Skip to main content

தயாநிதி மாறனுக்கு சாதகமா மத்திய சென்னை ?

Published on 01/04/2019 | Edited on 01/04/2019

தி.மு.க.வின் வெற்றிக்கோட்டையாக இருந்த மத்திய சென்னையை கடந்தமுறை வேட்டையாடிய அ.தி.மு.க. 2019 நாடாளுமன்றத்தேர்தலில் கூட்டணிக் கட்சியான பா.ம.க.வுக்கு ஒதுக்கிவிட்டது. ஏற்கனவே, இரண்டுமுறை வெற்றிபெற்று எம்.பி.யாக இருந்த தயாநிதிமாறன். கடந்தத் தேர்தலில் தோல்வியை சந்தித்தாலும் துவண்டு போகாமல், மீண்டும் அதே தொகுதியில் சீட் கொடுத்திருக்கிறது தி.மு.க. 

 

dhayanidhi maran



இந்தப் பக்கம் தி.மு.க. தயாநிதிமாறன், அந்தப் பக்கம் அ.ம.மு.க. டி.டி.வி. தினகரனின் வேட்பாளர் தெஹலான் பார்கவி இருக்க...…"அவுங்க லெவலுக்கு எங்களால் செலவு செய்ய முடியாது' என்று பா.ம.க. வேட்பாளர்கள் பின்னங்கால் பிடரியில் அடிக்க ஓட... ‘"அ.தி.மு.க. வேட்பாளர் நின்னா, நிர்வாகிகளுக்கு செய்யவேண்டிய ஏ டூ இசட் செலவுகளையும் நான் பார்த்துக்கிறேன்'’ என்று தில்லுதுரையாக முன் வந்தவர்தான் தொழிலதிபரும் வேட்பாளருமான சாம் பால்.

தயாநிதிக்காக எழும்பூர், துறைமுகம், வில்லிவாக்கம் தொகுதிகளை தி.மு.க. மாவட்டச் செயலாளர் சேகர்பாபு கவனித்துக்கொள்கிறார். மீதமுள்ள திருவல்லிக்கேணி-சேப்பாக்கம், ஆயிரம் விளக்கு, அண்ணா நகர் தொகுதிகளை மா.செ.வான ஜெ.அன்பழகன் கவனித்துக்கொள்கிறார். 
 

kameela nasser



கடந்த நாடாளுமன்றத்தேர்தலில் திருவல்லிக்கேணி-சேப்பாக்கம் சட்டமன்றத் தொகுதியின் ஜெ. அன்பழகனைத் தவிர்த்து திரும்பும் திசையெல்லாம் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களின் கட்டுப்பாட்டில் இருந்தது. இந்தப் பக்கம் திரும்பினால் அண்ணாநகர் கோகுலஇந்திரா, அந்தப் பக்கம் திரும்பினால் ஆயிரம்விளக்கு வளர்மதி, மற்றொரு பக்கம் திரும்பினால் கூட்டணிக் கட்சியான எழும்பூர் நல்லத்தம்பி, இன்னொரு பக்கம் திரும்பினால் துறைமுகம் பழ.கருப்பையா என திக்குமுக்காடிப் போனார் தயாநிதிமாறன். இதனால், இவரை எதிர்த்துப் போட்டியிட்ட அ.தி.மு.க. விஜயகுமார் 3,33,296 வாக்குகள் பெற்று எம்.பியானார்.  தயாநிதிமாறன் 2,87,455 வாக்குகள் பெற்றார்.  

இந்தமுறை அப்படியல்ல. அண்ணாநகர், வில்லிவாக்கம், ஆயிரம்விளக்கு, எழும்பூர்,  துறைமுகம், திருவல்லிக்கேணி-சேப்பாக்கம் ஆகிய மத்தியசென்னை நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலுமே தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் இருப்பதால் தேர்தல் வேலைகளை சிறப்பாக செய்வார்கள் என்ற நம்பிக்கையில் உள்ளார் தயாநிதிமாறன். "வெறும் நம்பிக்கை வைத்தால் போதுமா? கூட்டணிக்கட்சியான பா.ம.க. வேட்பாளருக்கு இருக்கும் தாராள மனசு தயாநிதிக்கு வரவேண்டுமல்லவா?' என்று எதிர்கேள்வி எழுப்புகிறார்கள் மத்தியசென்னை தி.மு.க. நிர்வாகிகள். "இந்தத் தடவையும் தயங்கினார்னா, தி.மு.க. கோட்டையாக இருந்தது அ.தி.மு.க. கோட்டையா மாறிடும்' என்று எச்சரிக்கிறார்கள். 

