Skip to main content

இப்ப தெரியுதா ஏன் மோடி தமிழ் பேசுறார்னு...  ஏன் இப்படி பா.ஜ.க. கிளம்பியுள்ளது? வெளிவராத தகவல்!

Published on 11/11/2019 | Edited on 11/11/2019

"இப்ப தெரியுதா மோடிஜி ஏன் தமிழர்களையும், தமிழையும், தமிழ் இலக்கியங்களையும், திருவள்ளுவரையும் தூக்கிப் பிடிக்கிறார் என்று. கொஞ்சம் கொஞ்சமாக இந்து மத சாயம் பூசத்தான் இப்படி எல்லாம் செய்து வருகிறார்'' -இப்படிக் கேட்பது கிராமத்து டீக் கடையில் இருந்து தினசரி பத்திரிகையை படித்துக்கொண்டிருந்த வயது முதிர்ந்த விவசாயி. அவர் சொல்வதிலும் முற்றிலும் உண்மைகள் இருப்பதை நம்மால் உணர முடிகிறது. 
 

bjp



தாய்லாந்து மொழி'யில் திருக்குறளை வெளியிட்ட அடுத்தகணமே திருவள்ளுவருக்கு பா.ஜ.க. இணையதளத்தில் காவி பூசப்பட்டு பட்டையும், கொட்டையும் சார்த்தப்படுகிறது. அதற்கு தமிழ்நாட்டில் எதிர்ப்புகள் எழுந்த நிலையில் தஞ்சை பிள்ளையார்பட்டியில் கிராம மக்களால் 15 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்டிருந்த திருவள்ளுவர் சிலை அவமதிக்கப்பட்டது. அதன் பிறகு போலீசார் குவிக்கப்பட்டனர். சிலை சரிசெய்யப்பட்டது. சிலை அருகில் ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. தஞ்சை தமிழ்ப் பல்கலை மாணவர்கள் ஆர்ப்பாட்டங்கள் செய்தனர். சிலையை அவமதித்த நபரை விரைவில் பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக போலீசார் சொல்லிக்கொண்டிருந்தனர். ஆனால் வழக்கம்போல யாரையும் பிடிக்கவில்லை. (போராட்டங்கள் வலுப்பெற்றால் கடைசியில் ஒரு சைக்கோ செய்தான் என்று வழக்கு முடித்து வைக்கப்படும் என்பது வேறு)

 

dk



இந்த நிலையில்தான் 6-ந் தேதி தஞ்சை ராஜராஜன் சதய விழாவிற்கு தலைவர்கள் வந்து சிலைக்கு மாலை அணிவித்தனர். அந்த வகையில்தான் இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத், ராஜராஜன் சிலைக்கு மாலை அணிவித்த கையோடு தனது ஆதரவாளர்கள் சிலருடன் பிள்ளையார்பட்டிக்குச் சென்றார். திருவள்ளுவர் சிலைக்கு காவித்துண்டு, உத்திராட்ச மாலை அணிவித்து, திருநீறு பூசி, தீபாராதனை காட்டினார். அந்த நேரத்தில் கீழே நின்றவர்கள் "ஓம் காளி... ஜெய் காளி' என்று கோஷங்களை எழுப்பி திருவள்ளுவரை காவிகளின் தலைவராக்கினார்கள்.

 

bjp



திருவள்ளுவருக்கு காவி அணிவித்த பிறகு ராஜராஜன் அடக்கம் செய்யப்பட்ட இடமாக சொல்லப்படும் உடையாளூர் சென்று மாலை அணிவித்துவிட்டு, வெளியே வந்தபோது வல்லம் டி.எஸ்.பி. சீதாராமன் தலைமையிலான போலீசார் அர்ஜுன் சம்பத், இளைஞரணி மாநில பொதுச் செயலாளர் குருமூர்த்தி ஆகியோரை கைதுசெய்து தஞ்சை பல்கலைக்கழக காவல்நிலையத்திற்கு கொண்டுசென்றனர். அதற்குள் பல இடங்களில் இருந்தும் போலீசாருக்கு நெருக்கடி.


இந்த நிலையில்தான் பிள்ளையார்பட்டி கிராம நிர்வாக அலுவலர் வாசுதேவன் கொடுத்த புகாரின் அடிப்படையில் அர்ஜுன் சம்பத், குருமூர்த்தி, கார்த்திக் ராவ் உள்ளிட்ட 3 பேர் மீதும் கலகம் செய்யத் தூண்டுதல், மத, இன, மொழி, சாதி, சமயம் தொடர்பான விரோத உணர்வுகளைத் தூண்ட முயற்சி செய்தல், பொதுஅமைதிக்கு பங்கம் விளைவித்தல் போன்ற பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். ஆனால் இத்தனை பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தாலும் பல நெருக்கடிகளால் சிறைக்கு அனுப்ப வேண்டியவரை அவரது காரில் ஏற்றி அனுப்பி வைத்த போது... 20-ந் தேதி விசாரணைக்கு ஆஜராக வேண்டும் எனச் சொல்லி அனுப்பினார்கள்.

