Skip to main content

கள்ள லாட்டரி, சாராயம், போதை பவுடர் நடமாட்டம்! கிரிமினல்களுடன் கரம் கோக்கும் காவல்துறை! புட்டு புட்டு வைத்தார் 'சஸ்பெண்ட்' அதிகாரி!!

Published on 24/05/2020 | Edited on 24/05/2020
inspector rama andavar

                                                         இன்ஸ்பெக்டர் ராம.ஆண்டவர்



சேலம் மாவட்டம் வீரகனூர் காவல்நிலையத்தில் ஆய்வாளராக பணியாற்றி வந்தவர், ராம.ஆண்டவர் (57). வீரகனூரைச் சேர்ந்த மணல் மாஃபியா பன்னீர்செல்வமும், ஆய்வாளர் ராம.ஆண்டவரும் மாமூல் பேரம் குறித்து பேசும் ஓர் உரையாடல், சமூக ஊடகங்களில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன் வெளியானது. அதில் பன்னீர்செல்வம், 'ஏற்கனவே மாதந்தோறும் மாமூல் கொடுத்து வருகிறேன். அப்படி இருந்தும் ஏன் வண்டியை மடக்கினீர்கள்?,' என்று கேட்கிறார். அதற்கு ராம.ஆண்டவர், 'இப்போது கடும் நெருக்கடி இருக்கிறது. கொஞ்ச காலம் அமைதியாக இருங்கள்,' என்று பதில் கூறி இருந்தார்.


சர்ச்சையை ஏற்படுத்திய இந்த உரையாடல் குறித்து விசாரித்து அறிக்கை அனுப்புமாறு வாழப்பாடி டிஎஸ்பிக்கு, எஸ்பி தீபா கனிகர் உத்தரவிட்டார். கரோனா ஊரடங்கில் இதுவும் கடந்து போகும் என்று அசால்ட்டாக இருந்த ஆய்வாளர் ராம.ஆண்டவரை, மே 8ம் தேதி திடீரென்று பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார் சேலம் சரக டிஐஜி பிரதீப்குமார். தமிழ்நாடு காவல்துறை துணைசேவைகள் விதிகள் பிரிவு 3 (இ)-ன் கீழ் பொதுநலன் கருதி அவர் பணியிடைநீக்கம் செய்யப்படுவதாக, உத்தரவில் கூறப்பட்டுள்ளது.


ஓய்வு பெறும் வயதை நெருங்கிய நிலையில், திடீரென்று பணியிடைநீக்கம் செய்யப்பட்டதால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான ராம.ஆண்டவர், மாவட்ட எஸ்பிக்கு அனுப்பிய விளக்கத்தில், சேலம் மாவட்ட காவல்துறையில் மலிந்து கிடக்கும் ஊழல்களை புட்டு புட்டு வைத்திருந்தார். அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட பத்து நாள்கள் கழித்து, அவருடைய குண்டக்க மண்டக்க விளக்கக் கடிதமும் காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.


முதல்வர் எடப்பாடி மாவட்டத்தில் லாட்டரி, கள்ளச்சாராயம், போதை பவுடர் என சகலவிதமான இத்யாதிகளும் தாராளமாக புழங்குவதும், குற்றவாளிகளும் காவல்துறையும் கைகோத்து செயல்படுவதும் அவருடைய குற்றச்சாட்டின் சாராம்சம். 

 

inspector rama andavar letter


ஆய்வாளர் ராம.ஆண்டவர் உயர் அதிகாரிகளுக்கு அளித்துள்ள விளக்கக் கடிதத்திலிருந்து...


''கூலிக்காரன், போலீஸ்காரனாக இருக்கலாம். அதிகாரியாக ஆசைப்படக்கூடாது. சேலம் மாவட்டம் மட்டுமல்ல. தமிழ்நாடு போலீஸ் முழுவதும் கிளப், லாட்டரி, மணல், மண், ஜல்லி, சந்துக்கடை, சூதாட்டக்காரர்களிடம் வசூல் செய்வதும், இரவு ரோந்து செல்லும் எஸ்.ஐ., பீட் காவலர்கள் வாகனத்தை வழிமறித்து பணம் வாங்குவதும் உலகத்திற்கே தெரிந்ததுதான். 


வீரகனூர் லத்துவாடி பன்னீர்செல்வம் என்பவர், எனக்குப் மாமூல் கொடுத்து இருந்தார் எனில், அவர் ஏன் என்னிடம் பலமுறை பணம் கொடுப்பது தொடர்பாக பேச வேண்டும்? மணல் கடத்தல்காரர் ஒருவர் மீது குண்டாஸ் வழக்கு போட, கடத்தல் வாகனத்தைப் பிடிக்க முயன்றபோது சேலம் மாவட்ட தனிப்பிரிவு ஏட்டு மல்லப்பனும், தனிப்பிரிவு ஆய்வாளர் முத்தமிழ் செல்வராஜனும் தடுத்தார்கள். 


