Heavy rain warning in Tamil Nadu; Disaster Management Department Urgent Letter

தமிழகத்தில் கோடை காலம் காரணமாக பரவலாக கோடை வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் சில நாட்களாகவே தமிழகத்தில் கோடை மழை பொழிந்து வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் அடுத்த நான்கு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடப்பட்டு இருந்தது. இந்நிலையில் தமிழகத்தின் பல இடங்களில் கன மழை பொழிந்துள்ளது.

Advertisment

கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை, மார்த்தாண்டம், அருமனை, திற்பரப்பு உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பொழிந்துள்ளது. அதேபோல் நெல்லை மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இடி மின்னலுடன் கனமழை பொழிந்துள்ளது. நெல்லை, குமரி, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்த நிலையில் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. தேசிய பேரிடர் மீட்பு படையின் சார்பில் ஒவ்வொருவருக்கும் குறுஞ்செய்தி அனுப்பப்பட்டிருந்தது. தென்காசி மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் பலத்த காற்றுடன் மழைக்கு வாய்ப்புள்ளது .எனவே பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என குறுஞ்செய்தி அனுப்பப்பட்டிருந்தது.

Advertisment

தென்காசியில் செங்கோட்டை, குற்றாலம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. நெல்லை மாவட்டத்தில் பனங்குடி, வள்ளியூர், காவல்கிணறு உள்ளிட்ட பல இடங்களில் கனமழை பொழிந்து வருகிறது. பாளையங்கோட்டையில் 28 மில்லி மீட்டர் மழையும், திருநெல்வேலியில் 15 மில்லி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.

இந்தநிலையில் வரும் மே 19 ஆம் தேதி வரை தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 15, 16, 17, 18, 19 ஆகிய ஐந்து நாட்களுக்கு விருதுநகர், தென்காசி, தேனி உள்ளிட்ட தென் மாவட்டங்கள் மற்றும் புதுக்கோட்டை, நாகப்பட்டினம், திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்கள் மற்றும் நீலகிரி, திருச்சி, மயிலாடுதுறை, கிருஷ்ணகிரி உள்ளிட்ட 28 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Advertisment

இந்திய வானிலை ஆய்வு மையத்தின் சார்பில் கொடுக்கப்பட்டுள்ள இந்த எச்சரிக்கையை அடுத்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் தயார் நிலையில் இருக்க வேண்டும் எனத்தமிழ்நாடு அரசின் பேரிடர் மேலாண்மைதுறை அவசரக்கடிதம் எழுதி உள்ளது. அந்தக் கடிதத்தில் பேரிடரை எதிர் கொள்வதற்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் உள்ளது. அதன்படி இந்தக் கனமழையை எதிர்கொள்ள அனைத்து ஆட்சியர்களும் தயார் நிலையில் இருக்க வேண்டும். மாவட்ட நிர்வாகத்தின் கீழ் உள்ள அனைத்து துறை சார்ந்த அலுவலர்களும் முழு வீச்சில் இந்த நடைமுறையை எதிர்கொள்ள தயார் நிலையில் இருக்க வேண்டும் என அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.