Skip to main content

மூக்கறுபட்ட முன்னோர்கள்!

Published on 14/12/2017 | Edited on 14/12/2017
மூக்கறுபட்ட முன்னோர்கள்!

மைசூரை  பழி தீர்த்த மதுரை!

சாத்தூர் அருகில் உள்ள தாயில்பட்டி என்ற கிராமத்தில் ஒரு சுப நிகழ்ச்சி. முந்தைய இரவில், உறவினர்கள் அவரவர்க்குத் தெரிந்த அந்தக்காலத்தில் நடந்தவைகளை காரசாரமாக விவாதித்தனர். அப்போது, பெருசு ஒருவர் தன் பேத்தியை மடியில் வைத்திருந்தார். அந்தச் சிறுமிக்கு வயது இரண்டு கூட நிரம்பவில்லை. பெருசு அவளிடம் “சின்ன தாத்தாவ பாரு.. மூக்கை அறுத்துருவேன்னு சொல்லு..” என்றார். அவளும் தன் வலது கை ஆள்காட்டி விரலை மூக்கின் மீது வைத்து, அறுப்பது போல பாவனை செய்தாள். ”உங்க மூக்கு போச்சு..” என்று சின்ன தாத்தாவைப் பார்த்து உறவினர் கூட்டம் சிரித்தது. 

வரலாறு முக்கியம்!

அந்தப் பெருசு சொன்னது ”அட, ஏம்ப்பா சிரிக்கிறீங்க? பச்சப்புள்ள இப்ப வெளயாட்டா சொன்னாலும்.. இதெல்லாம் ஒரு காலத்துல ரொம்ப தீவிரமா நடந்திருக்கு.. வரலாறு முக்கியம் தம்பிகளா..  நம்ம முன்னோர்கள்ல ரொம்ப பேரு மூக்கறுபட்டது தெரியாம சிரிக்காதீங்க.” என்றார் சீரியஸாக. 

நம் முன்னோர்கள் மூக்கறுபட்டார்களா? வரலாற்று பக்கங்களைப் புரட்டினோம். 1868-இல் மெட்ராஸ் கவர்மெண்ட் ஆணைக்கிணங்க, ஜே.எச்.நெல்சன் என்பவர் தொகுத்தளித்த  ‘The Madura Country – A Manual’ (மதுரை தேசம் - ஒரு குறிப்பேடு) என்ற புத்தகத்திலும், 1924-இல் ஆர்.சத்யநாத அய்யர் மற்றும் எஸ்.கிருஷ்ணசாமி அய்யங்காரின் பங்களிப்போடு எழுதப்பட்ட ‘History of the Nayaks of Madura’ (மதுரை நாயக்கர்களின் வரலாறு) என்ற புத்தகத்திலும் அந்தக்கால மூக்கறுப்பு போர் குறித்தும் மக்கள் சந்தித்த கொடுமைகள் குறித்தும் தகவல்கள் கொட்டிக் கிடந்தன. 

‘அவனை சும்மா விட மாட்டேன். என்னைக்காச்சும் ஒரு நாள் என்கிட்ட மூக்குடைபடுவான்.’ என, இன்றும் நம்மில் பலர் சொல்வது உண்டு. ’அவனுக்குச் சரியான நோஸ்-கட்’ என்று இப்போதும் சொல்கிறோம் அல்லவா? ‘நல்லா மூக்கறுபட்டியா?’ என்பது போன்ற  இன்றைய கேலிப் பேச்சுக்களின் பின்னணியில் கொடுமையான வரலாறு இருக்கிறது.  

திருமலை நாயக்கரை திணறடித்த கன்னட வடுகப் படை!





விஜயநகரப் பேரரசின் கீழ் மதுரை நாயக்க மன்னர்கள் ஆட்சி புரிந்திருக்கின்றனர். மதுரையை ஆண்ட நாயக்க மன்னர்களுள் புகழ் பெற்றவர் திருமலை நாயக்கர். கி.பி.1623-லிருந்து 1659 வரை இவரது ஆட்சிக் காலமாக இருந்தது.  திருமலை நாயக்கர் காலத்திலேயே விஜயநகர பேரரசு வீழ்ச்சியடைய ஆரம்பித்தது. கி.பி.1625 தொடக்கத்தில் மைசூர் அரசரான சாமராஜ உடையாருக்கும் திருமலை நாயக்கருக்கும் பகை உண்டாகி, போர் நடந்தது. மைசூர் படை திண்டுக்கல் வரை வந்தது. அப்போது, திருமலை நாயக்கரின் தளபதி ராமபய்யனும், கன்னிவாடி பாளையக்காரர் ரங்கன்ன நாயக்கரும் மைசூர் படையை எதிர்கொண்டு தோற்கடித்தனர்.  அதன்பிறகு, விஜய நகர அரசர் மூன்றாம் ஸ்ரீரங்கன் ஆட்சிக் காலத்தில், மதுரை, தஞ்சை, செஞ்சி ஆகியவற்றை ஆண்ட நாயக்கர்களின் கூட்டுப்படைக்கும், விஜயநகர் அரசர் மற்றும் மைசூர் அரசர் ஆகியோரின் படைக்கும் போர் மூண்டது. பீஜப்பூர் சுல்தானின் உதவியுடன், விஜயநகர் அரசை வீழ்த்தி, சுதந்திர நாடாக மாற்றம் பெற வைக்கிறது நாயக்கர் கூட்டணி. இதனால், மைசூர் அரசுக்கு பின்னடைவு ஏற்பட்டு, விஜயநகர அரசர் மைசூர் அரசரிடம் தஞ்சம் அடைய வேண்டியதாயிற்று. 

