Skip to main content

ஊரடங்கு குறித்து மோடி அறிவிப்பின் பின்னணி... டிரம்ப் செய்த மாபெரும் தவறு என்ன? சமாளிக்க முடியாமல் திணறும் பாஜக அரசு!

Published on 15/05/2020 | Edited on 15/05/2020

 

bjp


நான்காம் கட்ட ஊரடங்கு முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும் என மே 12 இரவு 8 மணியிலிருந்து 8.33 வரை உரையாற்றிய பிரதமர் மோடி, கடைசி ஒரு நிமிடத்தில்தான், ஊரடங்கு நீடிக்கும் என்பதை அறிவித்தார். அது எப்படி மாறுபட்டதாக இருக்கும் என்பது 18 ஆம் தேதிக்கு முன்னர் அறிவிக்கப்படும் என்றார்.


நோய்த்தொற்று அளவுக்கு இந்தியாவை ஆட்டிப்படைக்கிறது பொருளாதாரச் சூழ்நிலை. கடந்த ஆறு ஆண்டுகால பா.ஜ.க. அரசின் பொருளாதார நடவடிக்கைகள் பலன் தரவில்லை என்பதை ஆய்வறிக்கைகள் அம்பலப்படுத்திவிட்டன. ஆனாலும், பிரதமர் தனது உரையில், உலகத்திற்கு இந்தியா நம்பிக்கை ஒளிக்கீற்றாக உள்ளது என்றும், கரோனா காலத்திற்குப் பிறகு உலகத்திற்கே வழிகாட்டும் வகையில் இந்தியாவின் பொருளாதாரம் தற்சார்பு நிலையை அடையும் என்றும், உள்நாட்டுச் சந்தை நம்மைப் பாதுகாக்கும் என்றும், இதற்காக 20 லட்சம் கோடி ரூபாயிலான சிறப்புத் தொகுப்பு அறிவிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார். மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10 சதவீதம் இதற்காகப் பயன்படுத்தப்படும் என்றும் மோடி தனது உரையில் குறிப்பிட்டார்.
 

market


மக்களிடம் கடும் அதிருப்தி ஏற்பட்டு வருவதைத் தவிர்க்கவும் வகையில் பிரதமரின் உரை அமைந்துள்ள நிலையில், நான்காம் கட்ட ஊரடங்கு மேலும் சில தளர்வுகளுடன் இருக்கும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. அதேநேரத்தில், மூன்று கட்ட ஊரடங்கில் கவனிக்கத் தவறியவையும், தளர்வுகளால் ஏற்படக்கூடிய சிக்கல்களும் விடாமல் துரத்தும் என்கிறார்கள் மருத்துவத்துறையினர். அத்துடன், கரோனா தொற்று இரண்டாவது தடவையாக ஒரு பெரிய சுனாமி அலையாக எழுந்து இந்தியாவைத் தாக்கப்போகிறது என எச்சரிக்கிறார்கள் உலக சுகாதார நிறுவனத்தைச் சார்ந்தவர்கள்.

1918 இல் 'ஸ்பானிஷ் ஃப்ளு' என்கிற தொற்று நோய் கரோனாவைப் போலவே முதல் அலையாக வந்து சில ஆயிரம் பேரை தாக்கியது. அந்த தாக்குதலை கண்டு பயந்துபோன உலகம், தற்பொழுது கரோனாவிற்கு எதிராக நாம் கடைப்பிடிக்கும் குவாரண்டைன் எனப்படும் தனிமைப்படுத்துதல், ஊரடங்கு போன்றவற்றை கடைப்பிடித்தது. அத்துடன் பிரச்சனை முடிந்தது, ஸ்பானிஷ் ஃப்ளு ஒழிந்தது என உலகம் நிம்மதி பெருமூச்சு விட்டது. ஆனால் ஒரு சில மாதங்களிலேயே அந்த ஸ்பானிஷ் ஃப்ளுவுக்காகக் கடைப்பிடிக்கப்பட்ட ஊரடங்கு, தனிமைப்படுத்துதல், சிகிச்சை ஆகியவை முடித்துவைக்கப் பட்டு சகஜ நிலை திரும்பியவுடன் அமெரிக்காவை ஸ்பானிஷ் ஃப்ளு இரண்டாவது அலையாக வந்து தாக்கியது. அந்த இரண்டாவது அலை தாக்குதலில் ஃபிலடெல்பியா என்கிற அமெரிக்க நகரம் அழிந்துபோனது. 70 லட்சம் பேர் இறந்து போனார்கள். அத்துடன் அந்த ஸ்பானிஷ் ஃப்ளு நிற்கவில்லை. மூன்றாவது அலையாக வந்தும் தாக்கியது. இந்த மூன்று தாக்குதலின்போதும் வேறுவழியில்லாமல் அமெரிக்கா தனிமைப்படுத்துதல், ஊரடங்கு போன்ற நிலைகளுக்குச் சென்றது.
 

