அ.தி.மு.க.வில் ஒற்றைத் தலைமை தான் என எடப்பாடி பழனிசாமி தரப்பும், இரட்டைத் தலைமை தான் என ஓ.பன்னீர்செல்வம் தரப்பும் மாறிமாறி அணித் திரட்டிக் கொண்டிருக்கும் நிலையில், வரும் ஜூன் 23- ஆம் தேதி அன்று நடைபெறவுள்ள பொதுக்குழுவுக்கான ஏற்பாடுகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளன.
இந்த பேனரில் இரு தலைவர்களும் ஒன்றாக பூங்கொத்துடன் காட்சி அளிக்கின்றனர். ஒருபுறம் இரட்டைத் தலைமைக் கோரும் ஓ.பன்னீர்செல்வம், மற்றொருபுறம் ஒற்றைத் தலைமையில் உறுதிகாட்டும் ஈ.பி.எஸ். இருவரும் எதிரெதிர் துருவங்களில் இருக்க அவர்கள் ஒன்றாக இருக்கும் பேனர்களைக் கொண்டு அலங்கரிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு மண்டபம்.
முன்னர் சசிகலா தற்காலிக பொதுச்செயலாளராகத் தேர்வான நேரத்தில் சசிகலாவுக்கு ஜெயலலிதா பூங்கொத்து கொடுப்பது போன்ற பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. தற்போது எடப்பாடி பழனிசாமிக்கு பன்னீர்செல்வம் பூங்கொத்து கொடுப்பது போன்ற பேனர்கள் வைக்கப்படுகின்றன. பேரறிஞர் அண்ணா, எம்.ஜி.ஆர் மற்றும் ஆகியோரின் உருவங்களுடன் கூடிய பேனர்களும் பொதுக்குழுவுக்காக அமைக்கப்பட்டுள்ளன.
மேலும், முகப்பு அலங்காரங்கள், பொதுக்குழுவுக்கான அரங்க ஏற்பாடுகளை செய்யும் பணியில் 100- க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டு வருகின்றனர். இப்பணிகளை இரண்டாவது நாளாக முன்னாள் அமைச்சர் பெஞ்சமின் உள்ளிட்ட நிர்வாகிகள் ஆய்வு செய்தனர். 2,750 பேர் கலந்து கொள்ளும் வகையில் ஸ்ரீ வாரு மண்டபத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றனர்.