Skip to main content

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு மூடப்பட்ட அரசுப் பள்ளி நக்கீரன் முயற்சியால் மீண்டும் திறப்பு!

Published on 15/11/2021 | Edited on 15/11/2021

 

Closed three years ago   Re-opening of Government School by Nakkeeran initiative


தமிழ்நாட்டில் சுமார் 50- க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகள் கடந்த சில வருடங்களில் சத்தமில்லாமல் மூடப்பட்டுள்ளது. அதே நேரத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மாணவர்கள் இல்லை என்று மூடப்பட்டு நூலகம் திறக்கப்பட்ட அறந்தாங்கி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி குளத்தூர் கிராமத்திலும், ஆவுடையார்கோயில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி சின்னப்பட்டமங்கலம் கிராமத்திலும் சக பத்திரிகை நண்பரான கே.சுரேஷ் உடன் இணைந்து நக்கீரன் எடுத்த முயற்சியால் கிராம மக்களுடன் பேசி அதிகாரிகளால் மூடப்பட்ட  இரண்டு அரசுப் பள்ளிகளிலும் மாணவர்களைச் சேர்த்து கல்வித்துறை அதிகாரிகளை வைத்து மீண்டும் திறக்கப்பட்டது.

 

அதே போல தான் அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட அல்லம்பட்டி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இரண்டு குழந்தைகளுடன் இயங்கியதால், அடுத்த வருடமே சத்தமில்லாமல் மூடப்பட்டது. தகவலறிந்து பள்ளிக்கு சென்று மூடப்பட்ட பள்ளியிலிருந்து கல்வித்துறை அதிகாரிகளுக்கு பேசியதுடன் செய்தியும் வெளியிட்ட நிலையில் மீண்டும் பள்ளி திறக்கப்பட்டது. ஒரு மாணவருடன் பள்ளி இயங்கியது.

 

இந்த நிலையில் தற்போது ஒரு மாணவர் கூட இல்லை என்று மீண்டும் பள்ளி மூடப்பட்டிருக்கும் நிலையில் மீண்டும் நாம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சாமி.சத்தியமூர்த்தியிடம் கோரிக்கை வைத்த நிலையில் மாணவர்களை சேர்க்க றெ்றோர்களிடம் நாம் நடத்திய பேச்சுவார்த்தையோடு, பச்சலூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் ஜோதிமணி, ஊராட்சி மன்றத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள், கிராம மக்களிடமும் பெற்றோர்களிடமும் தொடர்ந்து பள்ளியை திறக்க மாணவர்களை சேர்க்க வேண்டும் என்பதை வலியுறுத்தியதன் பயனாக பல பெற்றோர்கள் முன்வந்து பள்ளியில் தங்கள் குழந்தைகளைச் சேர்க்க முன்வந்தனர்.

 

மீண்டும் பள்ளி திறக்கப்பட உள்ளதால் ஒரே நாளில் கட்டிடங்கள், வகுப்பறைகள் வண்ணமயமாக்கப்பட்டது. திங்கள் கிழமை பள்ளிக்கு மாணவர்களை சேர்க்க வந்த பெற்றோருக்கும் மாணவர்களுக்கும் இனிப்புகளும், பூவும் கொடுத்து வரவேற்கப்பட்டனர். 

 

மூடப்பட்ட பள்ளியை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் சாமி.சத்தியமூர்த்தி மீண்டும் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் வட்டாரக்கல்வி அலுவலர் முத்துக்குமார் மற்றும் ஊராட்சிமன்றத் தலைவர், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், கிராமத்தினர் கலந்து கொண்டனர்.

 

புதுக்கோட்டை மாவட்டத்தில் மூடப்பட்ட மூன்றாவது அரசுப் பள்ளியையும் மீண்டும் திறந்தோம் என்ற மகிழ்ச்சியோடு நாம் அங்கிருந்து புறப்பட்டோம்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

சிதம்பரத்தில் மாணவ மாணவிகளுக்கு உயர் கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Higher education guidance program for students in Chidambaram

சிதம்பரம் அரசு நந்தனார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில்  ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு எழுதிய  மாணவ மாணவிகளுக்கு  உயர் கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்சிக்கு  சிதம்பரம் சார் ஆட்சியர் ராஷ்மிராணி தலைமை தாங்கி மாணவர்கள் மத்தியில் பேசுகையில்  பன்னிரெண்டாம் வகுப்பு  முடித்து  அடுத்து என்ன படிக்கலாம்.  மாணவர்களின் கனவுகளை நினைவாக்கும்  படிப்புகள்  எவை,   உயர்கல்விக்கு செல்ல ஏராளமான உதவித் தொகை வாய்ப்புகள் உள்ளது என்றும்,   தேர்ச்சி பெற்ற அனைத்து  மாணவர்களுக்கும்  உயர் கல்விக்கான  வழிகாட்டுதல்களைத் தமிழக அரசு சிறப்பாகச் செய்து வருகிறது.  சிறந்த வாய்ப்புகளுக்கு எந்தக் கல்லூரியிலும்  சேர்ந்து படிக்கலாம்,  வருங்காலத்தைப் பலப்படுத்த எந்தப் பாடப்பிரிவைத்  தேர்ந்தெடுக்கலாம் என்பது குறித்து  மாணவர்களிடம் விளக்கி பேசினார்.

