Skip to main content

அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் நீட்டிப்பு

Published on 12/07/2023 | Edited on 12/07/2023

 

Extension of court custody of Minister Senthil Balaji

 

அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் உள்ளார். அதேசமயம் அவருக்கு ஏற்பட்ட நெஞ்சுவலியின் காரணமாக அவர் முதலில் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பிறகு நீதிமன்றத்தின் அனுமதியோடு காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு அங்கு அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சமீபத்தில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு மருத்துவக்குழு கண்காணிப்பில் உள்ளார்.

 

அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு பின்பு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த செந்தில் பாலாஜிக்கு 14 நாட்கள் நீதிமன்றக் காவல் அளிக்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த 28 ஆம் தேதியுடன் 14 நாட்கள் நீதிமன்றக் காவல் முடிவடைந்த நிலையில் மருத்துவமனையில் இருந்தபடியே செந்தில் பாலாஜி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பு காணொளியில் ஆஜரானார். அவரிடம் உடல்நிலை குறித்துக் கேட்டறிந்த நீதிபதி அல்லி, உங்கள் உடல்நலம் எப்படி இருக்கிறது? எப்படி இருக்கிறீர்கள்? போதுமான சிகிச்சைகள் வழங்கப்படுகிறதா? காவல்துறை பாதுகாப்பு போதுமானதாக இருக்கிறதா? எனக் கேள்விகளை எழுப்பிய நிலையில், அறுவை சிகிச்சை செய்யப்பட்ட தனக்கு வலி இருப்பதாக செந்தில் பாலாஜி தெரிவித்து இருந்தார்.  இதையடுத்து நீதிபதி செந்தில் பாலாஜிக்கு ஜூலை 12 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலை நீட்டித்து உத்தரவிட்டு இருந்தார்.

 

இந்நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் இன்றுடன் நிறைவடைந்த நிலையில் இரண்டாவது முறையாக 14 நாட்களுக்கு  நீதிமன்றக் காவலை நீட்டித்து சென்னை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் செந்தில் பாலாஜி ஜூலை 26 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் இருப்பார் என நீதிபதி தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்