திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயில் யானைகளான ஆண்டாள் மற்றும் லட்சுமி இரண்டும் குளிப்பதற்காக ஸ்ரீரங்கம் வடக்கு வாசல் பஞ்சக்கரை சாலையில் கோயிலுக்கு சொந்தமான ‘உடையவர் தோப்பில்’ 56 அடி நீளம் 56 அடி அகலம், 6.5 அடி உயரத்தில் 3 லட்சம் லிட்டர் கொள்ளவு கொண்ட புதிய நீச்சல் குளம் கட்டப்பட்டது. அந்தக் குளத்திற்கு கோயில் அர்ச்சகர் சுந்தர் பட்டர் சிறப்பு பூஜை செய்தார். பின்பு கோயில் இணை ஆணையர் செ. மாரிமுத்து முன்னிலையில் ஆண்டாள், லட்சுமி ஆகிய இரண்டு யானைகளும் முதன்முறையாக அந்தக் குளத்தில் இறக்கப்பட்டன. தண்ணீரில் இறங்கிய இரண்டு யானைகளும் ஒன்றோடு ஒன்று விளையாடி குஷியாகின.