பொள்ளாச்சி அருகே பார்க்கிங் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின் கண்ணாடியை உடைந்து 3 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி பகுதியைச் சேர்ந்தவர் ஈஸ்வரசாமி. இவர் அப்பகுதியில் உள்ள தனியார் வங்கியில் இன்று காலை 3.17 லட்சம் ரூபாய் பணம் எடுத்துள்ளார். பணத்தை எடுத்துக்கொண்டு வீட்டிற்கு சென்றுகொண்டிருந்த அவர் அருகிலிருந்த உணவகத்தில் டீ குடிக்கச் சென்றுள்ளார். இதற்காக வண்டியை கார் பார்க்கிங் பகுதியில் நிறுத்திவிட்டு அவர் உணவகத்தின் உள்ளே சென்றுள்ளார். அவர் உணவகத்திற்குள் சென்ற சிறிது நேரத்தில் மர்ம நபர் ஒருவர் அவர் வண்டியின் அருகில் வந்துள்ளார். சிறிது நேரம் அங்குமிங்கும் பார்த்த அவர், காரின் கண்ணாடியை உடைத்து உள்ளே இருந்த பணத்தை எடுத்துக்கொண்டு அங்கிருந்து ஓடியுள்ளார். பணத்தைப் பறிகொடுத்த ஈஸ்வரசாமி இதுதொடர்பாக காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகளைச் செய்த போது இளைஞர் ஒருவர் காரின் கண்ணாடியை உடைத்து பணத்தை எடுத்துச் சென்றது தெரியவந்துள்ளது. கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட நபரை காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.