Skip to main content

ஓ.பி.எஸ் மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின் தேர்தல் வெற்றிக்கு எதிரான வழக்குகள் ஒத்திவைப்பு!

Published on 28/07/2021 | Edited on 28/07/2021
Cases filed against OPS and Udayanidhi election victory postponed to August 9

 

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வம் மற்றும் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின் தேர்தல் வெற்றியை எதிர்த்துத் தொடரப்பட்ட தேர்தல் வழக்குகளை ஆகஸ்ட் 9ஆம் தேதிக்கு சென்னை உயர் நீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது. தேனி மாவட்டம்  போடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வத்தின் வெற்றியைச் செல்லாது என அறிவிக்கக்கோரி வாக்காளர் மிலானி என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.

 

அதேபோல, சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் திமுக வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்ற அக்கட்சி இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினின் வெற்றியை எதிர்த்து, தேசிய மக்கள் கட்சி வேட்பாளரான எம்.எல்.ரவி தேர்தல் வழக்கை தாக்கல் செய்துள்ளார். இந்த தேர்தல் வழக்குகள்  நீதிபதி பாரதிதாசன் முன் விசாரணைக்கு வந்தன. பன்னீர்செல்வத்துக்கு எதிரான வழக்கில், "மனைவி விஜயலட்சுமி வாங்கிய கடனுக்கு உத்தரவாதம் அளித்துள்ள நிலையில், அதற்காக காட்டப்பட்ட சொத்தின் மதிப்பு குறைத்துக் காட்டப்பட்டுள்ளது" என மனுதாரர் தரப்பில் கூறப்பட்டது. அதற்கான ஆவணங்களைத் தாக்கல் செய்து வாதிடும்படி மனுதாரர் மிலானி தரப்புக்கு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை ஆகஸ்ட் 9ம் தேதிக்குத் தள்ளிவைத்துள்ளார்.

 

இதேபோல, உதயநிதி ஸ்டாலின் வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், "வைப்புத் தொகை செலுத்தாவிட்டால், தேர்தல் வழக்கு தள்ளுபடியாகி, வெற்றி பெற்றது செல்லும் என அறிவிக்க நேரிடும்" எனத் தெரிவித்த நீதிபதி, இதுகுறித்த உச்ச நீதிமன்ற உத்தரவைப்  படித்துவிட்டு விளக்கமளிக்க மனுதாரர் எம்.எல்.ரவிக்கு உத்தரவிட்டு விசாரணையை ஆகஸ்ட் 9ம் தேதிக்குத் தள்ளிவைத்துள்ளார். உதயநிதிக்கு எதிராகத் தொடரப்பட்ட தேர்தல் வழக்கைத் திரும்பப் பெறுவதாக எம்.எல்.ரவி தாக்கல் செய்த மற்றொரு மனு விசாரணைக்கு உகந்ததா என முடிவுசெய்வதற்காகப் பட்டியலிடப்பட்டிருந்தது. அந்த வழக்கும் ஆகஸ்ட் 9ஆம் தேதிக்குத் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சென்னையில் ஒரு வருடத்திற்கு போக்குவரத்து மாற்றம்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Traffic change in Chennai for a year

சென்னை தெற்கு உஸ்மான் சாலை முதல் வடக்கு உஸ்மான் சாலை வரை மேம்பாலம் கட்டுமானப் பணி துவங்க உள்ளதால் நாளை (27.04.2024) முதல் அடுத்த ஆண்டு ஏப்ரல் 26 ஆம் தேதி (26.04.2025) வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், “மேட்லி சந்திப்பு தெற்கு உஸ்மான் சாலை முதல் வடக்கு உஸ்மான் சாலை வரை மேம்பாலம் கட்டுமானப் பணி துவங்க உள்ளதால் 27.04.2024 முதல் 26.04.2025 வரை ஒரு வருடத்திற்கு போக்குவரத்து மாற்றுப்பாதைகளில் செயல்படுத்தப்படுகிறது. அதன்படி வடக்கு உஸ்மான் சாலையில் இருந்து தி.நகர் பேருந்து நிலையம் நோக்கி வரும் வாகனங்கள் பனகல் பார்க் அருகில் உள்ள உஸ்மான் சாலை மேம்பாலத்தில் செல்லத் தடை செய்யப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக வாகனங்கள் மேம்பாலத்தின் அனுகு (சர்வீஸ் ரோடு) சாலை வழியாக சென்று பிரகாசம் சாலை, பாஷ்யம் சாலை, தியாகராயர் சாலை, பர்கிட் சாலை வழியாக தி.நகர் பேருந்து நிலையத்தை அடையலாம். 

