Skip to main content

சின்னசேலம் அருகே சிறுத்தை நடமாட்டமா?

Published on 10/01/2021 | Edited on 10/01/2021

 

 Won't the leopard walk near Chinnasalem?

 

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள கனியாமூர் காட்டுக்கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி தேவேந்திரன். இவர் தனக்கு சொந்தமான நிலத்தில் கொட்டகை அமைத்து 21 ஆடுகள் மற்றும் பத்திற்கும் மேற்பட்ட மாடுகளை வளர்த்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு நள்ளிரவில் சுமார் 17 ஆடுகளை மர்ம விலங்கு கடித்து குதறியுள்ளது. இதில் 17 ஆடுகளும் இறந்து விட்டன. இது செந்நாய் அல்லது காட்டு நரி போன்ற விலங்குகள் கடித்திருக்கலாம் என வனத்துறையினர் ஆலோசித்து வந்தனர்.

 

இறந்த ஆடுகளின் கழுத்தில் மட்டுமே காயம் இருப்பதால் சிறுத்தை அல்லது வேறு ஏதேனும் மர்ம விலங்காக இருக்கலாம் என மக்கள் கூறினர். இதையடுத்து கள்ளக்குறிச்சி பகுதி வனத்துறையினர் அப்பகுதியில் நடமாடிய விலங்கின் காலடி தடயங்களை ஆய்வு செய்தனர். ஆனால் அதன் பிறகு அது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாவட்ட வருவாய்த் துறையினரும் இந்த சம்பவம் பற்றி கண்டுகொள்ளவில்லை. இதேபோல் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தோட்டப்பாடி என்ற ஊரிலும், கூட்டுரோடு பகுதியிலும் சுமார் 14 ஆடுகள் மர்ம விலங்கு கடித்து இறந்ததாக தெரியவந்துள்ளது. அதையும் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை.

 

கடந்த மூன்று மாதங்களாகவே சின்னசேலம் பகுதியில் வசிக்கும் மக்கள் அச்சத்துடனே இருந்து வருகின்றனர். இப்படிப்பட்ட நிலையில் கணியமூர் பகுதியைச் சேர்ந்த பெரியசாமி என்பவர் நேற்று முன்தினம் இரவு பைக்கில் சின்னசேலத்தில் இருந்து தனது ஊரான கணியமூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது கூட்டுரோட்டு பகுதியில் ஒரு தனியார் பள்ளி அருகே பைக்கின் வெளிச்சத்தை கண்டு இரண்டு சிறுத்தை குட்டிகள் போன்ற விலங்குகள் ரோட்டை கடந்து பாய்ந்து ஓடி உள்ளது. இதைப்பார்த்து பயந்துபோன பெரியசாமி, பைக்கை வேகமாக ஓட்டிக்கொண்டு ஊருக்கு சென்றுவிட்டார். பின்னர்  இதுகுறித்து பொது மக்களிடம் கூறி, அந்த மர்ம விலங்குகள் நடமாடிய பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர்.

 

அதில் சிறுத்தை குட்டிகள்செல்வது போன்ற காட்சி பதிவாகியுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள், இது சிறுத்தை தானா அல்லது வேறு ஏதேனும் மர்ம விலங்கா என்று தெரியாமல் குழப்பத்தில் உள்ளனர். இது குறித்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் பரவிவருகிறது. இனிமேலாவது வனத்துறையினர் வருவாய்த் துறையினர் இதுகுறித்து விரைந்து  நடவடிக்கை எடுப்பார்களா என்று வேண்டுகோள் வைக்கிறார்கள் அப்பகுதி மக்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மக்களைத் தொடர்ந்து அச்சுறுத்தி வந்த சிறுத்தை; கூண்டு வைத்துப் பிடித்த வனத்துறை

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
leopard caught in a cage while hunting cattle near Thalavady

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட தாளவாடி வனச்சரகத்தில் யானை, சிறுத்தை, புலி உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இதில் சிறுத்தைகள் அவ்வப்போது வனப்பகுதியை விட்டு வெளியேறி விவசாயத் தோட்டத்தில் புகுந்து ஆடு மாடுகளைக் கொன்று வருவது தொடர்கதையாகி வருகிறது.

கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய சிறுத்தை ஒன்று தாளவாடி அடுத்த   மல்குத்திபுரம் தொட்டியைச் சேர்ந்த பாக்கியலட்சுமி என்பவரின் 6 ஆடுகளையும், 2கன்று குட்டிகள், 20 வான்கோழி, 5 காவல் நாய் ஆகியவற்றை வேட்டையாடி கொன்றது. இதைத்தொடர்ந்து அந்தப் பகுதியில் உள்ள கால்நடைகளையும் அந்தச் சிறுத்தை கொன்று  வந்தது.  அதே போல் கடந்த 3 நாட்கள் முன்பு அதே பகுதியில் உள்ள பாக்கியலட்சுமி என்பவரின் வீட்டில் இருந்த சி.சி.டி.வி. கேமராவில் சிறுத்தை நடமாட்டம் பதிவானது. இதனால் அப்பகுதி மக்கள் பீதி அடைந்தனர்.

தொடர்ந்து கால்நடைகளை வேட்டையாடி மக்களை அச்சுறுத்தி வரும்  சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் வனத்துறையினருக்கு  கோரிக்கை வைத்து வந்தனர். இந்த நிலையில் நேற்று இரவு பாக்கியலட்சுமி தோட்டத்தில் சிறுத்தையைப் பிடிக்க வனத்துறையினர் கூண்டு வைத்தனர். கூண்டின் ஒரு புறம் காவல் நாயை கட்டி வைத்தனர். இந்நிலையில் நேற்று நள்ளிரவில் அந்தப் பகுதிக்கு வந்த சிறுத்தை  கூண்டில் இருந்த நாயை வேட்டையாட கூண்டுக்குள் சென்றபோது கூண்டில் சிக்கி உள்ளது. இன்று காலை கூண்டில் இருந்து பயங்கரமாக சத்தம் வந்ததால் அப்பகுதி மக்கள் சென்று பார்த்த போது சிறுத்தை கூண்டில் சிக்கியிருப்பது தெரிய வந்தது.

இந்தத் தகவல் காட்டு தீ போல் பரவியதால் சிறிது நேரத்தில் பாக்கியலட்சுமி தோட்டத்திற்கு அப்பகுதி மக்கள் திரண்டு வந்தனர். பின்னர் இது குறித்து தாளவாடி வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வனத்துறையினர் லாரியில் வந்து கூண்டுடன் சிக்கிய சிறுத்தையை லாரியில் ஏற்றி அடர்ந்த வனப்பகுதியில் கொண்டு செல்ல அழைத்து சென்றனர். கிட்டத்தட்ட ஒரு மாதமாக அச்சுறுத்தி வந்த சிறுத்தை கூண்டில் சிக்கியதால் அப்பகுதி மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

Next Story

பட்டப்பகலில் ஒருவர் பெட்ரோல் ஊற்றி எரிப்பு; போலீசார் விசாரணை

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
In broad daylight, someone poured petrol and set it on fire; Police investigation

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பட்டப்பகலில் சித்தப்பா மீது மகனே பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் அடுத்து உள்ள சவரக்கோட்டை பிரிவு பகுதியில் வசித்து வருபவர் வடமலை. அவருடைய மகன்கள் சின்னவன் மற்றும் மணி. மணியின் மகன் செந்தில். கடந்த நான்கு நாட்களுக்கு முன்னதாக செந்தில் அவருடைய விவசாய நிலத்தில் அறுவடை பணிக்காக டிராக்டரில் சென்றுள்ளார். அப்பொழுது சித்தப்பா சின்னவன் மற்றும் செந்தில் ஆகியோருக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இது தொடர் பிரச்சனையாக இருந்து வந்த நிலையில் இருதரப்பினரும் காவேரிப்பட்டினம் போலீசாரிடம் புகார் அளித்தனர். போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் சித்தப்பா சின்னவன் தீவனக்கடை ஒன்றில் இருந்த பொழுது கடைக்குச் சென்ற செந்தில் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை அவர் மீது ஊற்றி பற்ற வைத்தார்.

இதில் உடல் முழுவதும் தீப்பற்றி எரிந்த சின்னவனை அங்கிருந்தவர்கள் நேற்று தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். பட்டப்பகலில் ஒருவர் மீது பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட சம்பவம் கிருஷ்ணகிரியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.