Skip to main content

இந்தியாவின் சாதனையை முறியடித்த எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் - எக்ஸ்...

Published on 25/01/2021 | Edited on 25/01/2021

 

space x launches 143 satellites by falcon and creates record

 

விண்வெளித்துறையில் இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ படைத்திருந்த உலக சாதனை ஒன்றை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் முறியடித்துள்ளது.  

 

உலகின் மிகப்பெரிய கோடீஸ்வரர்களின் ஒருவரான எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் விண்வெளித்துறையில் பல்வேறு புதிய தொழில்நுட்பங்களைப் புகுத்தி வருகிறது. மறுபயன்பாட்டிற்கு உகந்த விண்கலங்களை உருவாக்குவது, மனிதர்களை விண்வெளிக்கு அழைத்துச் சென்றுவரும் விண்கலத்தை உருவாக்குவது என இந்நிறுவனம் பல்வேறு புதிய முயற்சிகளை முன்னெடுத்து வருகிறது. அந்தவகையில், இந்தியாவின் இஸ்ரோ படைத்திருந்த உலக சாதனை ஒன்றை தற்போது இந்நிறுவனம் முறியடித்துள்ளது. 

 

கடந்த 2017 ஆம் ஆண்டு இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, தன்னுடைய பி.எஸ்.எல்.வி. சி-37 ராக்கெட் மூலம் 104 செயற்கைக்கோள்களை விண்ணுக்கு அனுப்பியது. இதுவே ஒரு ராக்கெட்டில் அதிக அளவில் அனுப்பப்பட்ட செயற்கைக்கோள்கள் எண்ணிக்கையாக இருந்தது. ஆனால், இந்த சாதனையை தற்போது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் முறியடித்துள்ளது. அமெரிக்காவின் ஃபுளோரிடாவிலிருந்து ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஃபால்கான் ராக்கெட் மூலம் மொத்தம் 143 செயற்கைக்கோள்கள் நேற்று (ஜனவரி 24) வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. இதன்மூலம் ஒரே ராக்கெட்டில் அதிக செயற்கைக்கோள்களை விண்ணுக்கு அனுப்பிய இஸ்ரோவின் சாதனையை ஸ்பேஸ் எக்ஸ் தற்போது முறியடித்துள்ளது. 

 

ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் மூலம் ஏவப்பட்ட இந்த 143 செயற்கைக்கோள்களில் 10 செயற்கைக்கோள்கள் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமானவை. இந்த செயற்கைக்கோள்கள், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் அடுத்த கனவுத்திட்டமான ஸ்டார்லிங்க் (நேரடியாக செயற்கைக்கோள்களிலிருந்து அதிவேக இணைய சேவை வழங்கும் தொழில்நுட்பம்) திட்டத்திற்காகப் பயன்படுத்தப்பட உள்ளன.  

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

 எலான் மஸ்க்கின் வருகை திடீர் ஒத்திவைப்பு!

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Elon Musk's visit is suddenly canceled!

உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவரும் டெஸ்லா கார் நிறுவனம் மற்றும் ஸ்பேஸ் - எக்ஸ் விண்வெளி ஆய்வு மைய நிறுவனருமான எலான் மஸ்க் உலகின் முன்னணி சமூக வலைத்தளமான ட்விட்டரைக் கடந்த 2022 ஆம் ஆண்டு தன்வசப்படுத்திக் கொண்டார். அதனைத் தொடர்ந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

இதனிடையே, எலான் மஸ்க் நாளை (21-04-24) இந்தியா வர திட்டமிட்டிருந்தார். ஆனால், இந்தியாவுக்கு புறப்படுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு எலான் மஸ்க் தனது பயணத்தை ரத்து செய்வதாக அறிவித்துள்ளார். 

ஏப்ரல் 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ளவிருந்த எலான் மஸ்க், பிரதமர் மோடியை சந்தித்து இந்தியாவில் உள்ள தமிழ்நாடு, மகாராஷ்டிரா, குஜராத் ஆகிய 3 மாநிலங்களில் ஏதாவது ஒன்றில் டெஸ்லா கார் தொழிற்சாலையை தொடங்க திட்டமிட்டிருந்ததாக கூறப்படுகிறது. மேலும், அவர், இந்தியாவில் 20 பில்லியன் டாலர் வரை முதலீடு செய்ய உள்ளதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில், எலான் மஸ்க்கின் இந்த பயணம் திடீரென ரத்தாகி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து எலான் மஸ்க் தனது ட்விட்டர் (எக்ஸ்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “துரதிருஷ்டவசமாக, மிகவும் கடுமையான டெஸ்லா கடமைகள் இந்தியாவிற்கு வருகை புரிவதை தாமதப்படுத்த்தியுள்ளன. ஆனால், இந்த ஆண்டின் பிற்பகுதியில் நான் வருகை தருவதை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்” எனப் பதிவிட்டுள்ளார். 

Next Story

கண்காணிப்பை தொடங்கியது ‘இன்சாட் 3டிஎஸ்’ செயற்கைக்கோள்!

Published on 11/03/2024 | Edited on 11/03/2024
'Insat 3DS' satellite started monitoring!

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO - இஸ்ரோ), வானிலை மற்றும் பேரிடர் எச்சரிக்கை தகவல்களை முன்கூட்டியே பெறுவதற்காக ‘இன்சாட் - 3டிஎஸ்’ என்ற செயற்கைக்கோளை வடிவமைத்திருந்தது. இந்த செயற்கைக்கோள் ஆந்திரா மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து ஜி.எஸ்.எல்.வி. எப்-14 ராக்கெட் மூலம் கடந்த 17 ஆம் தேதி (17-02-2024) மாலை 5.35 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.

அதிநவீன தொழில்நுட்பத்தில் உருவான வானிலை செயற்கைக்கோளை சுமந்து சென்ற ஜி.எஸ்.எல்.வி. எப் -14 ராக்கெட் சுமார் 420 டன் எடை கொண்டதாகும். 2 ஆயிரத்து 274 கிலோ எடையுடன் 6 சேனல் இமேஜர் உட்பட 25 விதமான ஆய்வுக் கருவிகளுடன் வடிவமைக்கப்பட்ட இன்சாட்-3டிஎஸ் செயற்கைக்கோள் மூலம் வானிலை மாற்றத்தை துல்லியமாகக் கண்டறிய முடியும் என்று இஸ்ரோ தெரிவித்திருந்தது.

இந்நிலையில் வானிலை ஆய்விற்காக அனுப்பி வைக்கப்பட்ட இன்சாட் - 3டிஎஸ் செயற்கைக்கோள் தனது கண்காணிப்பை தொடங்கியுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. மேலும் கடந்த 7 ஆம் தேதி இந்த செயற்கைக்கோள் மூலம் எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் இஸ்ரோ வெளியிட்டுள்ளது. அதில் நிலமேற்பரப்பு, வெப்பநிலை, மூடுபனி தீவிரம் உள்ளிட்ட சுமார் 40க்கும் மேற்பட்ட தரவுகளை இந்த செயற்கைக்கோள் வழங்க உள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.