Skip to main content

“அப்ப காஞ்சு கெடுத்துச்சு, இப்ப பேஞ்சு கெடுத்துடுச்சு!” - வேதனையில் விவசாயி!

Published on 12/01/2021 | Edited on 12/01/2021

 

Cuddalore continues rain crops affected by rain water

 

கடந்த ஒரு மாதமாக கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் விடாது பெய்துவரும் மழையினால் ஏரிகள், குளங்கள் நிரம்பி, ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகின்றது. ஒரு பக்கம் இதனால் விவசாயிகளுக்கு மகிழ்ச்சி என்றாலும், மறுபக்கம் வேதனை. கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் முன் பட்டத்தில் பயிர் செய்யப்பட்ட பருத்தி, சோளம், உளுந்து, நெற்பயிர் ஆகியவை தண்ணீரில் மூழ்கி நாசமாகிவிட்டன. 



வரும் காலங்களில், விவசாயத்திற்குத் தண்ணீர்ப் பஞ்சம் இருக்காது என்றாலும்கூட, பயிர் செய்யப்பட்ட பயிர்களின் விளைச்சலை அறுவடை செய்ய முடியாமல் அழுகி நாசமாகிவிட்டன. விவசாயிகள், வேதனையில் அரசாங்கத்திடம் கையேந்தி காத்திருக்கிறார்கள். உளுந்தூர்பேட்டை அருகே உள்ள குன்னத்தூர் கிராமத்தில் மட்டும் சுமார் 500-க்கும் மேற்பட்ட ஏக்கரில் பயிர் செய்யப்பட்ட உளுந்து அறுவடை செய்யும் நிலையில் இருந்தது. 


இந்த நேரத்தில், விடாது பெய்துவரும் மழையினால் நிலத்திலேயே பயிர்கள் முளைத்துவிட்டன. இதுகுறித்து குன்னத்தூர் விவசாயி வையாபுரி நம்மிடம், “எனது 6 ஏக்கர் நிலத்தில் உளுந்து விவசாயம் செய்திருந்தேன். அறுவடை செய்ய இருந்த நேரத்தில் விடாத மழையினால் விளைந்த உளுந்து, நிலத்திலேயே முளைவிட்டுவிட்டன. ஒருபடி கூடத் தேராது; இதனால் எனக்கு லட்சக்கணக்கில் நஷ்டம். 

 

Cuddalore continues rain crops affected by rain water


அரசு அதிகாரிகள், வேளாண்மைத் துறையினர் வந்து பார்வையிட்டு கணக்கு எடுத்துச் சென்றனர். அதேபோன்று பயிர் இன்சூரன்ஸ் செய்து இருக்கிறோம். ஆனால், அரசு உதவித்தொகை, இன்சூரன்ஸ் தொகை என்று இதுவரை எதுவும் கைக்கு கிடைக்கவில்லை. பல ஆண்டுகளாக வறட்சி, விவசாயம் செய்ய முடியாமல் வேலை தேடி வெளியூர்களுக்குச் சென்றுவிட்டோம். இந்த ஆண்டு நல்ல மழை பெய்ததால், விவசாயம்செய்து பிழைத்துக் கொள்ளலாம் என்று ஊருக்கு வந்து, விவசாயத்தில் ஈடுபட்டோம். ஆனால், விடாது பெய்த மழை எங்களை நஷ்டப் படித்திவிட்டது. 

 

Cuddalore continues rain crops affected by rain water
                                                  விவசாயி வையாபுரி

 

பல ஆண்டுகளாகக் காஞ்சு கெடுத்துச்சு, இந்த ஆண்டு மழை பேஞ்சு கெடுத்துடுச்சு. ஒரு மாதமாக சூரிய வெயில் கண்ணுக்குத் தெரியவில்லை. வெயில் படாததால் விளை பயிர்கள் முற்றவில்லை. வெயில் பட்டால்தான் தானியங்கள் முற்றும். இது மட்டுமல்ல பயிர் செய்யப்பட்ட காய்கறிகள் அனைத்தும் பிஞ்சிலேயே வெம்பிவிட்டன.  வெயில் பட்டால்தான் காய்கறி செடிகளின் வேரில் சூடு ஏறி காய்கறிகள் பெருக்கும். அப்போதுதான் அறுவடை செய்ய முடியும். 

