Skip to main content

ஆள் கடத்தல்.. கட்டப் பஞ்சாயத்து.. கொலை வெறி தாக்குதல்.. ஒன்றிய செயலாளர்  கைது

Published on 26/11/2021 | Edited on 26/11/2021

 

Kidnapping case Union Secretary arrested by police

 

ஆள் கடத்தல், கட்டப் பஞ்சாயத்து, கொலை வெறி தாக்குதல் உள்ளிட்ட பிணையில் வெளிவர முடியாத ஆறு பிரிவுகளில் தி.மு.க.வின் ஒ.செ. கைது செய்யப்பட்டிருப்பது முத்து நகர் மாவட்டத்தைத் தட தடக்க வைத்திருக்கிறது.

 

தூத்துக்குடி மாவட்டத்தின் ஒட்டப்பிடாரம் தி.மு.க.வின் வடக்கு ஒ.செ.வான இளையராஜா அந்தப் பஞ்சாயத்தின் தலைவரும் கூட. இந்த இளையராஜா பல நிழல் வேலைகளைத் திரை மறைவில் நடத்தி வந்திருக்கிறார்.


தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி பல் மருத்துவராகப் பணிபுரிகிற முருகப்பெருமாள் மதுரையைச் சேர்ந்தவர். இதே மருத்துவமனையில் பயிற்சி மருத்துவராகப் பணியிலிருக்கும் தூத்துக்குடியைச் சேர்ந்த பெண் மருத்துவரை கடந்த மூன்று மாதமாகக் காதலித்து வந்திருக்கிறார் முருகப்பெருமாள், சில வேளைகளில் தன் காதலி பெண் மருத்துவரின் வீடு வரையும் போய் வந்திருக்கிறார். வீடு வரை வந்த இவர்களின் வெளிப்படையான காதலை காதலியின் தாயாரான, நகரின் கல்லூரி ஒன்றில் பேராசிரியையாகப் பணிபுரிபவருக்குத் தெரிய வந்திருக்கிறது. ஆனாலும், பெண்ணின் தாய்க்கு அவர்களின் காதலில் இஷ்டமில்லாததால் தன் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்திருக்கிறார்.


ஆனால், தாயின் எதிர்ப்பை மீறி அவர்களது காதல் தொடர்ந்துள்ளது. இதற்கு ஃபுல் ஸ்டாப் வைக்க எண்ணிய பேராசிரியை தன்னிடம் பயின்ற முன்னாள் மாணவரும், ஒட்டப்பிடாரம் தி.மு.க.வின் வடக்கு ஒ.செ.வுமான இளையராஜாவிடம் தன் மகளின் காதலைத் தெரிவித்து, பையனை கண்டித்து வைக்கச் சொன்னதுடன் இனி அவள் பக்கம் அவன் திரும்பக் கூடாது என எச்சரிக்கை செய்யுமாறும் கூறியிருக்கிறாராம்.


இதையடுத்து கடந்த 18ம் தேதியன்று மதியம் பயிற்சி முடித்துவிட்டு வந்த டாக்டர் முருகப் பெருமாளை தன் சகாக்களுடன் தனது காரில் கடத்திக் கொண்டு ஒட்டப்பிடாரம் அருகிலுள்ள ஒட்டனூத்திலிருக்கும் தன் தோட்ட வீட்டிற்குக் கொண்டு வந்திருக்கிறார் இளையராஜா. கட்டப் பஞ்சாயத்து, ஊராட்சிக் காண்ட்ராக்ட் தொடர்பான பேரங்கள் பணப் பரிவர்த்தனைகள் மற்றும் நிழல் காரியங்கள் போன்ற வரவு செலவுகளையெல்லாம் இங்கே தான் டீல் பண்ணுவாராம் ஒ.செ. இளையராஜா. 


மருத்துவர் முருகப்பெருமாளை சுற்றி நின்று கொண்டிருந்த இளையராஜாவும், சகாக்களும், ‘காதலை இத்தோட முடிச்சுக்க லேய். பின்னால போன நடக்குறது வேற’ என மிரட்டியவர்கள் கம்பாலும், ரப்பர் பைப்பாலும் அவரை தாக்கியுள்ளனர். அதில் அவருக்கு ரத்தக் காயமாகி வலி தாங்காமல் அலறியிருக்கிறார். உயிர் பயத்தில் நடுங்கிக் கொண்டிருந்த முருகப்பெருமாளை அரிவாளை உயர்த்தி மிரட்டியதும், பதறிப் போன மருத்துவர், ‘இனி அந்தப் பக்கம் திரும்பமாட்டேன்’ எனத் தெரிவித்திருக்கிறார். 

