Skip to main content

தமிழகத்தில் பணிபுரியும் 23,000 வடமாநில ஊழியர்களுக்குப் பணியிட மாறுதல் மட்டுமே தீர்வு !

Published on 17/06/2019 | Edited on 17/06/2019

சமீபத்தில் இந்தி மொழி கட்டாயம் என்கிற விதிமுறை கொண்டு வந்தபோது உடனே அனைத்து தொழிற்சங்கத்தினரும் குறிப்பாகத் திமுகவினர் எதிர்ப்பு காரணமாக உடனே வாபஸ் வாங்கப்பட்டது.
 

railway hindi imposition


சமீபத்தில் திருமங்கலத்தில் இரயில் விபத்து ஏற்பட்டதற்கு மொழி புரியாமல் இருந்ததால்தான் விபத்து ஏற்பட்டது என்று கண்டறியப்பட்டது. காரணம் அந்த இடத்தில் பணிபுரிந்தவருக்கு இந்தியை தவிர தமிழ், ஆங்கிலம் எதுவும் தெரியாதால்தான் இந்தப் பிரச்சனை என்கிறார்கள். இதற்கு இடையில் இந்த இந்தி பிரச்சனை குறித்துத் தொழிற்சங்கங்கள் பல்வேறு கருத்துகளைத் தெரிவிக்கிறார்கள். அந்த வகையில் இந்தப் பிரச்சனை குறித்துத் தஷ்ணா ரயில்வே எம்ப்ளாயீஸ் யூனியன் துணைப் பொதுச் செயலர் மனோகரன் பேசும்போது,

கேரளப்பகுதியில் 20 ஆயிரம் பேர், தமிழகப் பகுதிகளில் 62 ஆயிரம் பேர் எனத் தெற்கு ரயில்வேயில் 82 ஆயிரம் பேர் ஊழியர்களாகப் பணியாற்றி வருகிறார்கள். இது தவிர 20ஆயிரம் காலிப்பணியிடங்கள் உள்ளது. இதில் 23 ஆயிரம் பேர் வட இந்தியர்கள். கடந்த பிப்ரவரி மாதம் தேர்வு செய்யப்பட்ட 1600 பேர் வட இந்தியர்கள் இன்னும் தெற்கு ரயில்வேயில் பணியில் சேரவில்லை. இவர்கள் தங்களின் தாய்மொழியான ஹிந்தியில் தேர்வு எழுதி எளிதாக வெற்றி பெற்று வருகிறார்கள்.

அதிகரித்து வரும் இவர்களால் தமிழகத்தில் உள்ள பணியிடங்களில் மொழி புரிதல் இல்லாமல் அன்றாடம் குழப்பம் நிலவி வருகிறது. மதுரை கோட்டத்தில், திருமங்கலம் அருகே ஒரு ரயில் விபத்து ஏற்பட மொழி காரணம் என்பது கண்டறியப்பட்டதை அடுத்து ஊழியர்கள் வேலை செய்வதற்கான தொடர்பு மொழி பற்றி நிலைப்பாடு எடுப்பதில் நிர்வாகம் குழப்பிக்கொண்டது.

இதனால் பலமான எதிர்ப்பு மற்றும் விமர்சனங்களைச் சந்தித்து மொழி கையாள போட்ட உத்தரவை திரும்பப்பெற நேர்ந்தது. வடமாநில ரயில்வே ஊழியர்களில் சுமார் 9ஆயிரம் ஊழியர்கள் சொந்த மாநிலங்களில் உள்ள ரயில்வேயில் பணியாற்ற விருப்பமாறுதலுக்காக விண்ணப்பித்து இருக்கிறார்கள்.

பணியில் சேர்ந்து 5 ஆண்டுகள் நிறைவு செய்தால் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்பது ரயில்வே விதி. இதனால் கடந்த சில வருடங்களாகத் தமிழகப் பகுதியில் ரயில்வே பணிகளில் சேர்ந்து 9 ஆயிரம் வடமாநில ஊழியர்கள் இடமாறுதலுக்காகப் பதிவுசெய்யக் காத்து இருக்கிறார்கள்.

5 வருடங்கள் காக்க வேண்டும் என்பதால் சில ஆயிரம் வடமாநில ரயில்வே ஊழியர்கள் இடமாறுதலுக்குப் பதிவு செய்யாமல் வேறு வேலைக்கு இங்கிருந்தபடியே முயற்சி செய்து வருகிறார்கள். பதிவு மூப்பு அடிப்படையில் வடமாநிலங்களில் உள்ள அனைத்து மண்டல ரயில்வேக்களுக்கு ஆண்டுக்கு சுமார் ஆயிரம் வட இந்தியர்களுக்கு இங்கிருந்து இடமாறுதல் கிடைக்கிறது.

