Skip to main content

"கவலைக்குரிய விஷயம்" - தமிழகம் உள்ளிட்ட ஒன்பது மாநிலங்களுக்கு மத்திய சுகாதாரத்துறை கடிதம்!

Published on 06/01/2022 | Edited on 06/01/2022

 

corona

 

இந்தியா முழுவதும் கரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்து வருகிறது. அதேபோல் இந்தியாவில் ஒமிக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நபர்களின் எண்ணிக்கையும் 2600- ஐ கடந்துள்ளது. இந்தநிலையில் மத்திய சுகாதார அமைச்சகம், தமிழ்நாடு உள்ளிட்ட 9 மாநிலங்களுக்கு கரோனா பரிசோதனைகள் தொடர்பாக கடிதம் எழுதியுள்ளது.

 

மத்திய சுகாதார அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் ஆர்த்தி அஹுஜா, தமிழ்நாடு, பஞ்சாப், ஒடிசா, உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், மிசோரம், மேகாலயா, ஜம்மு காஷ்மீர் மற்றும் பீகார் உள்ளிட்ட ஒன்பது மாநிலங்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், கரோனா பரிசோதனைகளின் எண்ணிக்கை குறைந்திருப்பதை சுட்டிக்காட்டி, அது கவலைக்குரிய விஷயம் என கூறியுள்ளார்.

 

"போதுமான சோதனை இல்லாத போது, சமூகத்தில் பரவியுள்ள நோய்த்தொற்றின் உண்மையான அளவைக் கண்டறிவது சாத்தியமற்றது" என தனது கடிதத்தில் கூறியுள்ள ஆர்த்தி அஹுஜா, "கவலைக்குரிய கரோனா வகையான ஒமிக்ரான் அதிகளவில் கண்டறியப்படுகிறது. அதிகளவில் தடுப்பூசி செலுத்திய பிறகும் பெரும்பாலான நாடுகள் கரோனா பரவல் அதிகரிப்பை கண்டு வருகின்றன. இந்தநிலையில் கரோனா நிலை மோசமடைவதை தடுக்க தொடர் முயற்சிகளும் விழிப்புணர்வும் தேவை" என குறிப்பிட்டுள்ளார்.

 

"ஒமிக்ரானின் கணிக்க முடியாத மற்றும் மிகவும் பரவக்கூடிய தன்மையையும் மற்றும் அறிகுறியற்ற பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகம் இருப்பதையும் மனதில் வைத்து, ஆரம்ப நாட்களிலேயே சோதனையை அதிகரிப்பது, பாதிக்கப்பட்ட நபர் மற்றவர்களுக்கு வைரஸைப் பரப்பாமல் இருப்பதை உறுதிசெய்ய உதவும்" எனவும் தனது கடிதத்தில் கூறியுள்ள ஆர்த்தி அஹுஜா, கரோனா பரிசோதனைக்கு பயன்படுத்தப்படும் இரசாயனம், கருவிகள், சோதனை வசதிகள் ஆகியவற்றின் போதுமான இருப்பை உறுதி செய்யுமாறும் அறிவுறுத்தியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

படையெடுக்கும் புலிகள்; பாதுகாப்பு வளையத்தில் மூணாறு !

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 Invading Tigers; Munnar in the observation ring

கோடை வெயிலின் தாக்கத்தால் வனப்பகுதியை விட்டு வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேவைக்காக கிராமங்களுக்கு நுழைவது தொடர்கதையாகி வருகிறது. வனத்துறை சார்பில் வனவிலங்குகளுக்கு தண்ணீர் தொட்டிகள் திறக்கப்பட்டு வரும் நிலையில் அதையும் மீறி பல்வேறு இடங்களில் யானை, சிறுத்தை உள்ளிட்ட விலங்குகள் வனத்தை விட்டு வெளியேறி உணவிற்காக கிராமங்களுக்குள் நுழைவது வாடிக்கையாகி வருகிறது.