ward


அதுபோல கரோனா 17ஆம் தேதி முதல் இந்தியாவில் கடைப்பிடிக்கப்படும் ஊரடங்கு நடைமுறையில் ஏற்படுத்தப்படும் தளர்வினால் கரோனா தனது இரண்டாவது தாக்குதலைத் தொடுக்கும் எனச் சொல்கிறார்கள் மத்திய சுகாதாரத்துறை அதிகாரிகள். இந்தத் தாக்குதலின்போது இந்தியா முழுவதும் நோயாளிகளின் எண்ணிக்கை லட்சக்கணக்கில் உயரும். அதில் தற்பொழுது வரை குறைந்த எண்ணிக்கையில் நோய்த்தொற்றுள்ளவர்கள் உள்ள மாநிலங்களான உத்திரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், பீகார், ஜார்க்கண்ட், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களிலும் எண்ணிக்கை உயரும்.


இந்த மாநிலங்களைவிட அதிக சோதனைகளை நடத்தி வரும் மகாராஷ்டிரா, தமிழ்நாடு போன்றவை இப்பொழுது அதிக கரோனா நோய் பாதித்தவர்களின் பட்டியலில் முதல் மூன்று இடங்களைப் பெற்றிருக்கின்றன. ஆனால் இரண்டாவது அலை உருவாகும்போது சோதனைகள் அதிகம் மேற்கொள்ளப்படாத வடஇந்திய மாநிலங்கள் லட்சக்கணக்கான கரோனா நோயாளிகளைக் கொண்டு வரும் என்கிறார்கள்.

அதற்கு உதாரணமாக இரண்டாவது அலை கரோனா தாக்குதல் நடத்தும் அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தை உதாரணமாக சுட்டிக்காட்டுகிறார்கள். நியூயார்க் நகரத்தில் கரோனா உலகெங்கும் உச்சக்கட்டமாக இருந்த பிப்ரவரி, மார்ச் காலத்தில் 13 ஆயிரம் விமானங்களில் பயணிகள் வந்திறங்கினார்கள். அதனால் முதல் கட்டமாக நியூயார்க் கரோனாவின் பிடியில் சிக்கிக்கொண்டது. அதன் பிறகும் அமெரிக்க அதிபர் டிரம்ப் கவனக்குறைவாகச் செயல்பட்டதால் இப்பொழுது லட்சக்கணக்கான நோயாளிகள், ஆயிரக்கணக்கான மரணங்கள் என உச்சக்கட்டத்தை நோக்கி போய்க் கொண்டிருக்கிறது.
 

trump


நியூயார்க்கைப் போலவே சிங்கப்பூரிலும் கரோனா இரண்டாவது கட்டமாக எழுந்து ஆயிரக்கணக்கில் அந்தச் சின்னஞ்சிறு நாட்டில் நோயாளிகளை உருவாக்கிக் கொண்டிருக்கிறது. சுவீடன், இங்கிலாந்து போன்ற நாடுகள் கரோனாவின் இரண்டாவது அலை தாக்குதலில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கின்றன. இரண்டாவது அலை தாக்குதல் என்பது சமூகப் பரவல். இந்தியா அந்த நிலைக்கு வரவில்லை என பல வடஇந்திய மாநிலங்களில் சோதனைகளை முறையாக நடத்தாமல் மத்திய அரசு அறிவித்துக் கொண்டிருக்கிறது.