மாவட்ட தனிப்பிரிவில் பணியாற்றும் ஒவ்வொருவரும் கையூட்டின் ஆணிவேராக இருக்கிறார்கள். பனை மரத்தில் கள் இறக்குவோரிடம்கூட தனிப்பிரிவு ஆய்வாளர், ஆத்தூர் டிஎஸ்பி வரை மாமூல் வசூலித்துக் கொள்கின்றனர். கள் இறக்கி, போதை மாத்திரை, போதை பவுடரை கலந்து குடித்து, யாருக்காவது உயிர்ச்சேதம் ஏற்பட்டால் என் மீது எப்ஐஆர் ஆகி விடுமோ என்று நான் பயந்து கிடந்தேன். 


என் குடும்பத்தாருக்கு நான் வாங்கும் சம்பளப் பணத்தைத் தவிர வேறு எந்த வித பணமும் தெரியாது. ஆனால், மற்ற காவல்நிலையங்களில் பெட்டிஷன் விசாரணை முதல் சிஎஸ்ஆர் பதிவு செய்வது வரை பணம் வாங்கப்படுவதை அதிகாரிகள் கண்டுகொள்ளாதது வேடிக்கையாக இருக்கிறது. தனிப்பிரிவு ஆய்வாளர், டிஎஸ்பி ஆகியோர் தனிப்பிரிவு காவலர்கள் மூலம் மாதந்தோறும் பணம் வசூலிப்பது மேலிடத்திற்கு எப்படி தெரியாமல் போனது? 


காவல்துறையில் கையூட்டு கலாச்சாரம் இருப்பதால்தான் டிஎஸ்பி முதல் பலரும் நினைத்த இடத்திற்கு மாறுதல் பெறுகிறார்கள். கரோனாவால் கையூட்டு தடைபட்டபோதும் தனிப்பிரிவு ஏட்டு சீனிவாசன், அண்ணாமலை போன்றவர்களை கண்டுகொள்ளாமல் விட்டதன் உண்மை புரியவில்லை. 


கையூட்டுக்கார டிஎஸ்பி, தனிப்பிரிவு ஆய்வாளர், தனிப்பிரிவு காவலர்களை கட்டுப்படுத்தாமல், பினாமி பெயரில் எந்த சொத்தும் வாங்காத என்னை புறமுதுகு காட்டி ஓடச்செய்யும் இந்த அவல நிலை கண்டு, மனம் குமுறி வெளியேறுகிறேன். பென்ஷன் தொகை, உள்பட என் ஊதியத்தில் பிடித்தம் செய்யப்பட்ட எந்த தொகையும் எனக்கு வேண்டவே வேண்டாம். கையூட்டு இல்லாத மாவட்டம் எனத் தெரிய வரும்போது என் மீது நடவடிக்கை எடுங்கள்,'' என்று மனம் நொந்து போய் விளக்கக் கடிதத்தில் எழுதியிருந்தார் ராம.ஆண்டவர். 


பணிக்காலத்தில் இவருடைய செயல்பாடுகள் குறித்து காவல்துறை வட்டாரத்தில் விசாரித்தோம். அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கி வந்திருப்பது தெரிய வந்தது. தேனி மாவட்டம்தான் சொந்த ஊர். ஆனால், தென் தமிழகத்தைவிட கடலூர், விழுப்புரம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம் என வட மாவட்டங்களில்தான் நீண்ட காலம் பணியாற்றி வந்திருக்கிறார்.


கடந்த 2017ல், தர்மபுரி மாவட்டம் மத்தூரில் பணியாற்றி வந்தபோது உதவி ஆய்வாளர் ஒருவருடன் ஏற்பட்ட கைகலப்பில் காவல்நிலையத்திலேயே அவரை சரமாரியாக தாக்கியிருக்கிறார் ராம.ஆண்டவர். அச்சம்பவத்திற்குப் பிறகு அவர் மாவட்ட ஆயுதப்படைக்கு இரண்டாம் முறையாக இடமாற்றம் செய்யப்பட்டார். 2016ல் பொம்மிடியில் ஆய்வாளராக இருந்தபோது சொந்த உபயோகத்திற்காக காவல்துறை ஜீப்பை நாமக்கல் மாவட்டத்திற்கு அவரே ஓட்டிச்சென்றிருக்கிறார். திரும்பி வரும் வழியில் சேலத்தை அடுத்த மல்லூரில் ஒரு மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் பெண் ஒருவர் பலியாகியிருக்கிறார். சாலை மறியல், காவல் வாகனம் உடைப்பு வரை பரபரப்பை ஏற்படுத்தியது. நெருக்கடிகள் அதிகரிக்கவே, அவர் கைது செய்யப்பட்டதுடன், பணியிடைநீக்கமும் செய்யப்பட்டார்.


கடந்த ஆண்டு, கன மழையால் மேட்டுப்பாளையத்தில் சுவர் இடிந்து விழுந்ததில் 17 பேர் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அப்போது பந்தோபஸ்து பணிக்காக செல்லுமாறு ராம.ஆண்டவரிடம் மாவட்டக் காவல் அலுவலகத்தில் இருந்து தகவல் சொல்லப்பட்டபோது, 'ஏன் என்னை விட்டால் இங்கே வேறு யாரும் இன்ஸ்பெக்டர்களே கிடையாதா? அதெல்லாம் போக முடியாது,' என்று திறந்த மைக்கிலேயே அலட்சியமாக கூறியிருக்கிறார்.


இப்படி தொடர்ந்து சர்ச்சையில் சிக்கி வந்த ராம.ஆண்டவர், ஓய்வு பெறும் காலம் நெருங்கியதை அடுத்து, புதிதாக வரும் சர்ச்சைக்குரிய எந்த புகார் மனுக்களையும் விசாரிக்காமல் கவனமாக தவிர்த்து வந்திருக்கிறார் என்கிறார்கள் உளவுப்பிரிவினர். அதேநேரம், பெரிய அளவில் லஞ்ச வேட்டை புகார்களில் சிக்காவிட்டாலும், கறை படியாத கரங்களுக்குச் சொந்தக்காரர் என்றும் சொல்லி விடமுடியாது என்கிறார்கள் தனிப்பிரிவினர்.


காவல்துறை மீது விமர்சனம் செய்து எழுதப்பட்ட கடிதம் சமூக ஊடங்களில் வெளியானதன் பின்னணியில் ஐஜேகே கட்சி பிரமுகர் ஒருவர் இருப்பதாகவும், அவர்தான் இப்போதைக்கு ராம.ஆண்டவருக்கு ஆதரவாக செயல்படுவதாகவும் ஒருதரப்பு சொல்கிறது.


இதுபற்றி ராம.ஆண்டவரிடம் பேசினோம்.


''எங்க எஸ்பி, டிஐஜி, ஐஜி அய்யா எல்லாரும் தங்கமான அதிகாரிங்கதான். கொழந்த மனசுக்காரங்க. போலீசை கெடுக்கணும்னு நினைக்க மாட்டாங்க. மேடம் கூட, பெரிய தப்பு பண்ணினாலும் டிரான்ஸ்பர்தான் பண்ணுவாங்க. மக்கள்கிட்டயும் எனக்கு நல்ல பேரு இருக்கு. இத்தனைக்கும் ரிட்டயர்மென்ட் ஸ்டேஜ் என்பதால் கெட்டப்பெயர் வந்துடும்னு பெட்டிஷன்கூட விசாரிக்க மாட்டேன். அப்படி இருந்தும் சஸ்பெண்ட் செய்துவிட்டனர். 

 

DIG pradeep kumar

                                                                          டிஐஜி பிரதீப்குமார்


சஸ்பெண்ட் செய்த பிறகு எஸ்பியையும், டிஐஜியையும் பார்த்து பேசியிருக்கணும். ரெண்டையும் கைவிட்டுட்டேன். அப்படி செய்திருந்தால் ஒருவேளை என்னை மன்னிச்சிக்கூட விட்டிருப்பாங்க. ஐஜி அய்யாகிட்ட கூட நான் எஸ்ஐ ஆக மூன்று வருஷம் வேலை செய்திருக்கேன். மாமூல் புகார் தொடர்பாக பேசிய பன்னீர்செல்வமும் நானும் அதற்கு முன்பு பேசியதில்லை. ஐஜேகே கட்சி பிரமுகர் பற்றி கேட்கிறீர்கள். அவர் என் மீதுள்ள மரியாதைக்காக உதவி செய்கிறார்,'' என்று மேலோட்டமாக பதில் சொன்னார் ராம.ஆண்டவர்.

                                 

salem district sp  deepa ganiger

                                             சேலம் மாவட்ட எஸ்பி தீபா கனிகர்
 


இதுகுறித்து சேலம் மாவட்ட எஸ்பி தீபா கனிகரின் கருத்தறிய பலமுறை முயற்சித்தோம். பலமுறை செல்போனில் தொடர்பு கொள்ள முயன்றபோதும் 'கன்மேன்' ஒருவரே அழைப்பை எடுத்துப் பேசினார். எதுவாக இருந்தாலும் தனிப்பிரிவு ஆய்வாளரை தொடர்பு கொள்ளுமாறு நமக்குச் சொல்லப்பட்டது. 


அதையடுத்து தனிப்பிரிவு ஆய்வாளர் முத்தமிழ் செல்வராஜிடம் கேட்டபோது, ''ராம.ஆண்டவர் மீது எத்தனையோ முறை புகார்கள் வந்துள்ளன. அவர் மீது பெரிய அளவில் நடவடிக்கை எடுக்காமல் காப்பாற்றி இருக்கிறோம். இப்போதுகூட மாமூல் ஆடியோ குறித்து புகார் வந்து மூன்று மாதங்கள் கழித்துதான் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இந்த இடைப்பட்ட காலத்தில் ஒருமுறைகூட அவர் நேரில் வந்து பார்க்கவில்லை. அவர் இஷ்டத்திற்கு இருந்தால் நாம் என்ன செய்ய முடியும்? அவர் தன்னுடைய பணிக்காலத்தில் எந்த ஸ்டேஷனிலும் ஒரு வருடத்திற்கு மேல் தொடர்ந்து பணியாற்றியது கிடையாது. எல்லா இடத்திலும் புகாரின்பேரில்தான் நடவடிக்கைக்கு ஆளாகி இருக்கிறார்,'' என்றார்.


மாமூல் புகாரில் பணியிடைநீக்க நடவடிக்கை என்பது காவல்துறையில் சகஜம் என்பது ஒருபுறம் இருந்தாலும், முன்மாதிரியாக இருக்க வேண்டிய முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டத்திலேயே கள்ளச்சாராயம், லாட்டரி, சூதாட்ட கிளப், போதை குற்றங்கள் தலைவிரித்தாடுவதும், கிரிமினல்களுடன் காவல்துறையினர் கரம் கோத்து செயல்படுவதும் முழுமையான விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்பதையும் மேலிடம் கவனத்தில் கொள்ள வேண்டும் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள். 


 

Next Story

தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு எம்.எல்.ஏ.க்கள் கடிதம்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
MLAs letter to Chief Electoral Officer Satyapratha Sahu

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து தமிழ்நாட்டில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் 69.72 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக கடந்த 21 ஆம் தேதி (21.04.2024) அறிவித்திருந்தது. அதில் அதிகபட்சமாக தருமபுரி தொகுதியில் 81.20 சதவீத வாக்குகளும், குறைந்தபட்சமாக மத்திய சென்னை தொகுதியில் 53.96 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததால் வாக்காளர்களுக்குப் பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ள அமைச்சர்கள் மற்றும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் வாகனங்களை தேர்தல் பறக்கும் படையினர் தீவிரமாகச் சோதனை செய்தனர். இதன் ஒருபகுதியாக அரசியல் கட்சி தலைவர்களின் சிலைகள், பெயர்பலகைகள், எம்.எல்.ஏ. மற்றும் எம்.பி.க்களின் அலுவலகங்கள் சீல் வைக்கப்பட்டன.

இந்நிலையில் எம்.எல்.ஏ. அலுவலகங்களை திறக்க அனுமதி கோரி தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவிற்கு எம்.எல்ஏ.க்கள் கடிதம் எழுதியுள்ளனர். அந்த கடிதத்தில், “தேர்தல் முடிந்து ஒரு வாரம் ஆகிவிட்டதால் மக்கள் பணியாற்ற எம்.எல்.ஏ அலுவலகங்களை திறக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளனர். இது குறித்து தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு விரைவில் முடிவெடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Next Story

“மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நாடு தாங்காது” - முதல்வர் மு.க. ஸ்டாலின்!

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
If Modi comes back to power the country will not stand says CM MK Stalin

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை மறுநாள் (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை இன்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெறுகிறது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இந்நிலையில் திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின் திமுக தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், “உங்களில் ஒருவனான முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் உரிமையோடு கேட்கிறேன். நீதியின் பக்கம் நின்று, இந்தியா கூட்டணிக்கு வரலாறு காணாத வெற்றியைத் தேடித் தாருங்கள்!. நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன் எழுதும் மடல். இந்திய நாட்டின் இரண்டாவது விடுதலைப் போர் என்று அழைக்கப்படுகின்ற 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தமிழ்நாடு, புதுவை உள்ளிட்ட 40 தொகுதிகளில் ஏப்ரல் 19-ஆம் நாள் நடைபெற இருக்கிறது. ஜனநாயகத்தையும் - மக்களாட்சி மாண்புகளையும் மதிக்கின்ற, கூட்டாட்சித் தத்துவத்தைப் போற்றி இந்திய நாட்டின் ஒருமைப்பாட்டை காக்கின்ற ஒரு புதிய பிரதமரைத் தேர்ந்தெடுக்க 'இந்தியா' கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்று வாக்காளப் பெருமக்கள் அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன். பத்தாண்டு கால இருள் சூழ்ந்த ஆட்சியை அகற்றி, புதிய இந்தியாவுக்கான விடியலுக்கு அச்சாரம் இடும் நாள்தான் - ஏப்ரல் 19.

யார் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதைவிட, யார் ஆட்சி தொடர்ந்துவிடக் கூடாது என்பதை முடிவெடுப்பதற்கான தேர்தல் இது. குஜராத் மாடல், வளர்ச்சியின் நாயகன் என்ற முகமூடிகளுடன் இதுவரை தேர்தல் களத்தில் மோடி நின்றார். அவரது குஜராத் மாடல் என்பது போலியானது என்பதும், வளர்ச்சியின் நாயகன் என்பது பொய்யானது என்பதும் பத்தாண்டுகளில் தெரிந்து விட்டது. மக்கள் தெளிந்து விட்டார்கள். இப்போது அனைவருக்கும் தெரிவது, 'ஊழல் மோடி' தான். அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, சிபிஐ போன்ற விசாரணை அமைப்புகளை முறைகேடாகப் பயன்படுத்தி பல்லாயிரம் கோடி பணத்தை பாஜக குவித்திருப்பதை தேர்தல் பத்திர ஊழல் அம்பலப்படுத்திவிட்டது. உலகத்திலேயே மிகப்பெரிய ஊழல், சுதந்திர இந்தியாவின் மிகப்பெரிய முறைகேடு என்று வர்ணிக்கப்படுகிற தேர்தல் பத்திர ஊழல், பாரதிய ஜனதா கட்சியும், நரேந்திர மோடியும் ஊடகங்களின் துணையோடு உருவாக்கி வைத்திருந்த போலி பிம்பத்தைச் சுக்கு நூறாக்கி, முகத்திரையைக் கிழித்துவிட்டன. தேர்தல் பத்திர நடைமுறையே முறைகேடானது, சட்ட விரோதமானது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகும், ஊழல் மலிந்த தேர்தல் பத்திரத் திட்டத்தைப் பிரதமர் நரேந்திர மோடி நியாயப்படுத்தி பேசி வருவது, இதுவரை பாஜகவை ஆதரித்தவர்களையே அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. வேறு எந்த நாட்டிலாவது இதுபோன்ற இமாலய ஊழல் அரங்கேறி இருந்தால், அந்த நாட்டின் பிரதமர் பதவி விலகி இருப்பார். 

If Modi comes back to power the country will not stand says CM MK Stalin

தனது சுயநல அரசியலுக்காக ஒட்டுமொத்த இந்தியாவையும் மோடி நாசப்படுத்தி விட்டார். கருப்புப் பணத்தை மீட்பது, ஊழலற்ற ஆட்சியைத் தருவது, வேலை வாய்ப்புகளை உருவாக்குவது, தொழில் வளர்ச்சியை பெருக்குவது, வறுமையை ஒழித்து மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவது, சமூகநீதித் திட்டங்களைச் செயல்படுத்தி சமத்துவ சமுதாயத்தை உருவாக்குவது, பாதுகாப்பை உறுதிசெய்து மகளிர் வாழ்வை மேம்படுத்துவது என்ற எல்லா தளங்களிலும் படுதோல்வியை மோடியின் அரசு சந்தித்து இருக்கிறது. வரலாறு காணாத வேலையில்லாத் திண்டாட்டம் கோடிக்கணக்கான இளைஞர்களின் கனவுகளைச் சிதைத்து விட்டது. விஷம் போல் ஏறிய விலைவாசி உயர்வு ஏழை மக்களின் வாழ்க்கையைப் பாழ்படுத்திவிட்டது. பெட்ரோல், டீசல், சுங்கக் கட்டணக் கொள்ளை நடுத்தர மக்களை வதைத்துவிட்டது. இரக்கமற்ற ஜிஎஸ்டி, பணமதிப்பிழப்பு சிறு, குறு தொழில்களை சிதைத்துவிட்டது. மதச்சார்பின்மையைக் குழிதோண்டிப் புதைத்து, எப்போதும் மதப் பகையை வளர்க்கும் வெறுப்புப் பேச்சின் மூலம் சமுதாயத்தில் பதற்றத்தை ஏற்படுத்திக் குளிர்காய நினைக்கிறார்கள்.

அண்ணல் அம்பேத்கர் இயற்றி அளித்த அரசியலமைப்புச் சட்டம், மிகப்பெரிய நெருக்கடிக்கு ஆளாகி இருக்கிறது. எதிர்க்கட்சித் தலைவர்கள், மாநிலங்களின் முதலமைச்சர் பதவியில் இருந்தாலும் கைது செய்து சிறையில் அடைக்கும் கொடுமையும், ஆளுநர்களை வைத்துப் போட்டி அரசாங்கம் நடத்தி, தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளை மக்கள் நலத் திட்டங்களைச் செயல்படுத்த விடாமல் முடக்கும் அநியாயம், மாநிலங்களுக்கு வரி மற்றும் நிதிப் பகிர்வில் பாரபட்சம் அரங்கேறாத நாளே இல்லை. இதுவரை இந்தியத் திருநாடு சந்திக்காத அளவு மாநில உரிமைப் பறிப்பு நடவடிக்கைகள் மோடி அரசால் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வந்தன. சுதந்திர இந்தியாவில், பெட்ரோல் – டீசல் மீது மிக அதிகமான வரியை செஸ், சர்சார்ஜ் என்ற பெயரில் வசூலித்து, மாநிலங்களுக்குப் பகிர்ந்து தராமல், மக்களிடம் சுரண்டி மாநிலங்களையும் வஞ்சித்த மோசமான ஆட்சி, மோடியின் ஆட்சி!.

வெள்ள நிவாரணம், வறட்சி நிவாரணம், சட்ட மசோதாக்களுக்கு அனுமதி, அமைச்சர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைப்பது, துணைவேந்தர்களை நியமனம் செய்வது போன்ற அன்றாட, இயல்பான நிர்வாக நடைமுறைகளுக்குக்கூட உச்ச நீதிமன்றத்தை நாடுவதற்கு மாநிலங்களுக்கு நிர்பந்தம் தருகிற கொடுங்கோல் ஆட்சியாக, மோடி தலைமையிலான ஆட்சி இருப்பதை நாட்டு மக்கள் அறிவார்கள். மாநிலங்களின் வயிற்றில் அடிப்பது, மாநில உரிமைகளை நசுக்குவதைப் பெருமையான செயல் என்று கருதிக்கொள்கிற அளவு அதிகார மமதையில் ஆட்டம் போடும் ஆட்சியாளர்களுக்குத் தக்க பாடம் புகட்டுவதற்கான தேர்தல் இது.

இந்தியா போன்ற மகத்தான, மாபெரும் ஜனநாயக நாட்டின் பிரதமராக, தனது கடமையில் நரேந்திர மோடி தோற்றுவிட்டார். எனவே, அவர் அந்த நாற்காலியில் இருந்து அப்புறப்படுத்தப்பட வேண்டும். மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால், அதை நாடு தாங்காது. நாடாளுமன்ற ஜனநாயகத் தேர்தல் முறையே இல்லாமல் போய்விடும், சர்வாதிகார அதிபர் ஆட்சி முறை கொண்ட நாடாக ஆர்எஸ்எஸ் – பாஜக ஆட்சியாளர்கள் இந்தியா மாற்றிவிடுவார்கள். இன்னொரு வாய்ப்புக் கிடைத்தால் இந்த நாட்டில் ஜனநாயகத்தை ஒழித்துக்கட்டி, மாநிலங்களின் எல்லைக் கோடுகளை மாற்றி, ஒற்றையாட்சி நாடாக மாற்றிவிடுவார்கள் என்ற அச்சம் நாடு முழுவதும் மக்கள் மனங்களில் இருக்கிறது. இந்தியாவைப் பாதுகாக்க மோடி ஆட்சி அகற்றப்பட வேண்டும்.

கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்நாட்டின் முன்னேற்றத்துக்கு, தமிழர்களின் வளர்ச்சிக்கு மோடி அரசு தீட்டிய ஒரேயொரு சிறப்புத் திட்டத்தையாவது கூறுங்கள் என்று கடந்த ஒரு மாத காலமாகப் பரப்புரைக் கூட்டங்களில் ஒன்றிய அரசை நோக்கிக் கேள்வி எழுப்பி வந்தேன். தேசியப் பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ஒரு பைசா கூட தராமல் தமிழ்நாட்டை வஞ்சிப்பது நியாயமா என்றும் கேட்டு வந்தேன். ஆனால், அதற்கு எந்த நேர்மையான பதிலையும் பிரதமர் மோடியோ, அவரது அமைச்சரவை சகாக்களோ கூறவில்லை. தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்துக்கும் மோடியும் பாஜகவும் எதிரிகள் என்பது இதில் இருந்தே உறுதியாகிவிட்டது. தமிழ்நாட்டில் அமைய இருந்த மாபெரும் முதலீட்டை, மிரட்டி குஜராத்துக்கு மடை மாற்றியவர்கள், மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாடு முன்னேறுவதை அனுமதிக்கவே மாட்டார்கள்.  தமிழ்நாட்டின் வளமான எதிர்காலத்துக்கும், மாநிலத்தின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வரவே கூடாது. 

If Modi comes back to power the country will not stand says CM MK Stalin

இவர்கள் ஒரு பக்கம் என்றால், இன்னொரு பக்கத்தில் அடிமை பழனிசாமியின் கட்சியானது பாஜக போட்டுத் தந்த திட்டப்படி கள்ளக் கூட்டணி அமைத்து தனியாக நிற்கிறது. தமிழ்நாட்டை வஞ்சித்த பாஜக, பாழ்படுத்திய அதிமுக ஆகிய இரண்டு கூட்டணியையும் புறக்கணிக்குமாறு தமிழ்நாட்டு மக்களைக் கேட்டுக் கொள்கிறேன். பாஜகவுக்கும் அதிமுகவுக்கும் ஒருவரை ஒருவர் எதிர்ப்பது போல நாடகமாகிக் கொண்டிருந்தாலும், தேர்தலுக்குப் பிறகு கைகோத்து விடுவார்கள். பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியை விமர்சிக்காதது மட்டுமல்ல, தேர்தலுக்குப் பிறகு பா.ஜ.க-வுக்குத் தேவையென்றால் நேரடியாக ஆதரிப்பார்கள். 2019-ஆம் ஆண்டு முதல் தமிழ்நாட்டில் வலுவான கூட்டணியை அமைத்தது திராவிட முன்னேற்றக் கழகம். அன்று முதல் நடந்த அனைத்து தேர்தல்களிலும் தொடர் வெற்றிகளைக் குவித்த சிறப்பும் பெருமையும் திமுக கூட்டணிக்கு உண்டு.

திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான 'இந்தியா' கூட்டணியில் அகில இந்திய காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்தியக் கம்யூனிஸ்ட், ம.தி.மு.க., விடுதலைச் சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி ஆகிய கட்சிகளுக்கு தொகுதிகள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன. நண்பர் கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யமும் நம் அணியில் இணைந்துள்ளது. திராவிடர் கழகம், மனிதநேய மக்கள் கட்சி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி, ஆதித்தமிழர் பேரவை உட்பட பல்வேறு கட்சிகள், அமைப்புகள், சமுதாய இயக்கங்கள் நமது அணிக்கு ஆதரவைத் தெரிவித்துள்ளன. இந்தத் தொண்டர்களின் சலிக்காத உழைப்பைத் தமிழ்நாடு முழுவதும் நான் பார்த்தேன். அவர்களது முகங்களில் தெரிந்த நம்பிக்கை, என்னை மேலும் மேலும் உற்சாகம் அடைய வைத்துள்ளது.

தேர்தலுக்கு முன்னதாக நான் வெளியிட்ட அறிக்கையில், ‘புதுவை உள்ளிட்ட தமிழ்நாட்டின் 40 தொகுதிகளிலும் யார் வேட்பாளர், எந்தச் சின்னம் என்பதை மறந்து விட்டு, ‘வேட்பாளர் மு.க.ஸ்டாலின்' என்பதை மனதில் வைத்து அனைவரும் பணியாற்ற வேண்டும். அனைத்துத் தொகுதியிலும் நானே போட்டியிடுகிறேன் என்பதை உள்ளத்தில் தாங்கி அனைத்து உடன்பிறப்புகளும் பணியாற்ற வேண்டும்’ என்று உரிமையோடு நான் கேட்டுக் கொண்டேன். அந்தச் சொல்லுக்கு கட்டுப்பட்டு திராவிட முன்னேற்றக் கழகத்தின் அனைத்து உடன்பிறப்புகளும் தேர்தல் பணியாற்றி வரும் காட்சியை நான் பார்த்தேன். 'இவர்களைத் தொண்டர்களாகப் பெற என்ன தவம் செய்துவிட்டேன்' என்ற பெருமித உணர்வை நான் அடைகிறேன்.

If Modi comes back to power the country will not stand says CM MK Stalin

இதே ஆர்வமும், சுறுசுறுப்பும் தேர்தல் முடியும் வரை இருந்தாக வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். பொதுமக்களை வாக்குச்சாவடிக்கு வர விழிப்புணர்வு ஏற்படுத்துவது முதல், வாக்குப் பெட்டிகள் உரிய பாதுகாப்பான இடங்களுக்கு எடுத்துச் செல்லப்படுவது வரையிலும் கண்துஞ்சாது கண்காணிக்க வேண்டும் என்று கழக உடன்பிறப்புகளைக் கேட்டுக் கொள்கிறேன். உங்களது உழைப்பின் பயன்தான் இந்தியாவையும் தமிழ்நாட்டையும் காக்கும் என்பதை மறந்து விடாதீர்கள். தமிழ்நாட்டில் தனக்கு பிடித்த ஊர்ப் பெயர்களில் ஒன்று 'எப்போதும் வென்றான்' என்று தலைவர் கலைஞர் அவர்கள் அடிக்கடி குறிப்பிடுவார்கள். திராவிட முன்னேற்றக் கழகமும் எப்போதும், எல்லாத் தேர்தல்களிலும் வென்றான் என்பதை மெய்ப்பிக்கும் தேர்தல் இது.

ஊடகங்களின் கருத்துக் கணிப்புகளைக் கண்டு நம் கவனம் துளியும் சிதறிவிடக்கூடாது. அவற்றைக் கடந்த காலங்களிலும் நாம் பொருட்படுத்தியது இல்லை. கடைசி வாக்கு பதிவாகி, வெற்றிக் கனி நம் கைகளில் வந்து சேரும் வரை, கண் துஞ்சாது – பசி நோக்காது – கருமமே கண்ணாயினர் என நாம் கவனத்தோடும் உற்சாகம் குன்றாமலும் உழைத்திட வேண்டுகிறேன். கருத்துக்கணிப்புகளை எல்லாம் விஞ்சுகிற, நாடே தமிழ்நாட்டைத் திரும்பிப் பார்க்கிற வெற்றியாக நம் வெற்றி இருக்க வேண்டும். தேர்தல் விதிகளை முறையாகப் பின்பற்றி, வாக்காளப் பெருமக்கள் ஒவ்வொரையும் மீண்டும் தேடிச் சென்று சந்தித்து, அவர்களிடம் மோடி ஆட்சியில் நாடு எதிர்கொண்டுள்ள ஆபத்துகளை விளக்கிச் சொல்லி, திராவிட மாடல் ஆட்சியில் நிறைவேற்ற மகத்தான மக்கள் நலத்திட்டங்களையும் சாதனைகளையும் எடுத்துரைத்து, நம் அணியின் வெற்றியை உறுதி செய்ய வேண்டும்.

இரண்டு முறை இருண்ட காலத்தைக் காட்டிய பாஜக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைப்போம். இந்தியா கூட்டணியின் வெற்றியில்தான் இந்திய நாட்டின் சிறப்பான எதிர்காலமும் தமிழ்நாட்டின் முன்னேற்றமும் இருக்கிறது. திமுக தேர்தல் அறிக்கையும், அதை வழிமொழிந்தும் வலு சேர்த்தும் காங்கிரஸ் வெளியிட்ட தேர்தல் அறிக்கையும் திட்டங்களாக மாற வேண்டும். தமிழ்நாட்டின் வாக்காளப் பெருமக்களுக்கு பணிவான வேண்டுகோளை கரம் கூப்பி முன்வைக்கிறேன். இந்தியா என்றென்றும் மதச்சார்பின்மையும் கூட்டாட்சியும் சகோதரத்துவமும் கொண்ட நாடாகத் திகழ, தமிழ்நாட்டின் தனித்தன்மையை நிலைநாட்டுவதற்கு நம் முன் உள்ள ஒரே வாய்ப்பும் ஆயுதமும் உங்கள் வாக்குதான். உங்கள் பொன்னான வாக்குகள், இந்தியாவைக் காக்கட்டும், சர்வாதிகாரத்தில் இருந்து நாட்டை மீட்கட்டும். தமிழ்நாட்டின் தனித்தன்மையை உறுதி செய்யட்டும். 

தமிழ்நாட்டின் மக்கள் நலத் திட்டங்கள் தொய்வின்றித் தொடர, எங்கும் எதிலும் தமிழ்நாடு முன்னோடி என்ற பெருமை நிலைத்திட, தமிழர்களின் அரசியல் உரிமைகளுக்கு மதிப்பளிக்கிற அரசு டெல்லியில் அமைந்தாக வேண்டும். நாட்டின் ஒளிமயமான எதிர்காலத்திற்கு, ஒன்றியத்தில் ஆட்சி மாற்றம் ஒன்றே தீர்வு. தமிழ்நாட்டின் பகைவர்களை, தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடும் எதிரிகளை வீழ்த்துவோம். ஜனநாயகத்தைக் காக்கும் போர்க்களத்தில், நீதியின் பக்கம் நின்று, இந்தியா கூட்டணி வேட்பாளர்களுக்கு வரலாறு காணாத வெற்றியைத் தமிழ்நாட்டு மக்கள் தேடித் தர வேண்டும் என்று உரிமையோடு கேட்டுக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.