 

விளைச்சல் நஷ்டமானதால் தானியங்களின் பற்றாக்குறை ஏற்பட்டு, விலை அதிகரிக்க உள்ளது. அதேபோல், காய்கறி விலையும் அதிகரிக்கப் போகிறது. சீரான மழை, சீரான வெயில் இதுவே விவசாயத்தைக் காப்பாற்றும். அதிக வறட்சி, அதிக மழை இரண்டுமே எங்களை நசுக்குகிறது; நாசம் ஆக்குகிறது” என்றார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“தமிழகத்தில் நீடித்த வளர்ச்சியை தி.மு.க அரசால் மட்டுமே வழங்க முடியும்” - மல்லிகார்ஜுன கார்கே பேச்சு

Published on 15/04/2024 | Edited on 16/04/2024
“ Mallikarjun Kharge speech Only a DMK government can deliver sustainable development in Tamil Nadu

கடலூர் மாவட்டம் நெய்வேலியில், கடலூர் நாடாளுமன்றத் தொகுதியில் இந்தியா கூட்டணியில் திமுக தலைமையில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் எம்.கே. விஷ்ணு பிரசாத் கை சினத்தில் போட்டியிடுகிறார். அதேபோல் சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் பானை சின்னத்தில் போட்டியிடுகிறார். இவர்களுக்கு ஆதரவு திரட்டும் வகையில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். இதில் சிறப்பு அழைப்பாளராக அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கலந்து கொண்டு கடலூர் தொகுதியில் கை சின்னத்தில் போட்டியிடும் விஷ்ணு பிரசாத்தையும், சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் பானை சின்னத்தில் போட்டியிடும் தொல். திருமாவளவனையும் இரு கரம் கோர்த்து பானை மற்றும் கை சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

இதனைத் தொடர்ந்து அவர் மக்கள் மத்தியில் பேசுகையில், “இந்திய கூட்டணியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் தந்தை பெரியார், காமராஜர், கலைஞர் ஆகியோரின் நினைவுகளை இத்தருணத்தில் நினைவு கூற கடமைப்பட்டுள்ளோம். பாரதிய ஜனதா அரசு பல்வேறு வரிவிதிப்புகள் மூலம் ஏழை எளிய மக்களை வதைத்து வருகிறது. அதிலும் குறிப்பாக, தாழ்த்தப்பட்ட மக்கள், பிற்படுத்தப்பட்ட விவசாய பெருங்குடிகள் ஆகியோரின் நிலை மிகுந்த மோசமான நிலையில் உள்ளது. அவர் பிரதமர் ஆவதற்கு முன்பும், பிரதமர் ஆனதற்கு பின்பும் அடிக்கடி கூறி வருவது 2 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு என்பதையும் ஒவ்வொரு குடும்பத்தாரின் வங்கி கணக்கில் 15 லட்சம் கருப்பு பணத்தை மாற்றி தருவேன் எனவும் வாக்குறுதி தந்தார். அதில் ஏதாவது ஒன்றை செய்துள்ளாரா?

காங்கிரஸ் கட்சி மத்தியில் ஆட்சி அமைத்தவுடன் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உறுதி செய்யப்படும். இந்தப் பிரச்சாரக் கூட்டத்தில் நான் திடமாக கூறிக் கொள்வது என்னவென்றால் இரண்டு விஷயங்களை மட்டும் மக்கள் மன்றத்தில் கூற விரும்புகிறேன். ஒன்று இந்திய ஜனநாயகம் பாதுகாக்கப்படும், மற்றொன்று அரசியலமைப்பு சட்டம் பாதுகாக்கப்படும். நான் 53 ஆண்டு காலம் சட்டமன்ற உறுப்பினர், எம்.பி ராஜ்யசபா உறுப்பினர் எனப் பல்வேறு பதவிகளில் இருந்து வருகிறேன். ஆனால், இந்த ஆட்சியின் போதுதான் கவர்னர் என்ற பதவியின் செயல்பாடுகள் மிகுந்த கேள்விக்குரியதாக உருவாகியுள்ளது. அவர் பட்ஜெட் கூட்டத்தொடர், பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனம் போன்றவைகளில் எல்லை மீறுவதைக் காண முடிந்தது. 