 

அதனைத் தொடர்ந்து, ‘இனி தூத்துக்குடிப் பக்கமே நடமாடக் கூடாது. ஒன்னோட டிரஸ்களை எடுத்துக்கிட்டு மதுரைக்கே ஓடிப் போயிறு’ என மிரட்டியிருக்கிறாராம் இளையராஜா. அதன் பிறகே தன் சகாக்களை மருத்துவருடன் அனுப்பி அவரின் பகுதியில் கொண்டு சென்று விடச் சொல்லியிருக்கிறாராம். விடுதியில் மருத்துவரை இறக்கி விட்ட சகாக்கள் உடனடியாக அவரது உடைமைகளைப் பேக்கப் செய்து எடுத்து வர மிரட்ட, மருத்துவரும் அதன்படி தன்னுடைய லக்கேஜூடன் வர பின்னர் அவரை அப்படியே கொண்டு சென்ற அவர்கள், மதுரை செல்லும் பேருந்தில் ஏற்றி அனுப்பியதோடு, பல கிலோ மீட்டர் தொலைவு பேருந்தை ஃபாலோ செய்திருக்கின்றனர்.


உடலில் காயங்களுடன் மதுரை வந்த முருகப்பெருமாள், வீட்டில் பெற்றோர்களிடம் எதையும் சொல்லாமல், தன் உயிர் நண்பனிடம் நடந்தவைகளைச் சொல்லி வேதனைப் பட்டிருக்கிறார். அதிர்ந்து போன நண்பர் கொடுத்த தைரியத்தில், அவருடன் தூத்துக்குடி திரும்பிய முருகப்பெருமாள் அரசு மருத்துவக் கல்லூரியில் சிகிச்சைக்காக அட்மிட் ஆகியிருக்கிறார். சிகிச்சையின் பொருட்டு வந்த மருத்துவ அதிகாரியிடம் தனக்கு ஏற்பட்டவைகளைத் தெரிவித்திருக்கிறார். அதன் பின் தொடர்புடைய தென்பாகம் காவல் நிலையத்திற்குத் தகவல் போக, மருத்துவமனையிலிருந்த மருத்துவர் முருகப் பெருமாளிடம் விசாரணை நடத்திய போலீசார் விஷயத்தை மாவட்ட எஸ்.பி.யிடம் தெரிவிக்க, அதன் பின் காவல் நடவடிக்கைகள் வேகமெடுத்துள்ளன. ஒ.செ. இளையராஜாவும் அவரது சகாவான வானவராயன் இருவரையும் கைது செய்திருக்கிறார்கள்.


இது குறித்து நாம் மாவட்ட எஸ்.பியான ஜெயக்குமாரிடம் பேசிய போது, “ஆள் கடத்தல், மிரட்டல், ஆயுதம் கொண்டு தாக்கிய என 324, 506 (2) உள்ளிட்ட ஆறு பிரிவுகளில் இளையராஜா, அவருடன் இரண்டு பேர்கள் என்று வழக்குப் பதிவு செய்யப்பட்டு இளையராஜா உட்பட இரண்டு பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். தலைமறைவான அவரது டிரைவர் கோபால் தேடப்படுகிறார். இது தவிர, இளையராஜா மீது ஆறு பழைய வழக்குகளிருக்கின்றன. அவர்மீதான நில அபகரிப்புப் புகார் கலெக்டர் வசமிருக்கிறது” என்றார்.


சட்டம் தன் கடமையைச் செய்கிறது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு; அதிகாரிகளுக்கு நீதிமன்றம் கெடு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
The court is bad for the authorities for Tuticorin firing

தூத்துக்குடியில் கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில், 22-5-2018 அன்று ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை நிரந்தரமாக மூடக்கோரி போராட்டம் நடைபெற்றது. அப்போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஏற்பட்ட உயிரிழப்புகள், காயங்கள் குறித்தும், பொது மற்றும் தனியார் சொத்துகளுக்கு ஏற்பட்ட சேதங்கள் குறித்தும் விசாரிப்பதற்காக சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.

