Skip to main content

தீபக் ராஜா கொலை வழக்கு; 6 தனிப்படைகள் அமைப்பு!

Published on 21/05/2024 | Edited on 21/05/2024
6 police Squads set Tirunelveli dt Vagaikulam Deepak Raja incident

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி, வாகைகுளம் பகுதியைச் சேர்ந்தவர் தீபக் ராஜா (வயது 35). இவர் மீது கொலை உட்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. இவர் நேற்று (20.05.2024) மதியம் 02:00 மணியளவில் தான் திருமணம் செய்துகொள்ளும் பெண் மற்றும் அவரது தோழிகளுடன் சேர்ந்து கேடிசி நகர் பகுதியில் உள்ள பிரபல தனியார் ஹோட்டலுக்கு சாப்பிட சென்றுள்ளார். அதன் பின்னர் தனது வாகனத்தை எடுப்பதற்காக வெளியே வந்துள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த 6 பேர் கொண்ட கும்பல் தீபக் ராஜாவை சரமாரியாக வெட்டி படுகொலை செய்தனர். இந்தக் கொலையில் ஈடுபட்ட அனைவரும் முகத்தை மறைத்தபடி துணியைக் கட்டி இருந்தனர்.

இதில் சம்பவ இடத்திலேயே தீபக் ராஜா துடிதுடித்து உயிரிழந்தார். உடனடியாக இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ள நிலையில் பாளையங்கோட்டை காவல்துறையினர் தீபக் ராஜாவின் உடலைக் கைப்பற்றி பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து இந்தக் கொலை சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்தனர். அப்பொழுது கிடைக்கப்பெற்ற சிசிடிவி ஒன்றில் ஆறு பேர் கொண்ட கும்பல் தீபக் ராஜாவை கொடூரமாக வெட்டிக் கொலை செய்யும் அந்தக் காட்சிகள் பதிவாகியுள்ளது. இந்தக் காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. 

6 police Squads set Tirunelveli dt Vagaikulam Deepak Raja incident

இந்நிலையில் இந்தக் கொலை வழக்கை விசாரிக்க திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் தலைமையில் ஆறு தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது. இருப்பினும் போலீசாரின் முழுமையான விசாரணைக்கு பின்னரே இக்கொலை குறித்து தெரியவரும் என்றும் கூறப்படுகிறது. தீபக் ராஜாவுடன் உணவருந்த வந்தவர்கள் உட்பட 3 பேரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இது அரசியல் சார்ந்த கொலையா அல்லது சாதி ரீதியிலான கொலையா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். 

சார்ந்த செய்திகள்