லட்சத்திற்கும்மேலான முஸ்லிம் சமுதாய ஓட்டுகளை குறிவைத்து எஸ்.டி.பி.ஐ. கட்சியின் பொதுச்செயலாளர் தெஹலான் பார்கவியை களமிறக்கியிருக்கிறது அ.ம.மு.க. இப்படி, மும்முனை தேர்தல் செலவுகள் இருக்கும் என்பதால்தான் அனைத்து தொகுதிகளுக்கும் இரண்டு செலவின பார்வையாளர்களை தேர்தல் ஆணையம் நியமித்திருந்தாலும் மத்திய சென்னைக்கு மட்டும் மூன்று செலவின பார்வையாளர்களை நியமித்துள்ளது. 

 

sham paul



என்னதான் செலவின பார்வையாளர்கள் கண்ணில் விளக்கெண்ணெய் ஊற்றி கணக்கிட்டாலும், வேட்பாளர்கள் தங்களது செலவை குறைத்துதான் காண்பிப்பார்கள். அதுவும், ஒரு வேட்பாளர் 70 லட்ச ரூபாய்க்குமேல் செலவு செய்யக்கூடாது என்று நிர்ணயித்திருக்கிற தேர்தல் ஆணையம், வேட்பாளரை நிறுத்துகிற கட்சியானது எவ்வளவு கோடிகள் வேண்டுமானாலும் தேர்தலில் செலவு செய்யலாம் என்று லூப்ஹோலை வைத்திருக்கிறது. இதைப் பயன்படுத்தி தி.மு.க., அ.தி.மு.க., அ.ம.மு.க. உள்ளிட்ட வேட்பாளர்கள் வாக்காளர்களை விலைக்கு வாங்கப்போகிறார்கள். அதனால், "கூடுதல் செலவின பார்வையாளர்கள் என்பது அவர்களுக்கு கொடுக்கப்படும் சம்பளம்தான் கூடுமே தவிர... நோக்கம் நிறைவேறாது' என்கிறார்கள் ஊழலுக்கு எதிரான அமைப்பினர்.

அ.தி.மு.க. கூட்டணி பா.ம.கவும் தே.மு.தி.க.வும் பா.ஜ.க. ஆதரவுபெற்ற கட்சிகள்தான். அதனால், முஸ்லிம் சமுதாய ஓட்டுகளை பா.ஜ.க.வுக்கு எதிரான தி.மு.க. கூட்டணிக்குத்தான் போடவேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சி உட்பட முஸ்லிம் அமைப்புகள்  ஜமாத்தில் பேசிவருகிறார்கள். மேலும், மார்வாடிகளின் ஓட்டுகளும் மத்திய சென்னை வெற்றியை தீர்மானிக்கக்கூடியது. "மார்வாடிகளோ மோடிதான் வரவேண்டும்' என்று நினைப்பவர்கள். ஆனாலும் மார்வாடிகள் ஏரியாவில் தனிப்பட்ட செல்வாக்கு கொண்ட தயாநிதிமாறன் அவர்களின் ஓட்டுகளை தனக்கு சாதகமாக்கும் வேலைகளில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார். 

மக்கள் நீதி மய்யத்தின் மத்திய சென்னை மா.செ. கோமகனுடன் சென்று மனு தாக்கல் செய்தார் நட்சத்திர வேட்பாளரான கமீலாநாசர்.  தயாநிதிக்கு தனிப்பட்ட முறையில் ப்ளஸ், மைனஸ் இரண்டும் கலந்திருந்தாலும் மத்திய சென்னையில் தி.மு.க.வுக்கு உள்ள செல்வாக்கு கைகொடுக்கிறது.  எனினும், தாராளமான  செலவினால் அ.தி.மு.க. கூட்டணியில் உள்ள பா.ம.க. வேட்பாளரும், அ.ம.மு.க. அணியில் உள்ள எஸ்.டி.பி.ஐ. வேட்பாளரும் கடும் போட்டியை உருவாக்கியிருக்கிறார்கள்.