தமிழகத்திலும் கோயம்பேடு சந்தைக் காரணமாக கரோனா நோய்த்தொற்று, சமூகப் பரவலாக மாறிவிட்டது. அதனால் தான் கோயம்பேட்டுடன் தொடர்புடையவர்கள் எனக் கண்டுபிடிக்கப்பட்ட 7 ஆயிரம் வணிகர்களைத் தாண்டி காவல்துறையினர், பத்திரிகையாளர்கள், செவிலியர்கள் எனக் கரோனா சென்னை நகரம் முழுக்க பரவியதோடு மட்டுமல்லாமல் கேரளா, ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா எனப் பல்வேறு இடங்களுக்குப் பரவிக் கொண்டிருக்கிறது.


தென்னிந்திய மாநிலங்கள் தொடர்ந்து கரோனா சோதனை நடத்துவன் மூலம் இந்தப் பரவலை கண்டுபிடித்து வருகின்றன. ஆனால் 17ஆம் தேதிக்குப் பிறகு ஊரடங்கு தளர்த்தப்பட்டால் இன்று ஆயிரத்திற்குள் இருக்கக்கூடிய கரோனா நோய்த் தொற்று பல்லாயிரமாகப் பெருகிவிடும் என எச்சரிக்கிறார்கள் தமிழக சுகாதாரத்துறை அதிகாரிகள்.

இந்தச் சூழ்நிலையில் டாஸ்மாக்கைத் திறக்காமல் இருந்தால் ஓரளவு கரோனாவின் சமூக பரவலான இரண்டாவது தாக்குதலைத் தவிர்க்க முடியும். முன்பு தமிழ்நாடு முழுவதும் இருந்த ஆயிரக்கணக்கான மார்க்கெட்டுக்களை பேருந்து நிலையத்திற்கு அரசு மாற்றியது. காசிமேடு மீனவர் சந்தைகளை அரசு மூடியது. ஆனால் ஒரு நாளைக்கு ஒன்றரை லட்சம் மக்கள் வந்து செல்லும் கோயம்பேடு பகுதி மார்க்கெட்டை மூடாமல் வைத்தது. சென்னை மாநகராட்சி, சென்னை மாநகர காவல்துறை போன்றவை கோயம்பேடு அரசியல் பலத்தின் முன்பு மண்டியிட்டது. அதன் விளைவாக கரோனா தமிழகம் முழுக்க வேகமாகப் பரவியது.

அதுபோல டாஸ்மாக்கைத் திறந்தால் கரோனா வேகமாகப் பரவும். அதைத் தவிர்க்க முடியாதா எனத் தமிழக அரசு ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மத்தியில் கேட்டோம். தமிழக அரசு வருமானத்தில் பெட்ரோல் மீது விதிக்கப்படும் வரி விதிப்பும், டாஸ்மாக் மூலம் வரும் வருமானமும் மிக முக்கியமான பங்கை வகிக்கின்றன. இந்த இரண்டையும் தவிர்த்தால் ஏற்கனவே நாலரை லட்சம் கோடி ரூபாய் கடனில் இயங்கும் தமிழக அரசு திவாலாகிவிடும். மத்திய அரசு ஜி.எஸ்.டி. வரியில் தமிழக அரசுக்குக் கொடுக்க வேண்டிய பங்கைக் கொடுக்காமல் இருக்கும் சூழலில் அரசை நடத்த டாஸ்மாக்கைவிட்டால் வேறு வழியில்லை என்கிறார்கள்.

எப்படி இதுவரை முறையாகச் சோதனை நடத்தாத வடஇந்திய மாநிலங்கள் கரோனாவில் இரண்டாவது அலை தாக்குதலின் எழுச்சிப் புள்ளியாக அமையுமோ அதுபோல இதுவரை கரோனாவின் மேல்படியாக உள்ள தமிழகத்தில், கிராமங்களையும் கரோனாவின் தாக்குதலுக்கு உட்படுத்தும் நிகழ்வாக டாஸ்மாக் திறப்பு அமையும் என்கிறார்கள் தமிழக ஐ.ஏ.எஸ். அதிகாரிகள்.
 

http://onelink.to/nknapp


ஆக கரோனாவின் இரண்டாவது கட்ட தாக்குதல் தவிர்க்க முடியாத சம்பவமாகத் தமிழகத்தில் அமையப்போகிறது. இதில் ஒரே ஒரு ஆறுதல் அளிக்கக்கூடிய விஷயம் என்னவென்றால் ஸ்பானிஷ் ஃப்ளு மூன்று கட்டமாக தாக்குதல் நடத்தியது. மூன்றாவது கட்ட தாக்குதல், முதல் இரண்டு கட்ட தாக்குதல்போல் வலுவானதாக இல்லை. மூன்றாவது கட்டத்தில் ஸ்பானிஷ் ஃப்ளு முனை உடைந்த தாக்குதலைத்தான் நடத்தியது. அதற்குப் பிறகு மடிந்துபோனது.

