தமிழகத்தில் நவம்பர் 6-,ஆம் தேதி முதல், 'வேல் யாத்திரை' நடைபெறும் என தமிழக பா.ஜ.க தலைமை அறிவித்தது. யாத்திரைக்கு அனுமதி அளிக்க முடியாது என தமிழக அரசு நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது. இந்நிலையில், பா.ஜ.க தரப்பிலிருந்து அவசர வழக்கு, சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுவாகத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பா.ஜ.க பொதுச் செயலாளர் நாகராஜன் தாக்கல் செய்த மனுவை, இன்று மாலை அவசர வழக்காக நீதிபதி சத்தியநாராயணன் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது.
வழக்கில், தமிழகத்தில் கோவில்கள் திறக்கப்பட்ட நிலையில் நாங்கள் வழிபாடு செய்வதைத் தடுப்பது ஏன்? என வாதிட்ட பா.ஜ.க தரப்பு, யாத்திரையில் பங்கேற்றோர் விவரங்கள் இல்லாமல் வழக்குத் தொடர்ந்துள்ளார். நவம்பர் 16-க்குப் பிறகு, மத நிகழ்ச்சிகளில், 100 பேர் வரை பங்கேற்கலாம் என அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. யாத்திரைக்கு அனுமதி கோரி விண்ணப்பித்த பின்னரே அரசாணை வெளியிடப்பட்டுள்ளது என பா.ஜ.க தரப்பு தெரிவித்தது. மத்திய அரசின் வழிகாட்டுதல்களை மீறி தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது என பா.ஜ.க தரப்பு புகார் வைத்தது.
முருகன் கோவில் இல்லாத பகுதிகளுக்கு ஏன் யாத்திரை செல்கிறீர்கள் என உயர்நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். கோவிலுக்குச் செல்வதுதான் நோக்கம் என்றால் அங்கு மட்டும் செல்ல வேண்டியதுதானே எனவும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.