Traffic change in Chennai for a year

பர்கிட் சாலை, மூப்பாரப்பன் தெரு சந்திப்பில் இருந்து மேட்லி நோக்கி செல்வதற்கு பேருந்துகள் மட்டும் அனுமதிக்கப்படும். மற்ற வாகனங்கள் மூப்பாரப்பன் தெரு, மூசா தெரு, தெற்கு தண்டபானி தெரு, மன்னார் தெரு வழியாக உஸ்மான் சாலை மூலம் தி.நகர் பேருந்து நிலையத்தை அடையலாம். தி. நகர் பேருந்து நிலையத்திலிருந்து சைதாப்பேட்டை அண்ணா சாலையை அடைய தெற்கு உஸ்மான் சாலை சென்று கண்ணம்மாபேட்டை சந்திப்பை அடைந்து தென்மேற்கு போக் சாலையில் சென்று சிஐடி நகர் நான்காவது பிரதான சாலை, சிஐடி நகர் மூன்றாவது பிரதான சாலை சென்று அண்ணா சாலையை அடையலாம். 

Traffic change in Chennai for a year

சிஐடி நகர் 1ஆவது பிரதான சாலையிலிருந்து வடக்கு உஸ்மான் சாலைக்குச் செல்லும் வாகனங்கள் கண்ணம்மாபேட்டை சந்திப்பில் தென்மேற்கு போக் சாலை வழியாகச் சென்று வெங்கட் நாராயணா சாலையில் சென்று நாகேஸ்வரன் ராவ் சாலை வழியாக வடக்கு உஸ்மான் சாலையை அடையலாம். தி.நகர் பேருந்து நிலையத்திலிருந்து வடக்கு உஸ்மான் சாலையை அடைய மேட்லி ரவுண்டானாவில் இருந்து பர்கிட் ரோடு சென்று வெங்கட் நாராயண சாலை வழியாக நாகேஸ்வர ராவ் சாலையில் இடதுபுறம் திரும்பி வடக்கு உஸ்மான் சாலையை அடையலாம். எனவே வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

சென்னை விமான நிலையத்தில் கிடந்த தங்கம்; சுங்கத்துறையினர் விசாரணை!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Gold found at Chennai airport; Customs investigation

சென்னை விமான நிலைய குப்பைத் தொட்டியில் கிடந்த தங்கத்தை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை சர்வதேச விமான நிலைய குப்பைத் தொட்டியில் கேட்பாராற்று கிடந்த ரூ.85 லட்சம் மதிப்பிலான தங்கத்தை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குப்பைத் தொட்டியில் கிடந்த 1.2 கிலோ தங்க நகைகளைக் கைப்பற்றிய சுங்கத் துறையினர், சிசிடிவியை பார்க்காதபடி நகையை குப்பைத் தொட்டியில் போட்டுச் செல்லும் நபர் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குப்பைத் தொட்டியில் கிடந்த மர்ம பார்சலில், வெடிகுண்டு இருக்குமோ என்ற சந்தேகத்தில் சோதனை நடத்திய போது, தங்கக் கட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. சென்னை விமான நிலையத்தில் ரூ.85 லட்சம் மதிப்பிலான 1.25 கிலோ தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.