Higher education guidance program for students in Chidambaram

இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆதிதிராவிட  மற்றும் பழங்குடியின நல அலுவலர்  லதா அனைவரையும் வரவேற்றார். மண்டல உதவி இயக்குநர் சுப்பிரமணியன்,  ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாவட்ட உதவி திட்ட அலுவலர் சரவணகுமார்,  நந்தனார் ஆண்கள் மேல் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் குகநாதன், குமராட்சி வட்டார வள மைய மேற்பார்வையாளர் இளவரசன்,  ஒருங்கிணைப்பாளர் பூங்குழலி,  பள்ளித்துணை ஆய்வாளர்  வாழ்முனி,  ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

இதில் மண்டல ஒருங்கிணைப்பாளர்கள் ரவி, அருள்சங்கு, நந்தனார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ராதாகிருஷ்ணன்,  சுவாமி சகஜானந்தா மணி மண்டப ஒருங்கிணைப்பாளர் பாலையா, குமராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பாலமுருகன், உள்ளிட்ட கடலூர் மாவட்டத்தில் உள்ள  ஆதி திராவிட நலத்துறை   பள்ளிகளின் மாணவ மாணவிகள்  300-க்கும் மேற்பட்டவர்கள்  கலந்து கொண்டு  உயர்கல்வி குறித்து ஆலோசனைகளைப் பெற்றனர்.   இவர்களுக்கு உயர் கல்வி குறித்த விவரங்களை கருத்தாளர் கோபி வழங்கினார். சிதம்பரம் ஆதிதிராவிடர் நலத்துறை தனி வட்டாட்சியர் சுதா அனைவருக்கும் நன்றி கூறினார்.

Next Story

 மீண்டும் ஒரு வேங்கை வயல் சம்பவம்; அதிர்ச்சி புகார்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Shock complaint on Yet another Vengaivayal lincident at pudukkottai

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி தண்ணீரில் மனிதக் கழிவு கலந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குடிநீரில் மனிதக் கழிவு கலந்த சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள், மனித உரிமை ஆணையம் எனப் பல தரப்பிலிருந்தும் அழுத்தம் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவம் நடைபெற்ற 20ஆவது நாளில் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டு சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.

அந்த வகையில் இந்த விவகாரம் தொடர்பாக குற்றவாளிகளைக் கண்டறிய உண்மை கண்டறியும் சோதனையும், வேங்கைவயல், இறையூர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 5 சிறுவர்கள் உட்பட 31 பேரிடமும் டி.என்.ஏ. பரிசோதனைகளையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் மேற்கொண்டனர். ஒரு காவலர் உட்பட 5 பேரிடம் குரல் மாதிரி பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில், வேங்கைவயல் சம்பவத்தைப் போல், பொதுமக்கள் உபயோகிக்கும் குடிநீரில் மாட்டுச்சாணம் கலக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்த சம்பவம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை அருகே சங்கன்விடுதி ஊராட்சிக்கு உட்பட்ட தெருவில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.  

இந்தத் தெருவில், உள்ள 25 பட்டியலின குடும்பங்களும், மாற்று சமூகத்தைச் சேர்ந்த 10 குடும்பங்களும் உபயோகிப்பதற்காக கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு, 10,000லி அளவு கொண்ட குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டு இயங்கி வருகிறது. இந்த நிலையில், இன்று (25-04-24) காலை இந்தக் குடிநீர் தொட்டியில் இருந்து அசுத்தமான தண்ணீர் வருவதை அங்குள்ள பொதுமக்கள் கவனித்துள்ளனர். அதன் அடிப்படையில், அந்தத் தொட்டியைச் சுத்தம் செய்வதற்காக தொட்டி மேல் ஏறியுள்ளனர். அங்கு சென்று பார்த்த போது, அந்தத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலந்ததாகக் கூறப்படுகிறது.

இந்தச் சம்பவம் தொடர்பாக, போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அந்தப் புகாரின் பேரில், அங்கு போலீசார், வட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். குடிநீர் மாதிரி சோதனைக்கு அனுப்பப்பட்ட நிலையில் தற்போது தொட்டி சுத்தம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், விசாரணை முடியும் வரை டேங்கர் லாரி மூலம் கிராம மக்களுக்கு குடிநீர் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.