“ Mallikarjun Kharge speech Only a DMK government can deliver sustainable development in Tamil Nadu

பாஜக அரசை எதிர்ப்பதில் தமிழக முதல்வர் மிக முக்கிய இடமாக உள்ளார். அதிலும் குறிப்பாக நீட் தேர்வு போன்றவற்ற எதிர்ப்பதில் மிக உறுதியாக உள்ளார். நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் தற்போது உள்ள சிஸ்டத்தை நிச்சயம் மாற்றுவோம். விவசாயிகள் இப்போது மிகுந்த மோசமான நிலையில் உள்ளனர். அவர்களின் வாழ்வாதாரம் சிறக்க, சிறப்பு நடவடிக்கை காங்கிரஸ் அரசு நிச்சயம் மேற்கொள்ளும். தமிழகத்தில் நீடித்த வளர்ச்சியை, தி.மு.க அரசால் மட்டுமே தர முடியும். பெட்ரோல் டீசல் விலை உயர்ந்து கொண்டிருக்கிறது. ஏன் விலை உயர்வு என்று கேட்டால் , மோடி அரசு குருடாயில் விலை உயர்வு என்கிறது. ஆனால், உலக அளவில் குரூடாயில் விலை குறைந்த போது பெட்ரோல் டீசல் விலையை குறைக்கவில்லை. இதனால் ஏழை எளிய மக்கள் விலைவாசி உயர்வால் அவதி அடைந்து வருகின்றனர்.

ஆயிரம் மோடி வந்தாலும் இந்திய ஜனநாயகத்தையும், அரசியல் சட்டத்தையும் ஒன்றும் அசைக்க முடியாது. இந்தியாவில் உள்ள பல்வேறு துறைகளில் உள்ள எஸ்.சி, எஸ்.டி பிற்பட்டோர் பிரிவினருக்கான காலியிடங்களை நிச்சயம் நிரப்புவோம். இதனால் சுமார் 30 லட்சம் இளைஞர்கள் வேலை வாய்ப்புப் பெறுவர் எனவே அனைவரும் கை சின்னத்திற்கும் பானை சின்னத்திற்கும் வாக்களித்து ஜனநாயகத்தை நிலைநாட்ட வேண்டும்” என்று பேசினார்.  

இந்தப் பொதுக்கூட்டத்தில் தமிழக தொழிலாளர் நலன் மற்றும் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வெ.கணேசன், காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை, நெய்வேலி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சபா. ராஜேந்திரன், கடலூர் சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன், காங்கிரஸ் முன்னாள் மாநிலத் தலைவர் கே.எஸ். அழகிரி, மாநில செயலாளர் சந்திரசேகர், கடலூர் மாநகராட்சி துணை மேயர் தாமரைச்செல்வன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் கோ.மாதவன் உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினர் கலந்து கொண்டனர்.

Next Story

4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
Chance of rain in 4 districts

தமிழகத்தின் 4 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தின் பல இடங்களில் வெயில் செஞ்சுரி அடித்து மக்களை கடுமையாக வாட்டி வதைத்து வருகிறது. இதனால் தண்ணீரின்றி வனப்பகுதிகள் வறண்டு இருப்பதால் வனவிலங்குகள் மக்கள் வசிக்கும் பகுதிக்கு தண்ணீர் தேடி வரும் நிகழ்வுகள் அடிக்கடி நடக்கிறது. குறிப்பாக மேற்குத்தொடர்ச்சி மலையின் வனப்பகுதிகளில் கடும் வறட்சியான சூழல் நிலவுகிறது. இதனால் கடந்த சில நாட்களாக காட்டு யானைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

வெயிலின் கொடுமையில் மக்கள் அல்லல்படும் நிலையில் ஒரு சில இடங்களில் மழை பெய்து மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தற்போது சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “திருநெல்வேலி, கன்னியாகுமரி, ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை ஆகிய 4 மாவட்டங்களில் இன்று (15.04.2024) காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.