 

Seshan


 

வெளியே வந்த அர்ஜுன் சம்பத், "காலங்காலமாக திருவள்ளுவரை இப்படித் தான் பார்த்தோம். அதன்படியே நாங்களும் வழிபட்டோம். எதிர்க்கட்சிகளின் தூண்டுதலால்தான் வழக்குப்பதிவு செய்துள்ளனர்'' என்று சொல்லிவிட்டுச் சென்றார். இந்நிலையில்... பிள்ளையார்பட்டி திருவள்ளுவர் சிலை மீதான காவி அடை யாளம் அகற்றப்பட்டு சிலையைச் சுற்றி இரும்பு வேலி அமைக்கப்பட்டுள்ளது. தி.க. தலைவர் கி.வீரமணி மாலை அணிவித்து மரியாதை செய்தார். தமிழ்நாட்டில் தேசியம், திராவிடம், தமிழ்த் தேசியம் என்று அரசியல் ரீதியாக பிரிந்து நின்றாலும் திருவள்ளுவரை தமிழராக மட்டுமே பார்க்கிறார்கள். அதனால்தான் இதுவரை எந்த அமைப்பும் சொந்தம் கொண்டாடவில்லை. ஆனால் பா.ஜ.க. மதச்சாயம் பூசி இந்துவாக்க நினைக்கிறது.


ஏன் இப்படி பா.ஜ.க. கிளம்பியுள்ளது? என்ற நமது கேள்விக்கு, சாமானிய மக்கள் சொல்லும் பதில்... பா.ஜ.க. கால் ஊன்ற முடியாத நிலையில் அந்த இடங்களில் இப்படி "இந்து' என்கிற மதச் சாயத்தை தூண்டிவிட்டு அதன்மூலம் கால்ஊன்ற நினைப்பது வழக்கம். அதாவது கட்சிகள் மாறி இருந்தாலும் பலர் கடவுள் நம்பிக்கை உள்ளவர்களாக இருப்பார்கள். அவர்களைக் கவர்ந்து தமிழ்நாட்டில் தாமரை மலர்ந்துவிடும் என்பதற்காகத்தான் இப்படிக் கிளப்பி விடுகிறது.

அதுபோலத்தான் இப்ப திருவள்ளுவரை கடவுள் ஆக்கிவிட்டால், அதை தமிழகத்தில் உள்ள திராவிட, தமிழ்த் தேசிய கட்சிகள் எதிர்க்கும். அந்தச் சந்தர்ப்பத்தில் "இந்து கடவுளை எதிர்க்கிறார்கள்' என்று பொய் பிரச்சாரங்களை முன்னெடுத்துச் சென்று எதிர்க்கும் கட்சிகளில் உள்ள கடவுள் நம்பிக்கை உள்ளவர்களை தங்கள் பக்கம் இழுக்கலாம் என்பதே அவர்களின் நோக்கம்.

ஆனால் தமிழ்நாட்டில் அது எடுபடாது. தாமரையை மலர வைக்க வள்ளுவர் உதவமாட்டார் என்பதை அவர்கள் உணரவில்லை. இதற்கு அ.தி.மு.க. அரசும் துணைபோகிறது. அதனால்தான் அமைச்சர் பாண்டியராஜன், "திருவள்ளுவர் இந்து என அவர்கள் சொல்கிறார்கள். கிறிஸ்தவர்கள் சிலுவை போட்டாலும், இஸ்லாமியர்கள் தொப்பி அணிவித்தாலும் நாங்கள் ஏதும் சொல்வதற்கில்லை'' என்றார்.

பிள்ளையார்பட்டி வள்ளுவர் சிலைக்கு காவி கட்டி, உத்திராட்ச மாலை அணிவித்த அர்ஜுன் சம்பத் வகையறாக்கள், சிதம்பரம் நடராஜர் சிற்றம்பலத்தில் திருக்குறளையோ, தேவாரத்தையோ பாட முடியுமா? இதுதான் இவர்கள் சொல்லும் இந்து தர்மமா? எனக் கேட்கிறார்கள் தமிழக பக்தர்கள்.

 

Ayodhya



 

 

Next Story

ரூ. 4.8 கோடி பறிமுதல்; பாஜக வேட்பாளர் மீது வழக்குப்பதிவு!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Rs. 4.8 crore forfeited Case filed against BJP candidate

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது.

இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அசாம், பீகார், சத்தீஸ்கர், கர்நாடகா, கேரளா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், மேற்கு வங்கம், திரிபுரா, மணிப்பூர் மற்றும் ஜம்மு-காஷ்மீரில் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் உள்ள 87 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அந்த வகையில் கேரளாவில் 20, கர்நாடகாவில் 14, ராஜஸ்தானில் 13, மத்தியப் பிரதேசத்தில் 6, மகாராஷ்டிராவில் 8, உத்தரப் பிரதேசத்தில் 8, அசாமில் 5, பீகாரில் 5, சத்தீஸ்கரில் 3, மேற்கு வங்கத்தில் 3, ஜம்மு காஷ்மீர் மற்றும் திரிபுராவில் தலா 1 தொகுதிகள் என மொத்தம் 87 தொகுதிகள் தேர்தல் நடைபெறுகிறது. மத்தியப் பிரதேசத்தில் உள்ள ஒரு தொகுதியில் வேட்பாளர் மரணமடைந்ததால் அந்த தொகுதியில் மட்டும் மே 7ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

மேலும் பதற்றமான வாக்குச்சாவடிகள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் தீவிர கண்காணிப்பு பணியில் போலீசார் மற்றும் துணை ராணுவப் படையினர் ஈடுபட்டுள்ளனர். கேரள மாநிலம் வயநாட்டில் மாவோயிஸ்டுகள் அச்சுறுத்தல் உள்ள வாக்குச்சாவடிகளில் தீவிர கண்காணிப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கர்நாடகாவில் மொத்தமுள்ள 28 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ள பெங்களூரு தெற்கு, ஹாசன், தட்சிண கன்னடா, மைசூரு, மாண்டியா உள்ளிட்ட 14 தொகுதிகளில் இன்று மாலை வரை 144 தடை அமல்படுத்தப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது. 2ஆம் கட்ட தேர்தலில் சுமார் 15.88 கோடி பொதுமக்கள் வாக்களிக்க உள்ளனர். இதற்காக பொதுமக்கள், அரசியல் கட்சி தலைவர்கள், பிரபலங்கள் எனப் பலரும் காலை முதல் ஆர்வத்துடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். 

Rs. 4.8 crore forfeited Case filed against BJP candidate

முன்னதாக கர்நாடகாவின் சிக்கபல்லாபூர் தொகுதி பாஜக வேட்பாளர் கே. சுதாகருக்கு நெருக்கமானவர் வீட்டில், தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக வைக்கப்பட்டிருந்த ரூ. 4.8 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. வாக்காளர்களுக்கு கொடுக்க ரூ. 4.8 கோடியை பாஜக வேட்பாளர் சுதாகர் பயன்படுத்த இருந்ததாக பறக்கும்படை அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் இது குறித்து சுதாகர் மீது வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக குற்றவியல் சட்டம் மற்றும் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ் மாதநாயகனள்ளி காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு தொடங்குவதற்கு சில மணி நேரத்திற்கு முன்னதாக பாஜக வேட்பாளருக்கு ஆதரவாக வாக்களிக்க, வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக வைத்திருந்த பணம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

பாஜக உட்கட்சி மோதல்; 3 பேரிடம் போலீசார் விசாரணை!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Police investigation of 3  BJP people 

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதில் முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

இத்தகைய சூழலில் சென்னை பாஜக கிழக்கு மாவட்ட பொதுச்செயலாளராக இருக்கும் முத்து மாணிக்கம் என்பவர் கடந்த 20ஆம் தேதி துரைப்பாக்கம், மேட்டுக்குப்பம் பகுதியில் பாஜக கட்சி நிர்வாகியான ஜெகநாதன் என்பவரின் வீட்டில் ஆலோசனை நடத்திக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த பாஜக நிர்வாகிகளான டிக்காராம், வெங்கட் என சிலர் மக்களவை தேர்தலின் போது பூத் ஏஜெண்ட் ஆக வேலை செய்ததற்கு பணம் தரவில்லை எனக்கூறி முத்து மாணிக்கத்திடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் அவருக்கு கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர்.

இதனையடுத்து முத்து மாணிக்கம் அளித்த புகாரின் பேரில் பாஜகவினர் 8 பேர் மீது, கொலை மிரட்டல் உள்ளிட்ட 5 பிரிவுகளில் துரைப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் பாஜகவின் துரைப்பாக்கம் மண்டல துணைத் தலைவர் வாசு, 95 ஆவது வட்டத் தலைவர் ஜெயக்குமார், 191 வது வார்டு வட்டத் தலைவர்  வெங்கடேசன் ஆகிய 3 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். பூத் ஏஜெண்ட்களுக்கு வழங்கப்பட்ட பணத்தை பிரிப்பதில் ஏற்பட்ட தகராற்றில் பாஜக மாவட்ட செயலாளருக்கு சொந்த கட்சியினரே கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.