Skip to main content

இனி என்னத்த பேசி, என்னத்த பண்றது...

Published on 14/11/2017 | Edited on 14/11/2017

ந்தப் பட்டியல் இந்தப் பெயர்களைத் தாண்டியும் நீளும் என்றாலும் பேரறிஞர் அண்ணா, பேராசிரியர் அன்பழகன், கலைஞர், நாவலர் நெடுஞ்செழியன், நாஞ்சில் மனோகரன், என்.வி.நடராசன், இளம்வழுதி, இளம்பரிதி, அன்பில் தர்மலிங்கம், கே.வி.கே.சாமி, கம்பம் நடராசன், துரைமுருகன், வைகோ, அக்கினி ராசு,  கோவை ராமநாதன், விடுதலை விரும்பி, ரகுமான்கான், ஜி.எம்.ஷா, பி.டி.ஆர்.பழனிவேல்ராஜன், நன்னிலம் நடராசன், "தீப்பொறி'ஆறுமுகம், வெற்றிகொண்டான், பொன்.முத்துராமலிங்கம் என பலரும் தி..மு.க.வின் மேடை பீரங்கிகள்.

பொதுக்கூட்டத்தை "மாலை நேரக் கல்லூரிகள்' எனச் சொல்லும் வகையில் உலக அரசியல் முதல் உள்ளூர் நிலவரம் வரை தெளிவாக எடுத்துரைத்து, இனிய தமிழால் மக்களின் மனங்களை வென்று ஆட்சியைப் பிடித்த வரலாறு, இந்தியாவில் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு மட்டுமே உண்டு. அந்தப் பெருமையெல்லாம் இப்போது பழைய பெருங்காய டப்பாவாக மாறிவிட்டது.



அண்ணா, கலைஞரில் தொடங்கி தீப்பொறி, வெற்றிகொண்டான் வரை பலரது பேச்சுகளையும் எதிர்க்கட்சி ஆட்களே ஓரமாக நின்று ரசித்துக் கேட்டதொரு காலம் போய், இப்போது சொந்தக் கட்சியினரே ஆர்வம் காட்டாத நிலை உருவாகியுள்ளது. இந்த சரிவைச் சரியாக்க, செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், "சொற்பொழிவாளர்கள் நெறிமுறைப்படுத்துதல்' கூட்டத்தை நடத்தச் சொல்லி, கொள்கைபரப்புச் செயலாளர்களும் இன்றைய தி.மு.க.வின் ஸ்டார் பேச்சாளர்களுமான திருச்சி சிவா, ஆ.ராசா ஆகியோரிடம் கூறியுள்ளார். கொ.ப.செ. இருவரின் தலைமையில் புதுக்கோட்டை விஜயா, பெரும்நற்கினி, குடியாத்தம் குமரன், நெல்லிக்குப்பம் புகழேந்தி, சந்திரகுமார் ஆகியோர் அடங்கிய குழு, தமிழகம் முழுக்க டூர் அடித்தது. சிறப்பாக பேசுபவர்கள், நன்றாகப் பேசுபவர்கள், சுமாராக பேசுபவர்கள் என மூன்று வகையில் பட்டியலைத் தயாரித்து தலைமைக்கு அனுப்புவது இந்தக் குழுவின் வேலை.

கடந்த 04-ஆம் தேதி தஞ்சையில் "நெறிமுறைப்படுத்துதல்' கூட்டம் நடந்தது. திருவாரூர், நாகை, புதுக்கோட்டை மாவட்டங்களைச் சேர்ந்த 60 பேச்சாளர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு 45 பேர்  கலந்துகொண்டனர். கூட்டத்தில் கலந்துகொண்ட பேச்சாளர் ஒருவர் நம்மிடம், ""டெங்கு, நீட், ஜெ.மரண மர்மம்னு தலைப்பு கொடுத்து மூணு நிமிஷம் பேச வைத்து,  அதில் "ஐந்துபேர் மட்டும்தான் நன்றாகப் பேசினார்கள்' என செலக்ஷன் லிஸ்ட்டை ரிலீஸ் பண்ணிட்டுக் கிளம்பிட்டார்கள். எங்க மனக்குறைகளையெல்லாம் கொட்டலாம்னு வந்தா புஸ்ஸுன்னு போச்சு''’என்றார் ரொம்பவும் வருத்தத்துடன்.



