சென்னையை அடுத்த இருங்காட்டுக்கோட்டைப் பகுதியில் அமைய உள்ள மின்னூர்தி உற்பத்தி ஆலை மூலம் 2 லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் எனத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் இன்று (11.05.2023) சென்னையில் தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட் நிறுவனம் 20,000 கோடி ரூபாய் முதலீட்டில், தொழிற்சாலையை நவீனமயமாக்கல் மற்றும் நவீன வகை கார்கள் உருவாக்குதல், மின் வாகன மின்கலன் கூட்டப்பட்ட தொகுப்பு, மின் வாகன மின்னேற்று நிலையங்கள் அமைத்தல் போன்ற திட்டங்களை மேற்கொள்ளத் தேவையான வசதிகளை செய்து தருவது குறித்து தமிழ்நாடு அரசின் வழிகாட்டி நிறுவனத்திற்கும் ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட் நிறுவனத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இவ்விழாவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், “தமிழ்நாட்டிற்கும் ஹுண்டாய் மோட்டார் நிறுவனத்திற்கும் இடையே உள்ள நம்பிக்கை மற்றும் கூட்டு முயற்சியின் காரணமாக இந்நிறுவனத்தின் மொத்த முதலீடு சுமார் 23 ஆயிரத்து 900 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இது நமக்கு பெருமை அளிக்கும் விஷயமாக அமைந்துள்ளது. தற்போது ஹுண்டாய் நிறுவனம் இந்தியாவில் இரண்டாவது பெரிய கார் உற்பத்தி நிறுவனமாகவும் கார் ஏற்றுமதியில் இரண்டாவது இடத்தில் இருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. ஆட்டோ மொபைல் மற்றும் அதன் பாகங்கள் உற்பத்தியில் தமிழ்நாடு இந்தியாவில் முதலிடத்தில் உள்ளது.
அதன் அடுத்த பரிணாம வளர்ச்சியில் ஹுண்டாய் நிறுவனம் இருங்காட்டுக்கோட்டையில் தற்போது தொழிற்சாலையான, உள்நாட்டு மற்றும் உலகளாவிய சந்தைக்கான மின்னூர்தி மையமாக மேம்படுத்தும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. இந்நிறுவனம் சுற்றுச்சூழலுக்கு உகந்த நீடித்து நிலைக்கத்தக்க தயாரிப்பினை முக்கிய கருப்பொருளாக கொண்டு 15 ஆயிரம் நபர்களுக்கு நேரடியாகவும் 2 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது” என்றார்.