Skip to main content

“நான் ரெடி; ஆனால் அவர் தான் வரமாட்டார்” - ராகுல் காந்தி 

Published on 11/05/2024 | Edited on 11/05/2024
Rahul Gandhi criticized pm modi

நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கிய இந்தத் தேர்தல், ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. ஏற்கெனவே, மூன்று கட்டத் தேர்தல் முடிந்துள்ள நிலையில், வரும் மே 13ஆம் தேதி அன்று 96 தொகுதிகளுக்கு நான்காம் கட்டத் தேர்தல் நடைபெற உள்ளது.

அதில், ஆந்திரா (25), தெலுங்கானா (17), பீகார் (5), ஜம்மு (1), மத்தியப் பிரதேசம் (8), மகாராஷ்டிரா(11), ஒடிசா(4), உத்திரப் பிரதேசம்(13), மேற்கு வங்கம்(8), ஜார்க்கண்ட்(4) உள்ளிட்ட 96 தொகுதிகளுக்கு இன்று (11-05-24) மாலையுடன் தேர்தல் பரப்புரை நிறைவு பெறுகிறது. அதுமட்டுமல்லாமல், வரும் 13ஆம் தேதி 96 மக்களவைத் தொகுதிகளுடன் ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலத்தில் சட்டசபைத் தேர்தலும் நடைபெற இருக்கிறது. இந்தத் தேர்தலை எதிர்கொள்ள காங்கிரஸ், பா.ஜ.க, சமாஜ்வாதி கட்சி உள்ளிட்ட தேசிய கட்சிகள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

இதற்கிடையே, உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி மதன் லோகூர் மற்றும் டெல்லி உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ஏ.பி. ஷா ஆகியோர் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு, பிரதமர் மோடியையும், ராகுல் காந்தியையும் வணிகம் மற்றும் கட்சி சார்பற்ற மேடையில் பொது விவாதத்தில் பங்கேற்குமாறு கடிதம் மூலமாக அழைப்பு விடுத்திருந்தனர். அந்தக் கடிதத்தில், ‘மக்களவைத் தேர்தலையொட்டி, இரு தரப்பிலிருந்தும் குற்றச்சாட்டுகள் மற்றும் சவால்களை மட்டுமே வைக்கிறீர்கள். ஆனால், அதற்கான அர்த்தமுள்ள பதில்கள் இல்லை. தவறான தகவல்கள் நிறைந்த இன்றைய டிஜிட்டல் யுகத்தில், வாக்குப்பெட்டியில் அர்த்தமுள்ள தேர்வுகளைச் செய்யக்கூடிய தகவலறிந்த வாக்காளர்களை உறுதிசெய்ய இதுபோன்ற விவாதம் அவசியம். 

ஒரு பாரபட்சமற்ற மற்றும் வணிக ரீதியான மேடையில் ஒரு பொது விவாதத்தின் மூலம் அரசியல் தலைவர்களிடமிருந்து நேரடியாகக் கேட்பதன் மூலம் குடிமக்கள் பெரிதும் பயனடைவார்கள் என்று நாங்கள் நம்புகிறோம். பொதுமக்கள் ஒவ்வொரு தரப்பின் கேள்விகளையும் கேட்காமல், பதில்களையும் கேட்டால் நன்றாக இருக்கும்’ என்று கூறப்பட்டிருந்தது. 

இந்த நிலையில், உத்தரப் பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவரிடம், மக்களவைத் தேர்தல் குறித்த பொது விவாதத்தில் பங்கேற்குமாறு வலியுறுத்தி முன்னாள் நீதிபதிகள் கடிதம் எழுதியது குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த ராகுல் காந்தி, “எந்த மேடையிலும் பொதுப் பிரச்சனைகள் குறித்து பிரதமருடன் விவாதிக்க நான் 100% தயாராக இருக்கிறேன். ஆனால் எனக்கு அவரை தெரியும். அவர் என்னுடன் 100% விவாதம் செய்ய மாட்டார்” என்று கூறினார். இது தொடர்பான, வீடியோவை ராகுல் காந்தி தனது எக்ஸ்(ட்விட்டர்) பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

சார்ந்த செய்திகள்