Skip to main content

அம்பானி முதல் தலாய் லாமா ஆலோசகர்கள்வரை - அதிரவைக்கும் பெகாசஸ் பட்டியல்!

Published on 23/07/2021 | Edited on 23/07/2021

 

dalai lama

 

இந்தியா உட்பட உலகம் முழுவதும் பல்வேறு பத்திரிகையாளர்கள், அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் ஆகியோரது தொலைபேசிகள் பெகாசஸ் உளவு மென்பொருளால் ஹேக் செய்யப்பட்டு, ஒட்டுக் கேட்கப்பட்டதாக சர்ச்சை வெடித்துள்ளது. இந்தியாவில் 40 பத்திரிகையாளர்கள், 3 எதிர்க்கட்சித் தலைவர்கள், உச்ச நீதிமன்ற நீதிபதி, பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள இருவர், சமூக ஆர்வலர்கள், தொழிலதிபர்கள் என 300க்கும் மேற்பட்டோரின் தொலைபேசி எண்கள் பெகாசஸ் மூலம் ஹேக் செய்யப்பட்டன அல்லது ஹேக் செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன என இந்தப் பெகாசஸ் ஹேக்கிங் குறித்து 'பெகாசஸ் ப்ராஜெக்ட்' என்ற பெயரில் ஆய்வுசெய்த ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. இது பெரும் சர்ச்சையானது.

 

இந்தநிலையில், 'பெகாசஸ் ப்ராஜெக்ட்' ஆய்வில் ஈடுபட்ட ஊடகங்களில் ஒன்றான தி வயர், பெகாசஸ் விவகாரம் குறித்து தினமும் அதிர்ச்சி தகவல்களை வெளியிட்டுள்ளது. அந்த வகையில் தி வயர், தலாய் லாமாவின் ஆலோசகர்கள் மற்றும் ஆதரவாளர்களின் எண்களும் பெகாசஸ் பட்டியலில் இருந்ததாக கூறியுள்ளது.

 

2019 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு, ரஃபேல் விவகாரம் தீவிரமாக எழுப்பப்பட்டு வந்தநிலையில், அனில் அம்பானியின் தொலைபேசி எண்ணும், ரிலையன்ஸ் நிறுவனத்தின் அதிகாரி ஒருவரின் எண்ணும், ரஃபேல் விமானத்தை தயாரிக்கும் டாசல்ட் நிறுவனத்தின் இந்திய பிரதிநிதியின் எண்ணும் பெகாசஸ் பட்டியலில் சேர்க்கப்பட்டதாகவும் தி வயர் கூறியுள்ளது.

 

சிபிஐயின் இயக்குநராக இருந்த அலோக் வர்மாவும், சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானாவும் கடந்த 2018ஆம் ஆண்டு ஒருவர் மீது ஒருவர் அதிர்ச்சிகரமான குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். இதன்தொடர்ச்சியாக மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணைய பரிந்துரையின் பேரில், மத்திய அரசு இருவரையும் கட்டாய விடுப்பில் அனுப்பியது. அதன்பிறகு 2019ஆம் ஆண்டு அலோக் வர்மாவை கட்டாய விடுப்பில் அனுப்பியது செல்லாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதன்பிறகு பிரதமர் தலைமையில அப்போதைய மக்களவை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியின் பிரதிநிதி, நீதிபதி ஏ.கே. சிக்ரி ஆகியோர் அடங்கிய தேர்வுக்குழு கூட்டம் கூடி, அலோக் வர்மாவை சிபிஐ இயக்குநர் பதவியில் இருந்து நீக்கியது. குழுவில் இடம்பெற்ற இதற்கு மல்லிகார்ஜுன கார்கே மட்டும் அலோக் வர்மாவை நீக்க எதிர்ப்பு தெரிவித்தார்.

 

இந்தநிலையில், 2018ஆம் ஆண்டு, சிபிஐ இயக்குநர் அலோக் வர்மாவிற்கு கட்டாய விடுப்பு வழங்கப்பட்ட சில மணிநேரத்திலேயே, அவரது எண் பெகாசஸ் பட்டியலில் சேர்க்கப்பட்டதாக தி வயர் கூறியுள்ளது. அலோக் வர்மாவுடன் சேர்த்து அவரது மனைவி, மகள் மற்றும் மருமகனின் தனிப்பட்ட தொலைபேசி எண்கள் எண்கள் என, அலோக் வர்மாவின் குடும்பத்தாருடைய எட்டு தொலைபேசி எண்கள் பெகாசஸ் பட்டியலில் சேர்க்கப்பட்டதாகவும், மூத்த சிபிஐ அதிகாரிகள் ராகேஷ் அஸ்தானா, ஏ.கே. ஷர்மா ஆகியோரது எண்களும் பெகாசஸ் பட்டியலில் இணைக்கப்பட்டதாகவும் தி வயர் தெரிவித்துள்ளது. அலோக் வர்மாவிற்கு கட்டாய ஓய்வளிக்கப்பட்டபோது, ரஃபேல் ஊழல் குறித்த ஆவணங்களை சேகரித்ததாலேயே, அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாக ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

 

பெகாசஸ் பட்டியலில் எண் இருப்பதால் மட்டுமே, அந்த எண்கள் உளவு பார்க்கப்பட்டதாக அர்த்தமில்லை எனவும், தடயவியல் சோதனை செய்தால் மட்டுமே உளவு பார்க்கப்பட்டதா என்பதை உறுதிப்படுத்த முடியும் என தி வயர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்தல் பத்திர முறைகேடு; எஸ்.ஐ.டி. விசாரணை கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Electoral bond SIT A case in the Supreme Court for investigation

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு கடந்த 2018ஆம் ஆண்டு தேர்தல் பத்திரம் திட்டத்தை அறிமுகம் செய்தது. இந்தத் திட்டத்தின் மூலம், தனிநபர் அல்லது கார்ப்பரேட் நிறுவனங்கள், வங்கி மூலம் தேர்தல் பத்திரத்தைப் பெற்றுக்கொள்ளலாம். இந்தத் தேர்தல் பத்திரங்களில் வாங்குபவரின் பெயர், முகவரி, இந்த நிதி யாரிடம் இருந்து பெறப்பட்டது ஆகிய விவரங்கள் மற்றவர்களுக்குத் தெரியாது என்றும் கூறப்பட்டது. அந்த தனிநபரோ அல்லது கார்ப்பரேட் நிறுவனமோ இந்த பத்திரங்களை கொண்டு தங்களுக்கு விருப்பமான கட்சிகளுக்குத் தேர்தல் நிதியாக வழங்கலாம். மேலும், அந்த கட்சிகள் 15 நாட்களுக்குள் எந்தவித கட்டுப்பாடுமின்றி இதனை நிதியாக மாற்றிக் கொள்ளலாம். அப்படி இல்லையென்றால், அந்தத் தேர்தல் பத்திரத் தொகை பிரதமர் நிவாரண நிதியில் டெபாசிட் செய்யப்படும் என்று அந்தத் திட்டத்தில் கூறப்பட்டது.

இந்தத் திட்டத்தில் வெளிப்படைத்தன்மை இல்லை என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. இதையடுத்து, அரசியல் கட்சிகள் தேர்தல் பத்திரங்கள் மூலமாக நிதியைப் பெறுவது என்ற திட்டத்தை எதிர்த்து ஏடிஆர், காமன் கேஸ் உள்ளிட்ட தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மற்றும் மார்க்சிஸ்ட் சார்பில் உச்சநீதிமன்றத்தில் 4 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இது தொடர்பான வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு கடந்த பிப்ரவரி மாதம் 15 ஆம் தேதி (15.02.2024) தேர்தல் பத்திரம் திட்டம் சட்டவிரோதம் என தீர்ப்பு வழங்கியது.

இந்நிலையில் தேர்தல் பத்திர முறைகேடுகள் குறித்து சிறப்பு புலானாய்வு குழு (S.I.T. - Special Investigation Team) அமைத்து விசாரணை நடத்தக்கோரி உச்ச நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்யபட்டுள்ளது. பொதுநல வழக்குகள் மற்றும் பொதுநலன் ஆகிய அமைப்புகள் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அந்த மனுவில், “அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறை விசாரணையில் சிக்கிய பல நிறுவனஙகள் தேர்தல் பத்திரங்கள் மூலம் நிதி அளித்துள்ளதால் விரிவான விசாரணை தேவை. முக்கிய விசாரணை அமைப்புகளான சிபிஐ, அமலாக்கத்துறை, வருமான வரித்துறை ஆகியவை ஊழலுக்கு துணை போயிருக்கின்றன. எனவே இது தொடர்பாக சிறப்பு புலானாய்வு குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

குட்கா வழக்கு; சி.பி.ஐக்கு சென்னை சிறப்பு நீதிமன்றம் கடும் கண்டனம்!

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
Chennai special court strongly condemns CBI at vijayabaskar case

தமிழகத்தில் குட்கா பொருட்கள் விற்பனை மற்றும் கிடங்குகளில் அவற்றை வைத்திருப்பதற்குத் தடை விதிக்கப்பட்டது. ஆனால் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து தடையை மீறி குட்கா பொருட்கள் விற்கப்பட்டதாகவும், வரி ஏய்ப்பு நடைபெற்றதாகவும் வருமான வரித்துறையினர் கடந்த 2016 ஆம் ஆண்டு பல இடங்களில் சோதனை நடத்தினர். இந்தச் சோதனையில், குட்கா கிடங்கு உரிமையாளர் மாதவராவ், சீனிவாசராவ், உமாசங்கர் குப்தா உள்ளிட்ட ஆறு பேருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்து, கைது செய்யப்பட்டதோடு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா, முன்னாள் டி.ஜி.பி,  மற்றும் முன்னாள் காவல்துறை அதிகாரிகள், மத்திய, மாநில அரசு அதிகாரிகள் என 11 பேருக்கு எதிராக கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அந்தக் குற்றப்பத்திரிக்கையில் பல்வேறு தவறுகள் இருப்பதால் அவற்றைத் திருத்தி மீண்டும் தாக்கல் செய்ய சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து, முன்னாள் அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு எதிரான இந்த வழக்கில் விசாரணை நடத்த கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்தார். 

இந்த நிலையில், இந்த வழக்கு தொடர்பான விசாரணை சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி மலர் வாலண்டினா முன்பு இன்று (15-04-24) விசாரணைக்கு வந்தது. அப்போது சி.பி.ஐ தரப்பில், வழக்கின் விசாரணைக்காக ஒப்புதல் அனுமதி இன்னும் கிடைக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, நீதிமன்ற நீதிபதி, ‘அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா உள்ளிட்டோர் மீதான குட்கா வழக்கை கடந்த மூன்று ஆண்டுகளாக இழுத்தடிப்பதா? எனக். கூறி கண்டனம் தெரிவித்தார். மேலும், வழக்கின் நிலை என்ன என்பது தொடர்பாக அடுத்த விசாரணையின் போது பதில் அளிக்க வேண்டும் என்று சி.பி.ஐக்கு உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை மே மாதம் 2ஆம் தேதி ஒத்தி வைத்தார்.