இந்த ஆணையம் 18-5-2022 அன்று அளித்த அறிக்கையின்மீது, தமிழக அமைச்சரவையில் விவாதிக்கப்பட்டு பல்வேறு நடவடிக்கைகள் தமிழ்நாடு அரசால் மேற்கொள்ளப்பட்டன. மேலும் நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் அளித்த அறிக்கையின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விபரங்கள் தமிழக அரசால் வெளியிடப்பட்டது. இதற்கிடையே தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக தாமாக முன்வந்து எடுத்து விசாரித்த வழக்கு, தேசிய மனித உரிமைகள் ஆணையத்தால் முடித்து வைக்கப்பட்டதை எதிர்த்து மனித உரிமை ஆர்வலர் ஹென்றி திபேன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இதனையடுத்து, இந்த வழக்கு கடந்த மார்ச் 23 விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில், “இது குறித்த அறிக்கை தயாராகிவிட்டதால் அடுத்த விசாரணையின் போது சமர்ப்பிக்கப்படும்” எனப் பதில் அளிக்கப்பட்டது. இதனையடுத்து தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக அதிகாரிகளுக்கு எதிராக எடுக்கப்பட்ட துறை ரீதியான நடவடிக்கை குறித்த விவரங்களை மனுதாரருக்கு அறிக்கையாக தர தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் வழக்கு விசாரணையை ஏப்ரல் 25 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது. 

இந்த நிலையில், நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர் மற்றும் என்.செந்தில்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் கூறியதாவது, ‘வழக்கில் எதிர் மனுதாரர்களாகச் சேர்க்கப்பட்ட சில அதிகாரிகளுக்கு நீதிமன்ற நோட்டீஸ் சென்றடையவில்லை’ எனத் தெரிவிக்கப்பட்டது. இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், எதிர் மனுதாரர்களாக சேர்க்கப்பட்ட அதிகாரிகள் அனைவரும் ஜூன் 7ஆம் தேதிக்குள் பதில்மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், இந்த வழக்கு விசாரணையை ஜூன் 18ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர். 

Next Story

முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற திண்டுக்கல் தொகுதி வேட்பாளர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Chief Minister Stalin congratulates Dindigul candidate Sachithanantham

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் சிபிஎம். கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் சச்சிதானந்தத்தை திமுக மாநில துணைப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகிய இருவருடன் மாவட்டச் செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி செந்தில் குமார் ஆகியோரும் சென்னைக்கு நேரில் அழைத்து சென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற வைத்தனர்.

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறப் போகிறீர்கள் என்ற செய்தி கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன் எனக் கூறியதோடு எவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவீர்கள் எனக் கேட்டபோது சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியசாத்தில் வெற்றி பெறுவேன் எனக்கூறினார். அப்போது உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, இல்லை 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சிபிஎம் வேட்பாளர் வெற்றி பெறுவார் எனக் கூறினார்.   

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் ஐ.பெரியசாமியை பார்த்து நீங்கள் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என கூறுகிறீர்களா? எனக் கேட்டவுடன் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், உங்களின் வழிகாட்டுதலின் படி திண்டுக்கல் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தோம். தமிழக அரசின் நலத்திட்டங்களை பாராட்டி திண்டுக்கல் தொகுதியில் உள்ள வாக்காளர்கள் திமுக தலைமையிலான கூட்டணிக்கு அமோகமான வாக்குகளை அளித்துள்ளனர் என்றார். இந்த சந்திப்பின் போது  அமைச்சர் துரைமுருகன், அமைச்சர்  ஐ.பெரியசாமி,  அமைச்சர் சக்கரபாணி,  எம்.எல்.ஏ., ஐ.பி.செ ந்தில்குமார், ஆத்தூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கள்ளிப்பட்டி மணி, சிபிஎம்.வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் உடன் இருந்தனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தது குறித்து திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி சச்சிதானந்தம் கூறுகையில், “திமுக சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றிகளை தெரிந்து கொள்ள எவ்வளவு ஆர்வம் காட்டினாரோ அந்த அளவிற்கு கூட்டணி கட்சி சார்பாக (சிபிஎம்) போட்டியிட்ட எனது வெற்றி குறித்தும் தமிழக முதல்வர் ஆர்வமுடன் கேட்டதும், தொடர்ந்து மக்கள் பணியை சிறப்பாக செய்யுங்கள் என வாழ்த்தியதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நேரத்தில் எனது வெற்றிக்கு அயராது உழைத்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும், அமைச்சர் சக்கரபாணிக்கும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஐ.பி. செந்தில்குமாருக்கும் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் என்றும் நான் உறுதுணையாக இருப்பேன்” என்று கூறினார்