அண்மையில் மயிலாடுதுறையில் புகுந்த சிறுத்தை தற்பொழுது வரை மர்மமாகவே நீடித்து வருகிறது. இந்நிலையில் தமிழக-கேரள எல்லையான மூணாறு பகுதியில் சர்வ சாதாரணமாக புலி நடமாட்டம் இருப்பது அந்த பகுதி மக்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. கன்னிமலா பகுதியில் உள்ள தேயிலை எஸ்டேட் பகுதியில் புலிகள் நடமாட்டம் இருப்பதாக தோட்டத் தொழிலாளர்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தற்போது இது தொடர்பாக வெளியாகி உள்ள வீடியோ ஒன்றில் மூன்று புலிகள் தேயிலை எஸ்டேட் பகுதியில் இருந்து வனப்பகுதிக்குள் நுழைவது போன்ற வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அந்த புலிகளை பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் இறங்கியுள்ளனர். புலிகள் நடமாட்டம் இருப்பதால் அந்தப் பகுதி மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என வனத்துறை சார்பில் அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது.

Next Story

“பாஜகவுக்கு தமிழகத்தின் மீது இருப்பது கோபமல்ல; தீராத வன்மம்” - சு.வெங்கடேசன்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
BJP unending anger towards Tamil Nadu says Su. Venkatesan

திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து தென்மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களும் அதிக கனமழையினால் பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது.

அதே சமயம் மிக்ஜாம் புயல் மற்றும் தென் மாவட்ட வெள்ள பாதிப்புகளுக்கு நிவாரணம் கோரி தமிழக முதலமைச்சரும், தலைமைச் செயலாளரும் மத்திய அரசுக்கு பலமுறை கடிதம் அனுப்பியும் மத்திய அரசு  நிதி வழங்காமல் இருந்தது. இந்த நிலையில்,  தமிழ்நாட்டில் ஏற்பட்ட மிக்ஜாம் புயல் நிவாரண நிதியாக ரூ.285 கோடியை வழங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. மேலும், தமிழகத்தில் 2023 டிசம்பர் மாதத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளுக்காக ரூ.397 கோடி வழங்கவும் மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

அதில் முதற்கட்டமாக ரூ.285 கோடி மிக்ஜாம் புயல் பாதிப்புக்கான நிதியில் இருந்து ரூ.115 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது. அதே போல், வெள்ள பாதிப்புக்காக மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ள ரூ.397 கோடி நிதியில் இருந்து ரூ.160 கோடியை தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு விடுவித்துள்ளது. அதே சமயம் கர்நாடகாவிற்கு வறட்சி நிவாரணமாக ரூ.3,454 கோடியை மத்திய அரசு அறிவித்துள்ளது.

மிக்ஜாம் புயல், வெள்ள பாதிப்புகளுக்காக தமிழ்நாடு அரசு ரூ.38,000 கோடி நிவாரணம் வழங்க கோரியிருந்த நிலையில், மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு குறைந்தபட்ச அளவில் நிவாரண நிதி வழங்கியுள்ளதாக பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் மதுரை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் சு.வெங்கடேசன் பாஜக தமிழகத்திற்கு வஞ்சனைக்கு மேல் வஞ்சனை செய்வதாக குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “கர்நாடகாவில் முதல் கட்டம் சாதகமாக இல்லை போல, வறட்சி நிவாரணம் என ரூ.3454 கோடி அறிவிப்பு. தமிழ்நாட்டிற்கு வஞ்சனைக்கு மேல் வஞ்சனை. மிக் ஜாம் புயல் மற்றும் வெள்ளத்திற்கு ரூ.275 கோடி மட்டுமே. தமிழ்நாடு  கேட்டதோ 38,000 கோடி. பாஜகவுக்கு தமிழகத்தின் மீது இருப்பது கோபமல்ல… வன்மம். தீராத வன்மம்” எனக் கடுமையாக சாடியுள்ளார்.