ராஜபக்சே மனைவியிடம் 4 மணிநேரம் விசாரணை!
இலங்கையின் முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் 2-வது மகன் யோசிதாவின், நெருங்கிய நண்பராக இருந்தவர் வாசிம் தாஜுதீன். இவர், கடந்த 17-5-2012 அன்று தனது காரில் பிணமாக கிடந்தார். அது ஒரு கொலை என்று குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றத்தில் தெரிவித்த நிலையில், தாஜுதீனின் உடலைத் தோண்டியெடுத்து பரிசோதனைகளை மேற்கொள்ள நீதிமன்றம் அனுமதி அளித்திருந்தது.
யோசிதாவுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக ராஜபக்சேவின் பாதுகாவலர்களே தாஜுதீனை கடத்திச் சென்று கொலை செய்ததாக கூறப்பட்டது. இதைத்தொடர்ந்து இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதையடுத்து, தெகிவளை முஸ்லிம் பள்ளிவாசல் மையவாடியில் அடக்கம் செய்யப்பட்டிருந்த தாஜுதீனின் புதைகுழி சட்டமருத்துவ அதிகாரி, நீதிபதி ஆகியோரின் முன்னிலையில் தோண்டி எடுக்கப்பட்டது. புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட எலும்புக்கூட்டின் எச்சங்கள், சட்ட மருத்துவ பரிசோதனைகளுக்காக கொண்டு செல்லப்பட்டன. நேற்று தோண்டி எடுக்கப்பட்டது.
ராஜபக்சேவின் குடும்பத்தாருடன் மிகவும் நெருக்கம் பாராட்டிவந்த தாஜூதீன் மரணத்துக்கு காரணமான விபத்துக்குள்ளாக்கிய வாகனம், ராஜபக்சேவின் மனைவி ஷிராந்தி நடத்திவரும் அறக்கட்டளைக்கு சொந்தமானது என செய்திகள் வெளியாகின. இதையடுத்து தாஜுதீன் படுகொலை தொடர்பாக நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு முன்னாள் அதிபர் ராஜபக்சே மனைவி ஷிராந்தியிடம் போலீசார் சம்மன் அனுப்பி இருந்தனர். இதற்கு சற்று கால அவகாசம் கேட்டிருந்த ஷிராந்தி ராகபக்சே இன்று போலீசார் முன்னிலையில் ஆஜரானார், அவரிடம் சுமார் 4 மணிநேரம் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது.