Skip to main content

இவரை மேயர் ஆக்க வேண்டும் பாமக ப்ளான்... நமக்கு மாம்பழமே வேண்டாம்... பாமகவை அதிர வைத்த அதிமுக!  

Published on 12/12/2019 | Edited on 12/12/2019

ஒன்பது மாவட்டங்களில் மட்டும் உள்ளாட்சித் தேர்தல் நடத்த தடை விதித்துள்ளது உச்சநீதிமன்றம். நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு இப்போது தேர்தல் இல்லையென்றாலும், ஆளும் கட்சிக்குள் இருக்கும் கூட்டணிக் கட்சிகள், தங்களுக்கான சீட்டுகளை "கேட்ச்' பண்ணுவதில் மும்முரம் காட்டி வருகின்றன. இதில் பா.ம.க. ரொம்பவே தீவிரம் காட்டி வருகிறது. உள்ளாட்சி அமைப்புத் தேர்தலில் சேலம் மாநகராட்சி மேயர் பதவிக்கு அ.தி.மு.க. கூட் டணியில் அங்கம் வகிக்கும் பா.ம.க.வும் குறி வைத்துள்ளதால், தேர்தலுக்கு முன்பே இரு கட்சிகளிலும் பரபரப்பு தொற்றிக்கொண்டுள்ளது.

 

pmk



ஆளுங்கட்சி கூட்டணியில் அங்கம் வகிக்கும் பா.ஜ.க., பா.ம.க., தே.மு.தி.க. ஆகிய கட்சிகள் மேயர் இடங்களைக் கேட்டுக் கொடுத்த குடைச்சல் காரணமாக, "மேயர் பதவிக்கு மறைமுக தேர்தல் நடத்தப்படும்' என்று அவசர சட்டத்திருத்தத்தை கொண்டுவந்தார் எடப்பாடி பழனிசாமி. இதனால் பா.ஜ.க. ஒருபக்கம் முறுக்கிக்கொண்டு போக... பா.ம.க.வும் ஏகத்துக்கும் அப்செட் ஆனது என்கிறார்கள். ஆனாலும், அ.தி.மு.க. விடம் சேலம், ஆவடி, ஓசூர், சென்னை ஆகிய நான்கு மாநகராட்சிகளில் மேயர் பதவிகளை விட்டுக் கொடுக்கும்படி பா.ம.க. தொடர்ந்து அழுத்தம் கொடுத்துவருகிறது. சென்னையைத் தராதபட்சத்தில் வேலூர் மாநகராட்சியை ஒதுக்கவும் கேட்டுள்ளது.

 

pmk



சேலத்தில், பா.ம.க. தரப்பில் அக்கட்சியின் மாநில துணைச்செயலாளர் அருள் கடந்தமுறை நடந்த தேர்தலின்போது மேயர் பதவிக்கு போட்டியிட்டார். "இந்தமுறை மறைமுக தேர்தலாக இருந்தாலும்கூட, அவரை மேயராக அமர வைத்து அழகு பார்த்திட மாம்பழக் கட்சியின் தலைமை பெரிதும் விரும்புகிறது' என்கிறார்கள் அக்கட்சியினர்.

இதுகுறித்து பா.ம.க. மாநில துணைச் செயலாளர் அருளிடம் பேசியபோது, "ஆவடி, வேலூர், சேலம், ஓசூர் ஆகிய நான்கு மாநகராட்சிகளில் ஏதாவது இரண்டு மாநகராட்சிகளில் மேயர் பதவிகளை பா.ம.க.வுக்கு ஒதுக்கும்படி அ.தி. மு.க.விடம் கேட்டு வருகிறோம். இவற்றில் சேலம் மாநகராட்சியை ரொம்பவே எதிர்பார்க்கிறோம். ஆனால், எந்த இடத்திலும் துணை மேயர் பதவி கொடுத்தால் ஒப்புக்கொள்ள மாட்டோம்'' என்கிறார்.

அ.தி.மு.க.வின் ர.ர.க்கள் சிலரிடம் இதுகுறித்து பேசினோம்...

"சேலம் மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளுக்கும் கவுன்சிலர் சீட் கேட்டு 540 பேர் விருப்ப மனு அளித்திருந்தனர். மேயர் பதவிக்கு மட்டும் 66 பேர் விருப்ப மனு கொடுத்திருந்தனர். பின்னர் மேயர் பதவிக்கு மறைமுக தேர்தல் என்று அவசர சட்டம் கொண்டுவரப்பட்டதால், மேயர் சீட் கேட்டு விருப்ப மனு கொடுத்திருந்த அனைவரும், கவுன்சிலர் சீட் கேட்டு விண்ணப்பம் அளித்தனர். ஆக, ஒவ்வொரு வார்டுக்கும் கவுன்சிலர் சீட்டுக்கு தலா பத்துபேர் வீதம் கிட்டத்தட்ட 600 பேர் போட்டி போட்டுக்கொண்டு வரிசையில் இருக்கிறார்கள். அதுக்குக் காரணம் இல்லாமல் இல்லை. சேலம் என்பது எப்போதுமே அ.தி.மு.க.வின் கோட்டையாக இருந்து வந்திருக்கிறது. அதனால்தான் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பலரும் போட்டி போட்டு விருப்ப மனு கொடுத்திருக்கிறார்கள். அப்படியிருக்கும்போது, சேலம் மாநகராட்சி மேயர் பதவியை பா.ம.க.வுக்கு எப்படி விட்டுத் தரமுடியும்?


இங்குள்ள 60 வார்டுகளில் 50 இடங்களில் அ.தி.மு.க. போட்டியிடவும், எஞ்சியுள்ள பத்து இடங்களைத்தான் கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கும் திட்டமும் இருக்கு. ஒருவேளை, பெருவாரியான இடங்களில் அ.தி.மு.க. வெற்றிபெற்றால், கூட்டணிக் கட்சிகளின் தயவின்றியே மேயர் பதவியை அ.தி.மு.க. கைப்பற்றிவிடும். அநேகமாக பா.ம.க.வுக்கு, வேலூர் அல்லது ஆவடி இவற்றில் ஏதாவது ஒரு மாநகராட்சி மேயர் பதவி மட்டும் ஒதுக்கப்பட வாய்ப்பு இருக்கிறது'' என்கிறார்கள் ர.ர.க்கள்.


"பா.ம.க. உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகள் ரொம்பவே அழுத்தம் கொடுத்தால், "சீச்சீ... இந்தப் பழம் புளிக்கும்' என்று கூறிவிட்டு, உள்ளாட்சியில் தனித்து களமிறங்குவது குறித்தும் கட்சிக்குள் ஒரு பேச்சு ஓடிக்கொண்டுதான் இருக்கிறது' என்றும் அ.தி.மு.க. வட்டாரத்தில் கதைக்கின்றனர்.  மாங்கனி மாநகராட்சியை குறிவைத்து காய் நகர்த்திவரும் பா.ம.க.வின் எதிர்பார்ப்பு குறித்து சேலம் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் வெங்கடாசலம் எம்.எல்.ஏ.விடம் கேட்டபோது, "சார்... இது சி.எம். மாவட்டம். அதனால 100 சதவீதம் அ.தி.மு.க.வுக்குதான் சேலம் மாநகராட்சி மேயர் பதவி'' என்று சுருக்கமாக முடித்துக்கொண்டார்.

 

 

Next Story

“கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு அதிகமாக உழைக்க வேண்டும்” - இ.பி.எஸ்.

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
alliance Party Candidates Need To Work More EPS

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அதே சமயம் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று (27.03.2024) முடிவடைந்தது. அந்த வகையில் 39 மக்களவை தொகுதிகளுக்கு 1749 வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 62 வேட்பாளர்கள் வேட்பு மனுவைத் தாக்கல் செய்திருந்தனர். அதனைத் தொடர்ந்து இன்று (28.03.2024) வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. அதாவது 39 மக்களவைத் தொகுதிகளில் தாக்கலான வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நிறைவடைந்துள்ளது. வேட்புமனுக்களை திருப்பப் பெற மார்ச் 30 ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.

இந்நிலையில் தே.மு.தி.க. சார்பில் விருதுநகரில் போட்டியிடும் விஜய பிரபாகரனை ஆதரித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சிவகாசியில் இன்று (28.03.2024) பிரச்சார்ம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் தமிழக மக்களுக்கு இறைவனால் கொடுக்கப்பட்ட கொடை. ஒரு மனிதன் பிறக்கின்றான், வாழ்கின்றான், இறக்கிறான். இந்த இடைப்பட்ட காலத்தில் நாட்டு மக்களுக்கு என்ன செய்கிறானோ அந்த தலைவர்கள் தான் மக்கள் மனதில் வாழ்வார்கள். அவ்வாறு எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

நம் தலைவர்களுக்கு அரசியல் வாரிசுகள் கிடையாது. எனவே தமிழ்நாட்டைச் சேர்ந்த நாம் தான் பிள்ளைகள். தங்கள் வாழ்நாள் முழுவதும் தம் பிள்ளைகள் வாழ்நாள் முழுவதும் செழிப்பாகவும், வளமாகவும் வாழ வேண்டும் என கருதி இரவு பகல் பாராமல் உழைத்து மறைந்த தலைவர்கள் உருவாக்கிய இயக்கம் அ.தி.மு.க. இது மக்களுக்காகவே துவக்கப்பட்ட இயக்கம். யார் யாரோ இந்த இயக்கத்தை அழிக்க முற்பட்டார்கள். யார் எல்லாம் இந்த இயக்கத்தை அழிக்க முற்பட்டார்களோ, அவர்கள் எல்லாம் அடையாளம் காணாமல் போய்விட்டார்கள்.

இந்த தேர்தல் முக்கியமான தேர்தல். நாடாளுமன்ற தேர்தலை பொறுத்த வரையில் கூட்டணி கட்சிகள் எல்லாம் ஒன்றாக இணைந்து இரவு பகல் பாராமல் வாக்கு சேகரித்து லட்சக்கானகான வாக்குகள் வித்தியாசத்தில் வேட்பாளரை வெற்றி பெற செய்ய வேண்டும். கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு அதிகமாக உழைக்க வேண்டும். அ.தி.மு.க. என்று சொன்னாலே அனைவரையும் மதிக்க கூடிய கட்சி. அதிலும் குறிப்பாக கூட்டணியை நேசிக்க கூடிய கட்சி. அ.தி.மு.க. வேட்பாளரை விட கூட்டணி கட்சி வேட்பாளருக்கு அதிக நேரம் செலவழித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும்” எனத் தெரிவித்தார். 

Next Story

“எடப்பாடி செய்த சதியை முறியடிக்கத் தயாராக இருக்கிறேன்” - ஓ.பி.எஸ்.ஸின் பிரத்யேக பேட்டி

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
ready to defeat tready to defeat the conspiracy of EPS says Exclusive interview with OPShe conspiracy of EPS says Exclusive interview with OPS

தேனி பாராளுமன்றத் தொகுதியில் பி.ஜே.பி. கூட்டணி சார்பில் அ.ம.மு.க. வேட்பாளராக டி.டி.வி. தினகரன் போட்டியிடுவதால் ஓ.பி.எஸ்.ஸின் முழு ஆதரவும் டிடிவிக்கு இருக்கிறது. அதோடு டிடிவியும் நான் போட்டி போடுகிறேன் என்று தெரிந்து தான் இத்தொகுதியை ஓ.பி.எஸ்.ஸும் அவரது மகன் ஓ.பி.ஆர்.ரும் எனக்காக விட்டுக் கொடுத்தும் இருக்கிறார்கள் என்று கூறியிருக்கிறார். அந்த அளவுக்கு ஓபிஎஸ்ஸும் டி.டி.வி.யும் தேர்தல் களத்தில் நெருக்கமாக இருந்து வருகிறார்கள்.

இந்த நிலையில் தான் வேட்புமனு தாக்கலின் இறுதி நாளான நேற்று 27 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய டிடிவி தினகரன் மதியத்துக்கு மேல் தேனி ஆட்சியர் அலுவலகத்திற்கு வருவதாக இருந்தது. இந்த விஷயம் ஓபிஎஸ்-க்கு தெரியவே, மதியம் ஒன்னேகால் மணிக்கு எல்லாம் தேனி ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தவர் அலுவலக வளாகத்தில் உள்ள மரத்தடியில் நின்று கொண்டு டிடிவியை வரவேற்க காத்துக் கிடந்தார். அவருடன் ஆதரவாளர்களான செல்லமுத்து மற்றும் சையதுகான் ஆகியோர் இருந்தனர்.

ad
ஓபிஎஸ் உடன் நமது நிருபர்

அப்போது நாம் முன்னாள் முதல்வரான ஓபிஎஸ்ஸிடம் சென்று நம்மை நக்கீரன் நிருபர் என்று அறிமுகப்படுத்திய உடனே ஆசிரியர் நல்லா இருக்காரா? என்று கேட்டார். அதைத் தொடர்ந்து நாமும் ஆசிரியர் நலமாக இருக்கிறார் என்று கூறியவாறே தொகுதியின் தேர்தல் பணி எந்த அளவுக்கு இருக்கிறது என்று கேட்டபோது, “நான் போட்டி போடும் அந்த தொகுதியில் பிரதமர் மோடி தான் போட்டிப் போடுவதாக இருந்ததால் அங்குள்ள கட்சியினர் தொகுதியை ஒரு கட்டுக்கோப்பாக பிரதமருக்காக தயார் செய்தும் வைத்திருந்தனர். ஆனால் பிரதமர் இங்கே போட்டி போடவில்லை என்பதால் என்னையத்தான் நிற்க சொன்னார். அதன்பேரில் தான் போட்டி போடுகிறேன்” என்றவரிடம் அத்தொகுதியில் முக்குலத்தோர் சமூக ஓட்டுக்கள் அதிகமாக இருக்கிறதா என்று கேட்டபோது, அத்தொகுதியில் மொத்தம் பதினாறு லட்சம் ஓட்டுகள் இருக்கிறது. இதில் சிறுபான்மை சமூக ஓட்டுகள் இரண்டு லட்சம் இருப்பதாக தெரிகிறது. அதுபோல் முக்குலத்தோர் சமூக ஓட்டுகள் ஆறு லட்சத்திற்கு மேல் இருப்பதாக தெரிகிறது. மீதி மற்ற சமூக மக்கள் இருக்கிறார்கள் என்றவரிடம், உங்களுடைய வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது என்று கேட்டதற்கு என்னுடைய வெற்றி உறுதி இறைவன் இருக்கிறார்” என்றார்.

உங்களை பெயரிலேயே ஐந்து சுயேச்சைகள் வேட்புமனு தாக்கல் செய்து இருக்கிறார்கள். அது பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டதற்கு, “நான் வெற்றி பெறக் கூடாது என்பதற்காகவே எடப்பாடி செய்த சதி. அதையும் முறியடிக்க தயாராக இருக்கிறேன்” என்றார். தொடர்ந்து தேனி மாவட்டத்தில் உள்ள அ.தி.மு.க.வினர் கூட டிடிவிக்கு மறைமுகமாக சப்போர்ட் பண்ண இருப்பதாக ஒரு பேச்சு அடிபடுகிறதே என்று கேட்டதற்கு சிரித்துக் கொண்டே “அதுவும் நடக்கலாம் நான் சொன்னது போல் தமிழகம் முழுவதுமே அ.தி.மு.க. படுதோல்வி அடையும்” என்று சொல்லிக் கொண்டு இருந்தார்.

ready to defeat the conspiracy of EPS says Exclusive interview with OPS

அப்போது தேர்தல் பிரச்சார வாகனத்தில் ஆட்சியர் அலுவலகத்திற்குள் இரண்டேகால் மணிக்கு டிடிவி வந்தார். அவரை ஓபிஎஸ் சால்வை அணிவித்து வரவேற்றார். அதன்பின் ஓ.பி.எஸ். தனது ஆதரவாளர்களுடன் மீண்டும் மரத்தடியிலேயே நின்றார். அப்போது பயனாளிகளுக்காக போடப்பட்டிருந்த இரும்பு சேரில் ஓ.பி.எஸ் உடன் வந்த இருவரும் உட்கார்ந்து இருந்தனர். அதைத் தொடர்ந்து டிடிவி தினகரன் தனது வேட்புமனுவை தேர்தல் அதிகாரியான ஆட்சியரிடம் தாக்கல் செய்துவிட்டு வந்தார். வந்தவர் பத்திரிகையாளர்களை சந்தித்து பேட்டியும் கொடுத்தார். அதுவரை ஓபிஎஸ் டிடிவியுடனே நின்றுவிட்டு டிடிவியை பிரச்சார வேனில் திரும்ப வழியனுப்பி விட்டுத்தான் திரும்பினார்.