Skip to main content

இளைஞரை கொலை செய்த 5 நண்பர்கள்! தலைமறைவானவர்களுக்கு வலைவீச்சு!

Published on 21/08/2020 | Edited on 21/08/2020
dddd

 

 

கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் உள்ள புதுநகரை சேர்ந்த ரங்கசாமி என்பவரது மகன் காமராஜ் (வயது 22). இவர் 19.08.202 புதன்கிழமை  இரவு கம்மியம்பேட்டையில் உள்ள நகராட்சி குப்பை கிடங்கிற்கு பின்புறம், தனது நண்பர்களான கே.என்.பேட்டையை சேர்ந்த ரவி மகன் தேவா உள்பட 6 பேருடன் சேர்ந்து மது குடித்து கொண்டிருந்தார். பின்னர் தேவாவின் மோட்டார் சைக்கிளில் அமர்ந்து காமராஜ் வீட்டுக்கு புறப்பட்டார். மற்ற 5 நண்பர்களும் மோட்டார் சைக்கிளில் மின்னல் வேகத்தில் சென்றனர். 

 

தேவாவும், காமராஜூம் ஜெ.ஜெ.நகரில் வந்தபோது மற்ற 5 நண்பர்களும் மோட்டார் சைக்கிள்களில் வந்து 2 பேரையும் மறித்தனர். இதை சற்றும் எதிர்பாராத தேவா மோட்டார் சைக்கிளை நிறுத்தினார். அப்போது 5 பேரும் சேர்ந்து தேவாவை சரமாரியாக தாக்கினர்.

 

இதனை தொடர்ந்து காமராஜையும் தாக்கி, அவரை தங்களது மோட்டார் சைக்கிளில் தூக்கி சென்றனர். குப்பை கிடங்கு அமைந்துள்ள ஸ்ரீராமுலு நகர் பகுதிக்கு கொண்டு சென்றனர். அங்கு 5 பேரும் சேர்ந்து காமராஜை மார்பில் கத்தி மற்றும் அரிவாளால் வெட்டியதுடன், அவரது கழுத்தை அறுத்து படுகொலை செய்தனர். அவர் இறந்ததை உறுதி செய்த 5 நண்பர்களும் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர்.

 

இதுகுறித்து தகவலறிந்ததும் திருப்பாதிரிப்புலியூர் காவல் ஆய்வாளர் குணசேகரன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, காமராஜின் உடலை பார்வையிட்டனர். பின்னர் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். படுகாயமடைந்த தேவா அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் உரிய சிகிச்சை அளித்து வருகின்றனர்.

 

கொலை சம்பவம் நடந்த ஸ்ரீராமுலு நகர் பகுதி இருள் சூழ்ந்தது என்பதுடன், அங்கு ஆட்கள் நடமாட்டம் இருக்காது. அதோடு காமராஜ் வசித்து வரும் புதுநகர், திருவந்திபுரம் சாலையில் இருந்து கேப்பர் மலைக்கு செல்லும் வழியில் அமைந்துள்ளது. எனவே நண்பர்கள் 5 பேரும் சேர்ந்து சதிதிட்டம் தீட்டி, அவரை மது குடிப்பதற்காக குப்பை கிடங்கு பகுதிக்கு அழைத்து வந்து கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.

 

தப்பி ஓடியவர்களை பிடித்த பின்னரே கொலையின் பின்னணி குறித்து முழு விவரம் வெளியாகும் என்று கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பி ஓடிய கொலையாளிகளை தேடி வருகின்றனர். இளம் வயது நண்பர்களுக்குள்ளான மோதலும், கொலையும்  கடலூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்