உலகம் முழுவதும் கரோனா வைரஸ் பரவி மனித சமூகத்தை அச்சுறுத்தி வருகிறது. லட்சக்கணக்கான மக்கள் இந்நோய்க் காரணமாக பலியாகியுள்ளனர். உலகம் முழுவதும் பல மருந்து ஆராய்ச்சி நிறுவனங்கள் கரோனாவுக்கான தடுப்பு மருந்தைக் கண்டறியும் முயற்சியில் ஈடுப்பட்டுள்ளன.
இந்தியாவில் மராட்டியத்திற்கு அடுத்ததாக தமிழகத்தில் கரோனா தொற்று அதிக அளவு இருந்து வருகிறது. தமிழகத்தில் இதுவரை கரோனா உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 2 லட்சத்தைக் கடந்துள்ளது. 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பலியாகி உள்ளார்கள். இதில் மருத்துவர்களும் நோய்த் தொற்றுக்கு ஆளாகி உயிரிழந்துள்ளனர். இந்திய அளவில் நூற்றுக்கணக்கான மருத்துவர்கள் இந்தத் தொற்று காரணமாக உயிரிழந்துள்ளனர். இந்தியாவிலேயே தமிழகத்தில் மட்டும் அதிக அளவாக இதுவரை 43 பேர் உயிரிழந்துள்ளனர். மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் மருத்துவர்களுக்கு அதிகம் நோய்த் தொற்று ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.