தாங்கள் இரண்டு முறை வீழ்த்தப்பட்டதற்கு, பழிக்குப்பழி வாங்கும் முயற்சியிலும், மீண்டும் விஜயநகர அரசை தோற்றுவிக்கும் முயற்சியிலும் 1656-இல் மைசூர் அரசர் கந்தரூவ நரசராஜா, நாயக்கர் ராஜ்ஜியத்தின் மீது போர் தொடுத்தார். மைசூர் அரசரின் தளபதி கொம்பையாவின் தலைமையில் கன்னட வடுகப்படையினர்,  திருமலை நாயக்கரின் ஆட்சிக்கு உட்பட்ட (இன்றைய சேலம் மாவட்டம்) சத்தியமங்கலத்துக்குள் புகுந்து, ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என அனைவர் மீதும் தாக்குதல் நடத்தியது. இதில் கொடுமை என்னவென்றால், தாக்கப்பட்டவர்களின் மூக்குகள் மேலுதடுடன் சேர்த்து அறுக்கப்பட்டு, பின்னர் அவை சாக்கில் குவிக்கப்பட்டு, மைசூர் அரசரின் பார்வைக்கு அனுப்பப்பட்டதுதான். தொடர்ச்சியாக பல ஊர்களையும் தாக்கி, திண்டுக்கல்லை அடைந்து மதுரையை நோக்கி முன்னேறியது கன்னடர் படை. 

சேதுபதி நீட்டிய ஆதரவுக்கரம்!




திடீர் தாக்குதலால் நிலைகுலைந்துபோன திருமலை நாயக்கர் காட்டுக்குள் ஓடி ஒளிந்துகொண்டார். ஆனாலும், நிலைமை மேலும் மோசமாகி, மதுரை மக்களுக்கு மூக்கை இழக்கும் அவல நிலை வந்துவிடக் கூடாது என்றெண்ணி, தன் மனைவி மூலம் இராமநாதபுரம் ரகுநாத சேதுபதியின் உதவியை நாடினார். சேதுபதி ரகுநாத தேவரும் உடனடியாக 25000 வீரர்களை திரட்டிக்கொண்டு மதுரை சென்றார். மைசூர் வடுக படைக்கும் மதுரைக்கும் இடையில் ஒரு சுவர் போல் வீரர்கள் மறித்து நின்றனர். சேதுபதி ரகுநாத தேவர், நாலுகோட்டை சீமையின் தலைவர் மதியாரழக தேவர், படமாத்தூர் சீமை தலைவர் பொய்யாரழகத்தேவர் போன்றோர் வண்டியூரில் முகாமிட்டு இருந்தனர். சேதுபதியின் படையில் இருந்த 25000 வீரர்கள், மதுரை நாயக்கர் படையில் இருந்த 35000 வீரர்கள் என, மொத்தம் 60000 படை வீரர்கள் கன்னட படையின் முற்றுகையை தகர்த்தெறிந்தனர். மைசூர் வடுகப் படையினர் திண்டுக்கல்லை நோக்கி விரட்டியடிக்கப்பட்டனர். 

காய்ந்து கருவாடான 12000 வீரர்களின் உடல்கள்!




திண்டுக்கல் கோட்டையில் மைசூர் படையினர் தஞ்சம் அடைந்தனர்.  சில நாட்களிலேயே, அவர்கள் எதிர்பார்த்த 20000 பேர் கொண்ட படை மைசூரில் இருந்து வந்தது. சேதுபதி தலைமையிலான படைகளும் மைசூர் படைகளும் நேருக்கு நேர் மோதின. போர் வெறி மேலிட்ட இந்த தாக்குதலில், இரு தரப்பிலும் 12000 பேர் கொல்லப்பட்டனர். வீரர்களின் உடல்கள் பல நாட்கள் அதே இடத்தில் கிடந்ததால் சிதைந்து போனது. காய்ந்து கருவாடானது. திண்டுக்கல்லில் அந்த இடத்தை, இன்றும் கருவாட்டுப்பொட்டல் என்றே அழைக்கின்றனர். சேதுபதி படையினரின் தாக்குதலால், சிதறி ஓடினார்கள் மைசூர் படையினர். அவர்களை விடாமல், மைசூர் வரை துரத்திச் சென்றார்கள் சேதுபதி படையினர். பதிலுக்குப் பதில் மைசூர் படை வீரர்களின் மூக்கையும் அறுத்தனர். 

