Skip to main content

செந்தில் பாலாஜி வழக்கில் கபில் சிபல் ஆஜராகி வாதம்

Published on 11/07/2023 | Edited on 11/07/2023

 

Kapil Sibal appeared and argued in the Senthil Balaji case

 

அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையினரால் ஜூன் 14 ஆம் தேதி நள்ளிரவில் கைது செய்யப்பட்டார். அப்போது அவருக்கு ஏற்பட்ட நெஞ்சுவலியின் காரணமாக சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் உயர்நீதிமன்ற அனுமதியோடு சென்னை காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு அங்கு அவருக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டு தற்போது மருத்துவக் கண்காணிப்பில் உள்ளார். அதேநேரம் செந்தில் பாலாஜி சட்டவிரோதக் காவலில் இருப்பதாக அவரது மனைவி மேகலா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

 

இந்த வழக்கில் நீதிபதிகள் நிஷா பானு மற்றும் பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு மாறுபட்ட தீர்ப்பை வழங்கினர். இதையடுத்து இந்த வழக்கை மூன்றாவதாக உயர்நீதிமன்ற நீதிபதி சி.வி. கார்த்திகேயன் விசாரிப்பார் என உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.வி. கங்காபூர்வாலா அறிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து இந்த வழக்கு நீதிபதி சி.வி. கார்த்திகேயன் முன்பு கடந்த 6 ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது இரு தரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதி வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தார்.

 

இதையடுத்து கடந்த 7 ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறை சார்பில் சொலிசிஸ்டர் ஜெனரல் துஷார் மேத்தா வாதத்தை முன்வைக்கையில், “செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்க அதிகாரம் உள்ளதா, ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்ததா என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்துள்ளோம். மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற காலத்தை நீதிமன்றக் காவல் காலமாகக் கருத முடியாது. அமலாக்கத்துறையினர் கைது செய்யலாம், காவலில் எடுத்து விசாரிக்க முடியாது என இரு நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர்” என வாதத்தை முன்வைத்தார்.  அதனைத் தொடர்ந்து செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ வாதத்தை முன்வைக்கையில், “ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்தது என இரு நீதிபதிகளும் ஏற்றுக்கொண்டுள்ளனர் எனத் தெரிவித்தார். இதையடுத்து நீதிபதி, “யாரும் ஆவணங்களைப் பார்க்காத நிலையில் கைதுக்கான காரணம் திருத்தப்பட்டுள்ளது எனக் கூற முடியாது. வழக்கு விசாரணையை 11 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கிறேன்” எனத் தெரிவித்திருந்தார்.

 

இந்நிலையில் செந்தில் பாலாஜி வழக்கு, நீதிபதி சி.வி. கார்த்திகேயன் முன்பு இன்று காலை விசாரணைக்கு வந்தது. இதில், செந்தில் பாலாஜி தரப்பில் இருந்து மூத்த வழக்கறிஞர் கபில் சிபல்,  வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோவும் தங்கள் தரப்பு வாதத்தை முன்வைத்து வருகின்றனர். கபில் சிபல் காணொளி வாயிலாக வாதத்தை முன்வைக்கையில், “சட்ட விரோத பணப்பரிவர்த்தனை தடைச் சட்ட வழக்கை பொறுத்தவரை புலனாய்வை அமலாக்கத்துறை மேற்கொள்கிறது. ஒழுங்குபடுத்தும் சட்ட விதிகள் கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு காவல்துறையின் அதிகாரம் வழங்கவில்லை. எனவே காவலில் எடுக்க அமலாக்கத்துறையினருக்கு அதிகாரம் இல்லை. இந்த வழக்கை பொறுத்தவரை குற்றம் மூலம் பணத்தை வைத்திருப்பதாகவோ, அதை மறைத்திருப்பதாகவோ எந்த ஆதாரமும் இல்லை. இந்நிலையில் அமலாக்கத்துறைக்கு எங்கிருந்து ஆதாரம் கிடைத்தது” என வாதிட்டு வருகிறார். நாளை (ஜூலை 12) அமலாக்கத்துறை சார்பில் சொலிசிஸ்டர் ஜெனரல் துஷார் மேத்தா வாதங்களை முன்வைக்க உள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்