன? 500, 1000 சென்னை தினங்கள் கொண்டாடினாலும் இந்த ஊர் அப்போதும் அரவணைத்துக் கொள்ளும் மாபெரும் சக்தியாக வளர்ந்து கொண்டே தான் இருக்கும்...

 

 

Next Story

ஷர்மிளாவின் உடல் பிரவீனின் பெற்றோரிடம் ஒப்படைப்பு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Sharmila handed over to Praveen parent

சென்னை பள்ளிக்கரணை பகுதியைச் சேர்ந்தவர் பிரவீன். இவர் ஜல்லடையான் பேட்டையைச் சேர்ந்த ஷர்மிளா (வயது 22) என்ற பெண்ணைக் கடந்த சில வருடங்களாக பிரவீன் காதலித்து வந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பிரவீன் - சர்மிளா இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுடைய காதலுக்கு இரு வீட்டார் தரப்பிலும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில், எதிர்ப்பையும் மீறி இந்தத் திருமணமானது நடைபெற்றது. இந்தக் காதல் திருமணத்தை தொடர்ந்து அதே பகுதியில் இவர்கள் இருவரும் வசித்து வந்தனர்.

இத்தகைய சூழலில் கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி ஷர்மிளாவின் சகோதரன் தினேஷ் மற்றும் நண்பர்கள் சேர்ந்து இரவு அந்தப் பகுதியில் இளைஞர் பிரவீன் அமர்ந்திருந்தபோது அவரை சரமாரியாக பயங்கர ஆயுதங்களைக் கொண்டு தாக்கினர். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட இளைஞர் பிரவீன் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். போலீசார் விசாரணையில் நடந்தது ஆணவக் கொலை என்பது உறுதியானது. கொலையில் ஈடுபட்ட பெண்ணின் சகோதரர் தினேஷ் உட்பட நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். இந்தச் சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இதனையடுத்து காதல் கணவன் கொலை செய்யப்பட்டதால், ஷர்மிளா மன உளைச்சலில் இருந்த நிலையில் தற்கொலைக்கு முயன்றுள்ளார். உடனடியாக மீட்கப்பட்டு ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் 9 நாட்களாக கோமா நிலையில் சிகிச்சை பெற்றுவந்த ஷர்மிளா, சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் நள்ளிரவு (22.04.2024) உயிரிழந்தார். மேலும் தன்னுடைய காதல் கணவன் கொல்லப்பட்டது குறித்தும், தன்னுடைய தற்கொலை முடிவு குறித்தும் ஷர்மிளா கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளார். அதில், 'அவன் இல்லாத லைஃப் எனக்கு வேண்டாம். நானும் அவன் கூடவே போறேன்' என உருக்கமாக எழுதியதோடு கொலைக்கு காரணமான தனது பெற்றோர் மற்றும் சகோதரர்களின் பெயர்களையும் ஷர்மிளா குறிப்பிட்டிருந்தார்.

அதனைத் தொடர்ந்து தற்கொலை செய்து கொண்ட ஷர்மிளா மரணம் தொடர்பாக கோட்டாட்சியர் (RDO - ஆர்.டி.ஓ.) விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. ஷர்மிளாவின் உடல் உடற்கூராய்வு செய்யப்படும் போது வீடியோ பதிவு செய்யப்படும் எனவும் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் சென்னை அரசு ராஜீவ்காந்தி மருத்துவமனையில் இன்று (25.04.2024) வருவாய் கோட்டாட்சியர் இப்ராஹிம் நேரில் விசாரணை மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து ஷர்மிளா உடலுக்கு ராஜீவ்காந்தி மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை நடைபெற்று நிறைவடைந்த நிலையில் ஷர்மிளாவின் உடல் பிரவீனின் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. 

Next Story

ஆஜரான மாவட்ட ஆட்சியர்கள்; விசாரணை இடத்தை மாற்றிய அமலாக்கத்துறை!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Collectors present ed changed the place of investigation

தமிழகத்தில் உள்ள மணல் குவாரிகளில் அரசு நிர்ணயித்த அளவை விட கூடுதலாக மணல் அள்ளி விற்பனை செய்வதாகவும், மணல் ஒப்பந்த குவாரிகள் மூலம் வரும் வருமானத்தை சட்ட விரோதமாக பணப்பரிமாற்றம் செய்வதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக திருச்சி, தஞ்சாவூர், கரூர், அரியலூர் மற்றும் வேலூர் ஆகிய 5 மாவட்ட ஆட்சியர்களுக்கு மணல் குவாரிகளுக்கு வழங்கப்பட்ட உரிமங்கள் தொடர்பான ஆவணங்களுடன் நேரில் அமலாக்கத்துறை முன்பு ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.

இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பிலும், மாவட்ட ஆட்சியர்கள் சார்பிலும் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்த வழக்கு கடந்த 2 ஆம் தேதி (02.04.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் வாதிடுகையில், “நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நடவடிக்கை பாதிக்கும் என்பதால் மாவட்ட ஆட்சியர்கள் ஆஜராக கால அவகாசம் வழங்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டது. இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், “அமலாக்கத்துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தால் கண்டிப்பாக ஆஜராக வேண்டும். மணல் கொள்ளை வழக்கில் அமலாக்கத்துறை முன்பு மாவட்ட ஆட்சியர்கள் ஏப்ரல் 25 ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும். மாவட்ட ஆட்சியர்கள் ஆஜராக வழங்கப்பட்ட சம்மனுக்கு தடை எதுவும் வழங்க முடியாது” எனத் தெரிவித்திருந்தனர். மேலும் இந்த வழக்கு விசாரணையை மே 6 ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்திருந்தனர்.

இந்நிலையில் மணல் முறைகேடு வழக்கு தொடர்பாக சென்னை நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவனில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் வேலூர் ஆட்சியர் சுப்புலட்சுமி, அரியலூர் ஆட்சியர் ஆனி மேரி ஸ்வர்ணா, கரூர் ஆட்சியர் தங்கவேல், திருச்சி ஆட்சியர் பிரதீப்குமார் மற்றும் தஞ்சை ஆட்சியர் தீபக் ஜேக்கப் ஆகியோர் இன்று (25.04.2024) காலை 10.30 மணியளவில் விசாரணைக்கு ஆஜராகினர். அப்போது மாவட்ட ஆட்சியர்களிடம் நுங்கம்பாக்கத்தில் மற்றொரு இடத்தில் உள்ள மண்டல கிளை அலுவலகத்திற்கு செல்லுமாறு அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். முன்னதாக மணல் குவாரி ஒப்பந்ததாரர்கள் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி இருந்ததும், இந்த முறைகேட்டில் மாவட்ட ஆட்சியர்களுக்கும் தொடர்பு உள்ளது என அமலாக்கத்துறை குற்றம் சாட்டி இருந்ததும் குறிப்பிடத்தக்கது.