 

Next Story

'இபிஎஸ்சிற்கு பயந்துதான் சில முன்னாள் எம்.எல்.ஏக்கள் அப்படி செய்தார்கள்'-டி.டி.வி.தினகரன் ஓபன் டாக்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
NN

தமிழகத்தில் முதல் கட்ட மக்களவைத் தேர்தல் நடந்து முடிந்திருக்கும் நிலையில் வாக்கு எண்ணிக்கை ஜூன் நான்காம் தேதி நடைபெற இருக்கிறது. மற்ற மாநிலங்களில் தேர்தல் பரப்புரைகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக இறங்கி வருகின்றன.

இந்தநிலையில் பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் அமமுகவின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தேனியில் போட்டியிட்ட நிலையில், அங்கு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், ''1999 இல் நான் முதன்முதலாக தேர்தலில் நின்றேன். அப்போதெல்லாம் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் இல்லை. 2001 சட்டமன்றத் தேர்தலிலும் கிடையாது. உள்ளாட்சித் தேர்தலிலும் கிடையாது. பாராளுமன்றத் தேர்தலிலும் இல்லை. 2006 சட்டமன்றத் தேர்தலிலும் நான் இங்கு நின்றேன் அப்போதும் தேர்தலில் யாரும் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் கிடையாது. 2011 க்கு பிறகு ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் தமிழக முழுவதும் பரவி விட்டது.

ஆர்.கே.நகரில் போட்டியிட்ட போது கூட நான் ஓட்டுக்கெல்லாம் பணம் கொடுக்கவில்லை. என்னைச் சேர்ந்த சில முன்னாள் எம்எல்ஏக்கள் எடப்பாடி பழனிசாமி ஓட்டுக்கு 6 ஆயிரம், 10 ஆயிரம் கொடுத்ததால் அதற்குப் பயந்து போய் பார்த்த இடத்தில் ஒரு பத்திருவது வீடுகளுக்கு டோக்கன் ஏதோ கொடுத்ததாக தகவல் வந்தது. ஆனால் அதை நான் நிறுத்தி விட்டேன். ஆனால் எல்லாரும் டோக்கன் கொடுத்தார் டோக்கன் கொடுத்தார் என்று சொல்கிறார்கள். இங்கே இந்தத் தேர்தலில் யார் டோக்கன் கொடுத்தார்கள் என்று உங்களுக்குத் தெரியும். நான் தேனியில் நிற்பதால் மட்டும் சொல்லவில்லை தேனி மக்களுக்கு என்னை நன்றாகத் தெரியும். ஏற்கெனவே நான் எம்பியாக இருந்த பொழுது மக்கள் கேட்டதெல்லாம் செய்திருக்கிறேன். ஊர் பொதுக் காரியத்திற்கு அரசாங்கத்தின் மூலம் எல்லாம் செய்ய முடியாது. நான் அவர்களுக்கு தனிப்பட்ட முறையில் என்னால் முடிந்த அளவுக்கு செய்துள்ளேன். அதேபோல் தனி நபர்களுக்கு உதவி செய்திருக்கிறேன். கட்சி ஜாதி வித்தியாசம் இல்லாமல் உதவி செய்திருக்கிறேன்''என்றார்.

Next Story

'வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உத்தரவாதம்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns


18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் களைகட்டி வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும்.

அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்குக் கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார். பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது.

பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்துள்ளனர். சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns

இந்நிலையில் பிரதமர் மோடியின் பேச்சுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 'பிரதமர் மோடியின் நச்சு பேச்சு கேவலமானது, மிகவும் வருந்தத்தக்கது. மக்களின் கோபத்திற்கு அஞ்சி மத உணர்வுகளைத் தூண்டி வெறுப்பு பேச்சை நாடி உள்ளார் பிரதமர் மோடி. பிரதமரின் அப்பட்டமான வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடுநிலைமையைக் கைவிட்டு விட்டது. வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உண்மையான உத்தரவாதம்' என  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.