Skip to main content

‘சிறைக்குள் நடப்பதை மீடியாக்களிடம் சொன்னால் நடவடிக்கை பாயும்!’- ஏ.டி.ஜி.பி. அலுவலகத்திலிருந்து சுற்றறிக்கை!

Published on 21/11/2019 | Edited on 21/11/2019

“ரொம்ப கஷ்டம்தான்.. இனி மீடியா நண்பர்கள்கிட்ட பேசுறது கொஞ்சம் ரிஸ்க்தான்.” என்று சலித்துக்கொண்டார் அந்த சிறைத்துறை சோர்ஸ். “விஷயத்தைச் சொல்லுங்க..” என்று நாம் கேட்பதும், அவர் தயங்குவதும் வழக்கமாக நடப்பதுதான். ஆனால், இந்த தடவை தன் உதடுகளின் மீது விரல் வைத்து   ‘நான் பேசவே கூடாது‘என்பதை ’சிம்பாலிக்’ஆகச் சொன்னார். 
 

அவர் பேச மறுத்ததற்கான காரணம் இதுதான்- 
 

கடந்த 11-ஆம் தேதி சிறைத்துறை தலைமை அலுவலகத்தில் சிறைத்துறை துணைத்தலைவர்கள், சிறை கண்காணிப்பாளர்களின் மாதாந்திர கூட்டம் சிறைத்துறை ஏ.டி.ஜி.பி. ஆபாஷ்குமார் முன்னிலையில் நடந்தது. அந்த நிகழ்ச்சி பதிவை இணைத்து, அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளவைகள் தொடர்பாக நடவடிக்கை மேற்கொண்டு உரிய அறிக்கையை வரும் 25- ஆம் தேதிக்குள் சமர்ப்பித்திட வேண்டுமென, கூடுதல் காவல்துறை இயக்குநர் அலுவலகத்திலிருந்து, அனைத்து சரக சிறைத்துறை துணைத் தலைவர்கள், தலைமை நன்னடத்தை கண்காணிப்பாளர் மற்றும் சிறை கண்காணிப்பாளர்களுக்கு 20-ஆம் தேதி சுற்றறிக்கை அனுப்பப்பட்டது.

tamilnadu central jails adgp circular issued


சுட்டிக்காட்டப்பட்ட அந்த 37 கருத்துக்களில் இரண்டாவதாக இடம்பெற்றுள்ள ‘வேலூர் சிறைத்துறை எஸ்.பி. உரிய நேரத்தில் அலுவலகம் வரவேண்டும். வழக்கமான வேலைகளில் சரியாக தன்னை ஈடுபடுத்திக் கொள்ளவேண்டும்.’என்று அறிவுறுத்தியிருப்பதெல்லாம் ரெகுலர் சமாச்சாரம்தான். அந்த 7-வது கருத்துதான் நமது சோர்ஸை சில வினாடிகள் வாயடைக்கச் செய்துவிட்டது. அதில் அப்படியென்ன இருக்கிறது?
 

’சமீப காலமாக, வார்டர்கள் ஊடகங்களுடன் தொடர்பு வைத்துக்கொண்டு, சிறைச்சாலைகள் குறித்த விபரங்களை அளித்துவருவதாக அறியப்படுகிறது. தவறான செய்திகளை ஊடகங்கள் மற்றும் செய்தித்தாள்களுக்கு தருகின்ற வார்டர்கள் யார் என்பதை,  சிறைச்சாலைகள் டி.ஐ.ஜி. மற்றும் சிறைச்சாலை கண்காணிப்பாளர்கள் விசாரித்தறிந்து எச்சரிக்க வேண்டும். அந்த வார்டர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை மெற்கொள்ள வேண்டும்.’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 
 

“இதற்கு என்ன அர்த்தம்?”என்று கேட்டுவிட்டு “சிறையில் என்ன நடந்தாலும் அது வெளியே தெரியக்கூடாது என்றுதானே சொல்ல வருகிறார்கள் மேலதிகாரிகள்..”என பதிலையும் சொன்ன அந்த சோர்ஸ் “எதற்காக நாங்கள் தவறான செய்திகளை ஊடகங்களுக்குத் தரவேண்டும்? சிறைக்குள் நடக்கின்ற தவறுகளைத்தானே உள்ளுக்குள்ளே அடக்கி வைக்க முடியாமல் வெளிப்படுத்துகிறோம். அதுவும்கூட, இதுபோன்ற தவறுகள் சிறையில் நடக்கவே கூடாது  என்ற நல்லெண்ணத்தில்தானே பகிர்கிறோம்.” என்று ஆதங்கப்பட்டார். 

tamilnadu central jails adgp circular issued


மேலும் அவர் “சிறைக்குள் நடக்கின்ற குற்றச்செயல் எதுவும் லீக் ஆகவே கூடாது என்கிறார்களே! அது என்ன ராணுவ ரகசியமா? தேசத்தின் பாதுகாப்பு சம்மந்தப்பட்ட விஷயமா? சில அதிகாரிகள் கைதிகள் சிலருடன் கூட்டு சேர்ந்து சிறைவிதிகளை காற்றில் பறக்க விடுகிறார்கள். கஞ்சா, செல்போன், போதைப்பொருட்கள், கத்தி போன்ற ஆயுதங்களெல்லாம் கைதிகளிடம் எப்படி வந்து சேர்கிறது? சோதனை என்ற பெயரில் கைதிகளிடம் பறிமுதல் செய்யப்படும் அத்தனையுமா கணக்கில் காட்டப்படுகிறது? அக்கிரமம் செய்பவர்கள் பலர் இருந்தாலும், நேர்மையுடன் வாழ்பவர்கள் சிலர் இருக்கத்தானே செய்வார்கள்?‘நெஞ்சு பொறுக்குதில்லையே! இந்த நிலைகெட்ட மனிதரை நினைத்துவிட்டால்..’என்கிறார் பாரதி.‘அநீதி கண்டு கோபமும் வெறுப்பும் கொண்டு நீ குமுறி எழுவாயானால் நாம் இருவரும் தோழர்கள்..’எனச் சொல்கிறார் சேகுவேரா. பாரதியையும் சேகுவேராவையும் படித்துவிட்டு சும்மா இருந்துவிட முடியுமா?” என்று நெஞ்சு நிமிர்த்திக் கேட்டபோது,  அந்த சோர்ஸுக்கு ‘சல்யூட்’ வைத்தோம்.



 

சார்ந்த செய்திகள்

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.