நிலைய அதிகாரிகள், டிக்கெட் பரிசோதகர்கள், என்ஜின் ஓட்டுனர்கள், கடை நிலை ஊழியர்கள் எனப் பல பிரிவுகளுக்குத் தொடர்ந்து இவர்கள் தேர்வாகி வருவதால் வடமாநிலத்தவர்கள் எண்ணிக்கை படிப்படியாகக் கூடி வருகிறது. மற்ற மாநிலங்களுக்கு இடமாறுதல் பதிவு செய்ய 5 ஆண்டுகள் பணிமுடித்து இருக்க வேண்டும் என்ற நிபந்தனையை நீக்கவேண்டும். சிறப்பு விலக்கு வழங்கி இங்குள்ள 23 ஆயிரம் வடமாநிலத்தவர்களுக்கு விருப்ப இடமாறுதல் அவர்கள் சொந்த மாநிலங்களுக்கு உடனே வழங்கவேண்டும். 

இதனால் உருவாகும் 23 ஆயிரம் பணி இடங்கள் உட்பட நடப்பில் உள்ள 20 ஆயிரம் பணியிடங்கள் சேர்த்து 43 ஆயிரம் தெற்கு ரயில்வே பணியிடங்களுக்குத் தமிழகம், கேரளா பகுதியில் உள்ளவர்களை மட்டும் தேர்வு செய்ய வேண்டும். வடமாநில ஊழியர்களுக்கு விருப்ப இடமாறுதல் தந்து 37ஆயிரம் தமிழக இளைஞர்களைத் தெற்கு ரயில்வே பணியமர்த்தவேண்டும் இதுவே மொழிப்பிரச்சனைக்குத் தீர்வாகும். குறிப்பாக, தமிழகத்தைச் சேர்ந்த 37,000 இளைஞர்களை ரயில்வே துறை, தெற்கு ரயில்வேயில் பணியமர்த்த வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார். 
 

 

Next Story

வாக்களிக்கத் தயாரான மக்கள்; ரயில்வேயின் திடீர் அறிவிப்பால் அவதி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Suffering from the sudden announcement of the railway for assam People ready to vote

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது.

இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அசாம், பீகார், சத்தீஸ்கர், கர்நாடகா, கேரளா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், மேற்கு வங்கம், திரிபுரா, மணிப்பூர் மற்றும் ஜம்மு-காஷ்மீரில் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் உள்ள 87 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அந்த வகையில் கேரளாவில் 20, கர்நாடகாவில் 14, ராஜஸ்தானில் 13, மத்தியப் பிரதேசத்தில் 6, மகாராஷ்டிராவில் 8, உத்தரப் பிரதேசத்தில் 8, அசாமில் 5, பீகாரில் 5, சத்தீஸ்கரில் 3, மேற்கு வங்கத்தில் 3, ஜம்மு காஷ்மீர் மற்றும் திரிபுராவில் தலா 1 தொகுதிகள் என மொத்தம் 87 தொகுதிகள் தேர்தல் நடைபெறுகிறது. மத்தியப் பிரதேசத்தில் உள்ள ஒரு தொகுதியில் வேட்பாளர் மரணமடைந்ததால் அந்த தொகுதியில் மட்டும் மே 7ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. 

மேலும் பதற்றமான வாக்குச்சாவடிகள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் தீவிர கண்காணிப்பு பணியில் போலீசார் மற்றும் துணை ராணுவப் படையினர் ஈடுபட்டுள்ளனர். கேரள மாநிலம் வயநாட்டில் மாவோயிஸ்டுகள் அச்சுறுத்தல் உள்ள வாக்குச்சாவடிகளில் தீவிர கண்காணிப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கர்நாடகாவில் மொத்தமுள்ள 28 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ள பெங்களூரு தெற்கு, ஹாசன், தட்சிண கன்னடா, மைசூரு, மாண்டியா உள்ளிட்ட 14 தொகுதிகளில் இன்று மாலை வரை 144 தடை அமல்படுத்தப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது. 2ஆம் கட்ட தேர்தலில் சுமார் 15.88 கோடி பொதுமக்கள் வாக்களிக்க உள்ளனர். இதற்காக பொதுமக்கள், அரசியல் கட்சி தலைவர்கள், பிரபலங்கள் எனப் பலரும் காலை முதல் ஆர்வத்துடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். 

