திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவில் அருகே லாரி மோதியதில் உயிரிழந்தவர்களுக்கு முதலமைச்சர் நிவாரணம் அளித்துள்ளார்.
திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவில் பகுதியில் உள்ள வாலிபாளையம் கிராமத்தில் வேனும், லாரியும் மோதி விபத்துக்குள்ளானது. இதில் லாரி மோதியதில் வேன் தலைக்குப்புற கவிந்தது. இந்த விபத்தில் நாச்சிமுத்து என்பவரின் மனைவி சரோஜா (வயது50), கோவிந்தராஜன் என்பவரின் மனைவி பூங்கொடி (வயது48), கிட்டுசாமி (வயது45) மற்றும் தமிழரசி (வயது 17) ஆகியோர் உயிரிழந்தனர். இந்நிலையில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தமிழக அரசு நிதியுதவி அளித்துள்ளது.
இது குறித்து வெளியான செய்திக்குறிப்பில், “இச்செய்தியினை கேள்விப்பட்டு மனவேதனை அடைந்தேன். செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதனை உடனடியாக விபத்தில் பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்து, ஆறுதல் கூறி அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்திட அனுப்பி வைத்துள்ளேன்.
மேலும், இவ்விபத்தில் படுகாயமடைந்து, தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள பழனி (வயது 50), வளர்மதி (வயது 26), இந்துமதி (வயது 23) மற்றும் காயத்ரி (வயது 12) ஆகியோருக்கு சிறப்பான சிகிச்சை அளிக்க அறிவுறுத்தியுள்ளேன்.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும். அவரது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 2 இலட்சம் ரூபாயும், படுகாயமடைந்தவர்களுக்கு தலா ஐம்பதாயிரம் ரூபாயும், முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து நிதியுதவி வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்” என முதலமைச்சர் கூறுவதாக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.