மூக்கறு போர் வெற்றி மண்டபம்!




வெற்றியோடு திரும்பிய சேதுபதி மகாராஜாவுக்கு மதுரையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அந்த வெற்றியை காலமெல்லாம் நினைவுபடுத்தும் வகையில், மதுரை தல்லாகுளம் அருகில், சேதுபதி மகாராஜாவுக்கு கல் மண்டபம் ஒன்றை கட்டினார்கள். சேதுபதியைப் பெருமைப்படுத்தும் விதத்தில் கட்டப்பட்ட அந்த மண்டபத்துக்கு ‘மூக்கறு போர் மண்டபம்’ என்று பெயர் வைத்தார்கள். 

அறுத்து வருவோர்க்கு அரசரின் வெகுமதி!

வரலாற்றின் மிகக் கொடுமையான போர் முறைகளில் ஒன்றுதான் மூக்கறுப்பு போர். எதிரி நாட்டினரைக் கொல்லாமல், அவர்களின் மூக்கை மீசையுடன் அறுத்து நிரந்தரமான வடுவை ஏற்படுத்தி, முகத்தை சிதைப்பதுதான் அந்தப் போர் முறை. திருமலை நாயக்கர் மீது மைசூர் அரசர் கந்தரூவ நரசராஜா கொண்டிருந்த கடுமையான பகைமையால், கொடூரமாக எதிரிகளின் மூக்கையும், மேலுதட்டையும் அறுத்தெடுக்கக்கூடிய கூர்மையான கருவிகளைத்  தயார் செய்தார். போரில் வீரர்களைக் கொல்வதுதான் மரபு. மைசூர் அரசரோ,  “எதிரி நாட்டில் எதிர்ப்படுவது யாராக இருந்தாலும் அவர்களின் மூக்கையும், மேலுதட்டையும் அறுத்துக்கொண்டு வாருங்கள். வெகுமதி அளிக்கிறேன்.” என்றார். மேலும் அவர், “வீரர்களாகிய   நீங்கள் கொண்டுவரும்  மூக்குகளில், மேலுதட்டுடன் மீசையும் இருந்தால் சன்மானம் அதிகமாகத் தருவேன்.” என்று வெறியூட்டினார்.   போரில் திருமலை நாயக்கரின் ஆட்சிக்குட்பட்ட பகுதியில், எதிர்ப்பட்ட  மக்களின் மூக்குகளை மேலுதட்டோடு அறுத்தெடுத்த மைசூர் படையினர், அவற்றை மைசூர் மன்னரிடம் காட்டி, தக்க பரிசு பெற்றனர். இதற்கு பதிலடியாக, திருமலை நாயக்கர் படையினரும், சேதுபதி படையினரோடு சேர்ந்து, மைசூருக்குள் புகுந்து, எதிரிகளின் மூக்குகளை அறுத்துக் கட்டி மதுரைக்கு அனுப்பி வைத்தனர். 


மானம் இழந்து நடைபிணங்களாக வாழ்ந்தார்கள்!



மூக்கறுபட்ட நிலையில் ஒருவர் இருப்பாரேயானால், அவர் தனது மானத்தை இழந்து வாழ்வதாகவே கொள்ளமுடியும். உயிரைவிட மானம் பெரிதல்லவா? சூர்ப்பனகை மூக்கறுப்பும், ராம-ராவண யுத்தமும் நாம் படித்தறிந்ததுதான். எதிரி நாட்டினரின் மூக்கை அறுத்து, அவர்களை அவமானச் சின்னங்களாக, அவர்களது நாட்டிலேயே நடமாடவிட வேண்டும் என்பதே அந்தப் மூக்கறு போர்முறையை வகுத்த அரசர்களின் கொடூர சிந்தனையாக இருந்திருக்கிறது. இத்தகைய தாக்குதலுக்கு ஆளானோர் நம்மிடையே நடைபிணங்களாக வாழ்ந்திருக்கின்றனர். 

நல்லவேளை அந்தக் காலக்கட்டத்தில் நாம் பிறக்கவில்லை. ’நோஸ்-கட்’ பேச்சுக்கே, மூக்கின் மீது கோபம் பொத்துக்கொண்டு வரும் இந்தக் காலத்தில் பிறந்ததால், ஆயுதத்தால் மூக்கறுபடாமல் தப்பித்தோம். இப்படி நினைத்துத்தான் நாம் ஆறுதல் அடைய வேண்டும். 

-சி.என்.இராமகிருஷ்ணன்

சார்ந்த செய்திகள்