கரோனா இரண்டாவது கட்ட தாக்குதலைத் தொடர்ந்து, மூன்றாவது கட்ட தாக்குதலை நடத்துமா? அதன் பிறகு முனை உடைந்து போகுமா? கரோனா தாக்குதலில் இருந்து மக்கள் தப்பிப்பார்களா? என்பதையெல்லாம் காலம்தான் முடிவு செய்யும். இரண்டாவது அலை தாக்குதல் லட்சக்கணக்கில் பெருகுமானால் இப்பொழுது இருந்ததைவிட கடினமான கண்டிஷன்களுடன் மறுபடியும் ஒரு நாடு தழுவிய ஊரடங்கை மோடி நிச்சயம் அறிவிப்பார் என்கிறார்கள் சுகாதாரத்துறை வல்லுனர்கள்.

 

 

Next Story

பிரதமர் மோடிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Election Commission notice to Prime Minister Modi

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது.." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது.

முன்னதாக பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்திருந்தனர். அந்த மனுவில், ‘சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் தேர்தல் பரப்புரையில் மதத்தை தொடர்புபடுத்தி பேசியதாக பிரதமர் மோடிக்கு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 77 கீழ் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதாவது பாஜக தலைவர் ஜேபி நட்டாவிற்கு அனுப்பட்டுள்ள இந்த நோட்டீஸில் வரும் 29 ஆம் தேதி காலை 11 மணிக்குள் தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுளது. அதே போன்று பாஜக அளித்த புகாரில் காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்திக்கும் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் அரசியல் கட்சிகள் தங்கள் வேட்பாளர்கள், குறிப்பாக நட்சத்திர பேச்சாளர்களின் பேச்சு அதிக பொறுப்புடன் இருக்க வேண்டும். உயர் பதவிகளில் இருப்பவர்களின் பிரச்சார உரைகள் மிகவும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 

Next Story

முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் நீதிமன்றத்தில் ஆஜர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Former Minister C. Vijayabaskar appears in court
கோப்புப்படம்

விராலிமலை சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக உள்ள முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த காலகட்டத்திலேயே ஊழல்கள், முறைகேடுகள் எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கினார். இதனால் 2017 ஆம் ஆண்டு அமைச்சராக இருந்தபோதே அவருடைய வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் 89 கோடி ரூபாய் பணப் பட்டுவாடா உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வருமான வரித்துறையினர், அமலாக்கத்துறையினர், கனிமவளத் துறையினர் எனப் பல்வேறு துறையினர் சோதனை நடத்தினர்.

அமைச்சராக இருந்த 2021 அக்டோபர் 18 ஆம் தேதி 2016 முதல் 2021 வரை காலக்கட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக 27 கோடி ரூபாய் அசையும் மற்றும் அசையா சொத்துகளை வாங்கிக் குவித்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சி. விஜயபாஸ்கர் மீது வழக்குப் பதிவு செய்தனர். வீடு உள்ளிட்ட அவருக்கு தொடர்புடைய 56 இடங்களில் சோதனை நடத்தினர். சோதனையில் 23.85 லட்சம் ரூபாய் ரொக்கம், 4.87 கிலோ தங்கம், 136 கனரக வாகன சான்றிதழ்கள், பல்வேறு ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைப்பற்றினர்.

அதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரும் அவருடைய மனைவியும் வருமானத்திற்கு அதிகமாக 35.29 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 216 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். 800க்கும் மேற்பட்ட ஆவணங்கள் அந்த குற்றப்பத்திரிகையில் இணைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக விஜயபாஸ்கரும், அவரது மனைவி ரம்யாவும் இன்று (25.04.2024) நேரில் ஆஜராகியுள்ளனர். இதனையடுத்து நீதிமன்றம் இந்த வழக்கை ஜூன் 12ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.