Skip to main content

வைகோ என்ன தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த பிரதிநிதியா? தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும்: தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி

Published on 04/12/2018 | Edited on 04/12/2018

 

tamilisai soundararajan


 

வைகோ என்ன தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த பிரதிநிதியா? தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும் என பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார்.
 

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 
 

தமிழக அரசின் ஒப்புதல் இல்லாமல் அணை கட்ட முடியாது என்று பாஜக சொல்லியிருக்கிறது. தமிழக அரசு இதனை முறையாக அணுகியிருக்கிறது. இப்போதைக்கு திருச்சியில் திமுக தலைமையிலான போராட்டத்தின் அவசியம் என்ன? 
 

போராட்டத்தில் மோடியை உள்ளே விடமாட்டோம் என வைகோ கூறியுள்ளார்.  அறிவாலயத்திற்குள் உள்ளே விடுவார்களா இல்லையா என்று சந்தேகப்பட்டுக்கொண்டிருக்கிறார் வைகோ. வைகோ என்ன தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த பிரதிநிதியா? 

தமிழக மக்கள் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். நிச்சயம் பிரதமர் வருவார். தமிழக மக்களின் அத்தனை கூட்டங்களிலும் பங்கு பெறுவார்கள். மக்களின் துன்பத்தோடு பங்கெடுத்துக்கொண்டிருக்கிறார்கள் என்பதால்தான் கஜா புயல் துவங்கிய முதல் நாளே முதல் அமைச்சருடன் பேசியிருக்கிறார்.


மத்திய அமைச்சர்கள் பொன்.ராதாகிருஷ்ணன், நிர்மலா சீதாராமன் வந்திருக்கிறார்கள். நான் ஏறக்குறைய 7, 8 நாட்கள் தங்கியிருந்தேன். எங்கள் கட்சியின் தொண்டர்கள் அங்கு நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார்கள். 
 

ஸ்டாலின் அவர்கள் கஜா புயல் பாதித்த பகுதிகளுக்கு எத்தனை நாட்கள் சுற்றுப் பயணம் செய்தார்?. கலைஞரை தேர்ந்தெடுத்த திருவாரூர் பகுதி எவ்வளவு பாதிக்கப்பட்டுள்ளது. இவர்கள் அங்கு தெருத் தெருவாக சென்றார்களா? வைகோ எத்தனை நாள் சென்றார்?. ‘
 

முழுமையாக மக்களின் துன்பத்தோடு பங்கெடுத்துக்கொண்டிருக்கின்ற மத்திய ஆட்சியை தொடர்ந்து குறைக்கூறிக்கொண்டிருக்கிறார்கள். மண்ணெண்ணெய் வழங்கப்பட்டுள்ளது. இழந்த தென்னை மரங்களை மறு சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.


தென்னை விவசாயிகளுக்காக நடந்த கருத்தரங்களில் நான், சி.பி.ராதாகிருஷ்ணன் மற்றும் எச்.ராஜா ஆகியோர் கலந்து கொண்டோம். சேதமடைந்த படகுகளை மறுசீரமைப்பது குறித்த ஆலோசனையில் மீனவர்களுடன் கலந்து கொண்டோம். மக்களை மீட்டெடுக்க முயற்சி செய்கிறபோது, எதிர்மறை அரசியலை ஸ்டாலின் குழுவினர் செய்து கொண்டிருக்கிறார்கள்.
 

தமிழ்நாட்டில் மழையே பெய்யவில்லை. புல்லே வளரவில்லை. தாமரை எப்படி மலரும் என்று ஸ்டாலின் பேசுகிறார். அவர் பேசி முடித்தவுடன் மழை வருகிறது. தாமரை மலரப்போகிறது. இயற்கையாக மழைவரவில்லை என்றால், இன்றைக்கு உள்ள தொழில்நுட்ப உதவியுடன் செயற்கையாக மழையை வரவழைத்து குளங்களை நிரம்ப செய்து தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும். இவ்வாறு கூறினார். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'எல்லா இடங்களிலும் நிச்சயமாக ஒரு மாற்றம் ஏற்படும்' -தமிழிசை பேட்டி

