Skip to main content

அன்புமணிக்கு சந்திரபாபு நாயுடு அழைப்பு! தமிழக அரசியலில் பரபரப்பு

Published on 07/05/2024 | Edited on 07/05/2024
Chandrababu Naidu invites Anbumani Ramadoss to campaign in his favour

நாடாளுமன்றத்துக்கான நான்காம் கட்டத் தேர்தல்  வருகிற 13-ஆம் தேதி நடக்கிறது. இந்தத் தேர்தலில் நாடாளுமன்றத்தோடு சேர்த்து ஆந்திர சட்டமன்றத்துக்கும் தேர்தல் நடக்கவிருக்கிறது. இதற்காக, ஆந்திர  முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியும், எதிர்க்கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடுவும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வருகிற 11-ஆம் தேதியோடு நான்காம் கட்டத்தேர்தலுக்கான பிரச்சாரம் ஓய்கிறது.

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டாணியில் இருக்கும் சந்திரபாபு நாயுடு, குப்பம் தொகுதியில் போட்டியிடுகிறார். குப்பம் தொகுதி என்பது தமிழக எல்லையோரம் இருக்கும் தொகுதி. குறிப்பாக, திருப்பத்தூரை அடுத்து தொடங்கும் ஆந்திர எல்லையில் குப்பம் தொகுதியிருக்கிறது. பொதுவாகவே தமிழக எல்லையோரம் இருக்கும் ஆந்திர பகுதிகளில் தமிழர்களின் எண்ணிக்கை அதிகம். அந்த வகையில், குப்பம் தொகுதியிலும் தமிழர்கள் அதிகமாக இருக்கின்றனர். அதேசமயம், இந்தத் தொகுதியில் சுமார்  ஒன்னரை  லட்சம் வன்னியர் சமூகத்தினர் இருந்து வருகிறார்கள். அதனால், அவர்களின் ஆதரவைப் பெறுவதற்காக பாமக தலைவர் அன்புமணியை பிரச்சாரத்திற்காக அழைத்துள்ளார் சந்திரபாபு நாயுடு.

தேசிய ஜனநாயக கூட்டணியில் பாமகவும் இருப்பதால், சந்திரபாபுவின் அழைப்பை ஏற்று பிரச்சாரத்துக்கு வருவதாக ஒப்புக் கொண்டிருக்கிறார் அன்புமணி.  தனக்காக பிரச்சாரம் செய்ய அன்புமணியை சந்திரபாபு அழைத்த போது, இருவரும் தமிழகம், ஆந்திரம் குறித்த அரசியலை விவாதித்துக்கொண்டதுடன் தேசிய அரசியல் குறித்தும் ஆலோசித்திருக்கிறார்கள்.  சந்திரபாபு நாயுடுவின் அழைப்பை ஏற்று 11-ஆம் தேதி ஆந்திராவில் பாமக தலைவர் அன்புமணி பிரச்சாரம் மேற்கொள்கிறார்.

சார்ந்த செய்திகள்