Skip to main content

நிரம்பியது அணை...! தமிழகத்திற்கு தண்ணீர் பிரச்சனை இவ்வருடம் இல்லை...

Published on 13/08/2020 | Edited on 13/08/2020
Bhavanisagar Erode

 

தமிழகத்தில் உள்ள ஒரு அணை முழுமையாக நிரம்பி விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது. அது ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானிசாகர் அணைதான். இந்த அணை நீர் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் என மூன்று மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. 

 

தமிழ்நாட்டில் மேட்டூர் அணைக்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய அணையாக பவானிசாகர் அணை விளங்குகிறது. இந்த அணையின் மொத்த உயரம் 105 அடியாகும். 32.8 டி.எம்.சி. நீர் இருப்பு கொள்ளளவு கொண்டதாகும். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து இதனால் பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதியான நீலகிரி மாவட்டத்தில் பலத்த மழை பெய்து வருகிறது.

 

இதன் காரணமாகவே அணைக்கு நீர்வரத்துத் தொடர்ந்து அதிகரித்தது. அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வந்தது. இன்று காலை முதல் அணைக்கு வரும் நீரின் அளவு குறைந்தது. இன்று காலை 7 மணி நேர நிலவரப்படி பவானிசாகர் அணை 101.10 அடியாகவும் மாலை 6 மணி நிலவரப்படி 101.89 அடியாகவும் உள்ளது. அணைக்கு வினாடிக்கு ஐயாயிரம் கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து தடப்பள்ளி அரக்கன்கோட்டை பாசனத்திற்காக 700 கன அடியும் காளிங்கராயன் பாசனத்திற்காக 500 கன அடியும் என மொத்தம் 1,200 கனஅடி வெளியேற்றப்பட்டு வருகிறது பவானிசாகர் அணையின் மொத்த கொள்ளளவு 105 அடி என்றாலும் இதில் 102 அடி வரை மட்டுமே நீர் தேக்கி வைக்க வேண்டும் என்ற விதிமுறை உள்ளது. இதன்படி இன்று இரவுக்குள் 102 அடியை எட்டிவிடும். இதனால் பவானிசாகர் அணைக்கு வரும் மொத்த நீரும் வெளியேற்றப்பட இருக்கிறது. இதனால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. 

 

இதற்கிடையே கீழ்பவானி பாசனத்திற்காக 14 ஆம் தேதி நீர் திறக்கப்படுகிறது. அணை நிரம்பி விட்டதால் மூன்று வாய்க்கால் பாசனத்திற்கு திறப்பது போக மீதி தண்ணீர் வெளியேற்றப்பட்டு அது பவானி கூடுதுறை எனும் இடத்தில் காவிரி ஆற்றில் கலந்து செல்லும் ஏற்கனவே மேட்டூர் அணையும் 100 அடியை நெருங்கியுள்ளது. மேட்டூர் அணை 120 அடி வரை தண்ணீர் தேக்க முடியும் கர்நாடகாவில் தொடர் மழை மேலும் நீடித்தால் நமது மேட்டூர் அணையும் நிரம்பி உபரி நீர் வெளியேற்றப்படும்.

 

CNC

 


மொத்தத்தில் இவ்வருடம் விவசாயப் பணிக்கும் குடிநீருக்கும் எவ்வித பஞ்சமும் ஏற்படாது என விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

இறந்து கிடந்த ஆண் யானை; வனத்துறையினர் விசாரணை

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Forest department investigation


                                கோப்புப்படம் 

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் பத்து வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகத்தில் ஏராளமான காட்டு யானைகள் வசித்து வருகின்றன. தற்போது வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவுவதால் உணவு, தண்ணீர் தேடி யானைகள் விவசாய தோட்டத்தில் புகுவதும்,  உணவுக்காக சாலையில் உலா வருவதும் தொடர்கதையாகி வருகிறது.

இந்நிலையில் தாளவாடி வனச்சரகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் வன ஊழியர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கும்டாபுரம் அருகே ஆண் யானை ஒன்று அழுகிய நிலையில் இறந்து கிடந்ததை கண்டனர். இதுபற்றி தாளவாடி வனச்சரக அலுவலர் சதீசுக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்துக்குச் சென்ற அதிகாரிகள் கால்நடை மருத்துவர் சதாசிவம் தலைமையில் மருத்துவக் குழுவினர் இறந்த யானையின் உடலை அங்கேயே பிரேதப் பரிசோதனை செய்தனர்.

இதில் இறந்த யானைக்கு சுமார் 18 வயது இருக்கும் எனத் தெரிவித்தனர். ஆண் யானையின் தந்தங்கள் இல்லாததால் யானை சுட்டுக் கொல்லப்பட்டதா? அல்லது விஷம் வைத்து கொல்லபட்டதா?  அல்லது இறந்த கிடந்த யானையின் தந்தங்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றார்களா? என வனத்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல் பிரேதப் பரிசோதனை மாதிரிகளையும் ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இறந்த யானை உடலை மற்ற வனவிலங்குகளுக்காக வனப்பகுதியில் விட்டதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.