Suffering from the sudden announcement of the railway for assam People ready to vote

இதற்கிடையில் 2 ஆம் கட்ட வாக்குப்பதிவுக்கு ஒரு நாள் முன்னதாக அஸ்ஸாமுக்கு மற்றும் அங்கிருந்து செல்லும் பல ரயில்களை ரத்துசெய்து மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக வடகிழக்கு எல்லை ரயில்வே அறிவித்துள்ளது. இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் அஸ்ஸாமின் 5 தொகுதிகளில் இன்று (26-04-24) இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இந்த சூழலில், நேற்று (25-04-24) லும்டிங் பிரிவில் உள்ள ஜதிங்கா லம்பூர் மற்றும் நியூ ஹரங்காஜாவோ நிலையங்களுக்கு இடையே ரயில் தடம் புரண்ட சம்பவத்தின் காரணமாக பல ரயில்களின் நேரத்தை மாற்றியமைத்து ரத்து செய்ததாக வடகிழக்கு எல்லை ரயில்வே அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிட்டது.

கல்வி, தொழில் மற்றும் வேலைவாய்ப்பு நிமித்தமாக பிற மாநிலங்களுக்கு சென்று வாழும் அஸ்ஸாமிய மக்கள் இன்று ஓட்டு போடுவதற்காக தங்கள் சொந்த மாநிலமான அஸ்ஸாம் நோக்கி வர வார இறுதி விடுமுறையில் கிளம்ப இருந்த நேரத்தில் நேற்று (25-04-24) மாலை திடீரென்று அஸ்ஸாம் செல்லும் 15 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. ரயில்வேயின் இந்த திடீர் அறிவிப்பால், பொதுமக்கள் பலரும் அவதியடைந்து வருகின்றனர். இதுபோன்ற முக்கியமான நாளில் வாக்காளர்கள், வாக்குச் சாவடிகளுக்குச் செல்வதைத் தடுக்கும் முயற்சியில் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக பலரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். மேலும், இந்த அறிவிப்புக்கு பின்னால் பா.ஜ.க.வின் சதி இருப்பதாகவும் பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர்.

Next Story

ரயிலில் செல்போன்கள் திருட்டு; ஆந்திர வாலிபர் கைது

Published on 05/04/2024 | Edited on 05/04/2024
Cell phones stolen from train passengers; Andhra youth arrested

ரயில் பயணிகளிடம் செல்போன்களை திருடிய இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருச்சி மாவட்டம் உறையூர் சாலை பகுதியை சேர்ந்தவர் முகமது ஜாசிம் (17). திருச்சி தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இவர் கடந்த 3ஆம் தேதி நண்பர்களுடன் கோவையில் நடக்கும் போட்டோகிராபி போட்டியில் பங்கேற்க செம்மொழி எக்ஸ்பிரஸ் ரயிலில் முன்பதிவு பெட்டியில் பயணம் செய்தார்.

ஈரோட்டில் ரயில் நின்றபோது முகமது ஜாசிம் தின்பண்டம் வாங்குவதற்காக ரயிலை விட்டு கீழே இறங்கினார். பின்னர் மீண்டும் ரயிலில் ஏறி தனது படுக்கைக்கு வந்தார். அப்போது அவர் வைத்திருந்த ரூ.20,000 மதிப்பிலான ஸ்மார்ட்போன் மாயமாகி இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்து அவர் ஈரோடு ரயில்வே போலீசில் புகார் செய்தார்.

இதனையடுத்து ஈரோடு ரயில்வே போலீசார் ஒவ்வொரு நடைமேடையாக சென்று சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஈரோடு ரயில் நிலையத்தில் சந்தேகப்படும்படியாக வாலிபர் ஒருவர் அங்கும் இங்கும் நடமாடிக் கொண்டிருந்தார். அவரை பிடித்து போலீசார் விசாரித்த போது அவர் ஆந்திர மாநிலம் நெல்லூர் உதயகிரி பகுதியைச் சேர்ந்த ஓம்காரம் வெங்கட சுப்பையா (27) என்பதும், அவர் ரயில் பயணிகளிடம் செல்போன்களை திருடுவதை வாடிக்கையாக வைத்திருப்பது தெரிய வந்தது.

அவரிடமிருந்து 12 ஸ்மார்ட் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்து ஈரோடு ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து வெங்கட சுப்பையாவை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்கள் உரிமையாளர்கள் விவரங்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.