Published on 23/04/2024 | Edited on 23/04/2024

 

nn


'ஆளுநராக இருந்து அக்காவாக வந்திருப்பதை மக்கள் மிகவும் வரவேற்றார்கள்' எனப் பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழிசை சௌந்தரராஜன் பேசுகையில், ''இந்தத் தேர்தலில் இன்னும் வாக்கு எண்ணிக்கை சதவீதம் அதிகரித்திருக்க வேண்டும். இதற்கு பல காரணங்கள் சொல்கிறார்கள். நேற்றைய தினம் முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் கோபால்சாமி சொல்லும்போது ஆதார் கார்டுடன் இணைக்க வேண்டும். சென்னை போன்ற இடங்களில் அப்பொழுதுதான் வாக்கு சதவீதம் அதிகரிக்கும் என்று சொல்கிறார்கள். சில பேர் இரண்டு வாக்குகள் வைத்திருக்கிறார்கள். கிராமத்திலும் போய் வாக்களிக்கிறார்கள். அது ஒரே இடத்தில் இருந்தால் சென்னையில் வாக்கு சதவீதம் அதிகரிக்கும் என்று சொல்கிறார்கள்.

எது எப்படி இருந்தாலும் மக்கள் அதிகமாக வாக்களிக்க வரவேண்டும். வாக்களிக்க வந்தவர்களுக்கு மிக்க நன்றி. ஏனென்றால் அதிகாலையில் வயதானவர்கள், முடியாதவர்கள் கூட வந்து வாக்களித்தார்கள். அவர்களை நான் தலை வணங்குகிறேன். எல்லா இடங்களிலும் நிச்சயமாக ஒரு மாற்றம் ஏற்படும். பாரதிய ஜனதா கட்சிக்கு நல்ல வாய்ப்பு இருக்கிறது. வடசென்னை பகுதியாக இருக்கட்டும், தென் சென்னை, மத்திய சென்னை, தமிழகம் முழுவதும் குறிப்பாக தென் சென்னையில் நான் போட்டியிட்ட இடத்தில் மக்கள் மிகுந்த அன்பையும் ஆதரவையும் அளித்தார்கள், என்னை உணர்ச்சி வயப்படும் அளவிற்கு, நெகிழ்ச்சி அடைய வைக்கும் அளவிற்கு எல்லோரும் என்னிடம் அன்பு பாராட்டினார்கள். ஒரு ஆளுநராக இருந்து அக்காவாக வந்திருப்பதை மிகவும் வரவேற்றார்கள்''என்றார்.

Next Story

“விதிமுறைகள் மாறி விடுமுறையாக மாற்றப்பட்டு விடுகிறது” - தமிழிசை செளந்தரராஜன்

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Tamilisai soundararajan says Rule is changed into a holiday for lok sabha election

நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் நேற்று (19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்தது. 

தமிழகத்தில் நேற்று இறுதி நிலவரப்படி, 69.46 சதவீத வாக்குகள் பதிவானதாக தெரிவிக்கப்பட்டது. மேலும், கடந்த தேர்தலை விட 3 சதவீத வாக்குகள் குறைந்து பதிவாகியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இது மிகவும் கவலை அளிப்பதாக தென் சென்னை பா.ஜ.க வேட்பாளர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார். 

சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வாக்கு எண்ணும் மையத்தில் பா.ஜ.க வேட்பாளர் தமிழிசை செளந்தரராஜன் இன்று ஆய்வு செய்தார். அதன் பின்னர், அவர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், “வெள்ளிக்கிழமையில் தேர்தல் நடத்துகிறார்கள். 3 நாள்கள் விடுமுறை வந்ததால் வாக்கு சதவீதம் குறைந்து விடுகிறது. வாக்களிக்க வேண்டும் என்ற விதிமுறையே மாறி அது விடுமுறையாக மாற்றப்பட்டு விடுகிறது. தொடர் விடுமுறையால் வாக்களிப்பதில் ஆர்வம் குறைந்து விடுகிறது. சென்னை உள்ளிட்ட இடங்களில் வாக்கு சதவீதம் குறைவாக பதிவாகியுள்ளது கவலை அளிக்கிறது. 

வெள்ளிக்கிழமை, திங்கட்கிழமைகளில் தேர்தல் நாளை அறிவிக்கக் கூடாது என தேர்தல் ஆணையத்திடம் நான் ஏற்கெனவே கோரிக்கை வைத்தேன். ஏனென்றால், அன்று தேர்தல் நடத்தினால் அதை விடுமுறையாக எடுத்துக் கொண்டு போகிறார்கள். அதனால், வார நாட்களில் தேர்தல் நடத்த கோரிக்கை வைக்கிறேன். அதை பரிசீலித்தால் நல்லது என்று நான் நினைக்கிறேன்” என்று கூறினார்.