
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் அண்மையில் வெளியான ‘அமரன்’ திரைப்படம் வெற்றிக்கரமாக திரையரங்குகளில் ஓடி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதே வேளையில், இந்திய சமூக ஜனநாயகக் கட்சியினர், காஷ்மீர் மக்களின் விடுதலை எண்ணத்தை பயங்கரவாத நோக்கில் காட்சிப்படுத்துவதாகக் கூறி அமரன் படத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தினர். மேலும் இப்படம் திரையிடப்படும் திரையரங்குகளில் முற்றுகைப் போராட்டம் நடத்த வாய்ப்பிருப்பதாக சென்னையிலுள்ள பல்வேறு திரையரங்குகளில் போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டனர்.
திருநெல்வேலி மாவட்டம், மேலப்பாளையம் பகுதியில் உள்ள திரையரங்கம் ஒன்றில், அமரன் உள்ளிட்ட படங்கள் திரையிடப்பட்டு வருகிறது. அந்த திரையரங்கில், இன்று அதிகாலை இரண்டு மர்ம நபர்கள், மூன்று பெட்ரோல் குண்டுகளை வீசிவிட்டுத் தப்பியோடியுள்ளனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் நெல்லையில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் தொடர்பாக விசாரிக்க நெல்லை மாநகர காவல் ஆணையர் தலைமையில் மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. தமிழக தீவிரவாத தடுப்புப் பிரிவு மற்றும் கியூ பிரிவு போலீசாரும் சம்பவம் நிகழ்ந்த இடத்தில் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.