
உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகிறது. இதுவரை ஒரு கோடிக்கும் அதிகமானவர்களை இந்த நோய்த் தாக்கியுள்ளது. 6 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் கரோனா பாதிப்பு என்பது தினமும் உயர்ந்த வண்ணம் இருந்து வருகின்றது. தமிழகத்தில் இன்று 5,609 பேருக்கு ஒரே நாளில் கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 1,021 பேருக்கு கரோனா கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் இரண்டாவது வாரமாக 1,300க்கும் குறைவாகக் கரோனா தொற்று பதிவாகி உள்ளது. ஆனால் பிற மாவட்டங்களில் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இன்றைய பாதிப்புகளையும் சேர்த்து தமிழகம் முழுவதும் இதுவரை 2,63,222 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று மட்டும் சிகிச்சை பெற்று குணமானவர்களின் எண்ணிக்கை 5,800 ஆக உள்ளது. இதன் மூலம் இதுவரை குணமானவர்களின் மொத்த எண்ணிக்கை 2,02,283 ஆக அதிகரித்துள்ளது. இன்று உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 109 ஆக உள்ளது. இதன் மூலம் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 4,241 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்டத்தில் 331 பேருக்கும், கடலூர் மாவட்டத்தில் 167 பேருக்கும், திருவள்ளூரில் 332 பேருக்கும், மதுரையில் 106 பேருக்கும், விருதுநகரில் 348 பேருக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாவட்டங்களில் கரோனா பரவல், வழக்கமான அளவில் இருந்து வருகிறது.