Skip to main content

நோட்டமிட்ட மர்ம நபர்கள்;  பெண்ணிடம் தாலி செயின் பறிப்பு 

Published on 06/02/2023 | Edited on 06/02/2023

 

namakkal pudansanthai woman incident police investication started  

 

மயக்க ஸ்பிரே அடித்து பெண்ணிடமிருந்து தாலி செயின் பறித்துச் சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

 

நாமக்கல் மாவட்டம் புதன்சந்தை அருகே உள்ள மின்னாம்பள்ளியைச் சேர்ந்தவர் சரவணன் (வயது 46). இவருடைய மனைவி சவுந்தர்யா (வயது 39). இவர்கள் புதன்சந்தை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகில் உள்ள வணிக வளாகத்தில் மளிகை கடை வைத்துள்ளனர். கடந்த 3 ஆம் தேதி கடையில் வழக்கம்போல் வியாபாரத்தை முடித்துவிட்டு இரவு 10.30 மணியளவில் சவுந்தர்யா தனது 6 வயது மகனுடன் இருசக்கர வாகனத்தில் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தார். அப்போது அண்ணா நகர் ரயில்வே பாலம் அருகே சென்றபோது அவரை பின்தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று பேர், திடீரென்று வண்டியை குறுக்கே நிறுத்தி வழிமறித்துள்ளனர்.

 

திடீரென்று மர்ம நபர்கள் சௌந்தர்யாவின் முகத்தில் மயக்க ஸ்பிரே அடித்ததில் அவர் நிலைகுலைந்தார். இந்நிலையில் மர்ம நபர்கள் சவுந்தர்யா  அணிந்திருந்த பத்து பவுன் தாலி செயினை பறித்தனர். அதைத் தடுக்க முயன்றபோது சவுந்தர்யா மற்றும் அவருடைய மகனை தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். சவுந்தர்யாவின் அலறல் சத்தம் கேட்டு அங்கு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர், சவுந்தர்யாவையும் அவரது மகனையும் மீட்டனர். மர்ம நபர்கள் தாக்கியதில் அவர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டது.

 

இதுகுறித்து சவுந்தர்யா சேந்தமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். சவுந்தர்யா, தினமும் இரவு நேரத்தில் மளிகை கடையில் இருந்து வீட்டுக்கு செல்வதை நோட்டமிட்டு வந்த மர்ம நபர்கள், அவரை பின்தொடர்ந்து வந்து வழிப்பறியில் ஈடுபட்டிருப்பது தெரிய வந்தது. சம்பவம் நடந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவாகியுள்ள காட்சிகளையும் ஆய்வு செய்து வருகின்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்