இன்னொரு பேச்சாளரோ, ""நாங்க சரியா பேசுறதில்லைன்னு எங்கமேல குறைபட்டுக் கொள்கிறார்கள். ஆனா எங்களை சரியா பேசவேவிடுவதில்லை என்பதுதான் நிஜம். ஒவ்வொரு மா.செ.வும் சாதிப் பாசத்துடன் "தங்கள் மாவட்டத்தில் இருக்கும் அ.தி.மு.க. அமைச்சரைப் பற்றி பேசாதீங்க' என வாய்ப்பூட்டு போட்டுவிடுகிறார்கள். உதாரணத்துக்கு "தஞ்சை  அ.தி.மு.க. எம்.பி. வைத்திலிங்கத்தை அட்டாக்பண்ணிப் பேசாதீங்க'ன்றாரு தஞ்சாவூர் மாவட்ட செயலாளர். புதுக்கோட்டைக்குப் போனா "அமைச்சர் விஜயபாஸ்கரப் பத்தி பேசாதீங்க'ன்னு மா.செ. அரசு தரப்பு வலியுறுத்துது. திருவாரூக்குப் போனா சசிகலா குடும்பத்தைப் பத்திப் பேச டி.ஆர்.பாலு தரப்பு தடை போடுது. "அமைச்சர் சேவூர் ராமச்சந்திரனை அட்டாக்பண்ணி பேசாதீங்க'ன்னு திருவண்ணாமலை மா.செ. எ.வ.வேலு சொல்றாரு. இப்படியே போச்சுன்னா எங்களை நாங்களே தாக்கிப் பேசிக்கிற வேண்டியதுதான்''’என்கிறார் விரக்தியாக.

"வாங்க கொஞ்சம் தள்ளிப்போய் டீ சாப்பிட்டுக்கிட்டே பேசுவோம்' என நம்மை அழைத்துச் சென்றார் மதுரைக் கூட்டத்தில் கலந்துகொண்ட தென்மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு பேச்சாளர். “""ஆளும் கட்சி மந்திரிகளையோ, எம்.எல்.ஏ.க்களையோ காட்டமா பேசுனாத்தான் ரோட்ல நடந்து போற ஜனங்க கூட நின்னு கேட்பாங்க. ஆனா ரூலிங் டீலிங்கால தலைமைக்கழகம் அறிவிக்கும் பேச்சாளர்கள் கூட்டத்தையே ரத்துபண்ணும் அளவுக்கு மா.செ.க்கள் இருக்கிறார்கள். குடியிருக்கிற வீட்டுக்கு வாடகைக்காவது வண்டி ஓடணுமா இல்லையா? நீலகிரி எம்.பி.யா இருந்தப்ப ஆ.ராசா நல்லாவே தாராளம் காட்டுனாரு. அப்புறம் ஒண்ணுமில்லை. தலைமையும் சுருக்குப்பையை முடிஞ்சே வச்ச்சிருந்தா நாங்க என்னத்த பேசி, என்னத்த பண்றது?''’என்றபடி பொங்கித் தீர்த்துவிட்டார்.


""பத்துப் பதினஞ்சு வருஷத்துக்கு முன்னால மைக் கிடைச்சா போதும் கட்சியின் வரலாறு, கொள்கை, போராட்டம் பற்றியெல்லாம் ஒருமணி நேரம் சோடா கூட குடிக்காம பொளந்து கட்டுவார்கள். இப்ப தலைமைக்கழக பேச்சாளர்களில் முக்கால்வாசிப் பேருக்கு வயசாயிருச்சு. துரைமுருகன், பொன்முடி, திருச்சி சிவா, ஆ.ராசா, புதுக்கோட்டை விஜயா, கரூர் முரளி, நெல்லிக்குப்பம் புகழேந்தி, ஈரோடு இறைவன், சேலம் சுஜாதா, கரூர் கணேசன், சைதை சாதிக், சந்திரகுமார், வி.பி.ஆர்.இளம்பரிதி, குடியாத்தம் குமரன் ...இப்படி  விரல்விட்டு எண்ணும் அளவுக்கும் தமிழன் பிரசன்னா, ஜெயராஜ் மாதிரியான ஊடக பிரபலங்களும்தான் மக்களை ஈர்க்கிறார்கள். தலைமை எல்லாத்தையும் கவனித்தால் எல்லாம் சிறக்கும்''’என்கிறார் கொங்குமண்டல பேச்சாளர்.

இந்தக் குமுறல்களையெல்லாம் கொ.ப.செ. திருச்சி சிவாவிடம் சொன்னதும், ""தலைமையின் கவனத்துக்கு கொண்டுசென்று எல்லாம் சரி செய்யப்படும். இளம் பேச்சாளர்களை உருவாக்க சிறப்புத் திட்டங்கள் உள்ளன''’என்ற நம்பிக்கைத் தகவலைச் சொன்னார்.

-து.ராஜா, இரா.பகத்சிங்


சார்ந்த செய்திகள்