விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் காவல் நிலையம் கடந்த 01.10.1920 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. அதன்படி 01.10.2020 உடன் 100-ஆண்டு முடிவடைந்ததை அடுத்து திருவெண்ணெய்நல்லூர் காவல் நிலையம் நூற்றாண்டு விழா நடைபெற்றது.
விழாவிற்கு விழுப்புரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். விழுப்புரம் கூடுதல் காவல்துறை கண்கானிப்பாளர் தேவநாதன், போலீஸ் துணை சூப்பிரண்டுகள் நல்லசிவம், இருதயராஜ், ராஜன், ரவிச்சந்திரன், பாலச்சந்தர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
திருவெண்ணெய்நல்லூர் அணைக்கட்டு சாலை ஆகிய பகுதிகளில் காவல் உதவி மையத்தை திறப்புவிழா செய்தும் மரக்கன்றுகள் நட்டும் குத்துவிளக்கேற்றி சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது, “பொதுமக்கள் விருப்பத்திற்கு ஏற்றவாறு காவல்துறையினர் பணியாற்ற வேண்டும். பொது மக்கள் விரும்பும் துறையாக காவல்துறை இருக்கவேண்டும். பொதுமக்களின் குறைதீர்க்கும் இடமாக மாற வேண்டும். அனைவரும் காவல் நிலையம் வரலாம் இந்த பகுதியில் நல்ல முறையில் பணிபுரிய வேண்டும். காவல்துறையினர் 24 மணி நேரமும் பணியாற்றுகின்றனர் மக்கள் நிம்மதியாக தூங்குகின்றனர். கிராமபுறங்களில் 100 நாள் வேலைத்திட்டத்திற்கு மக்கள் செல்லும்போது வீடுகளில் திருட்டு சம்பவங்கள் நடைபெறுகின்றன. இதனால் பொதுமக்கள் தங்கள் வீட்டில் உள்ள பொன் பொருள் உடமைகளை லாக்கரில் வைத்து பூட்டி பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும். பொதுமக்கள் காவல்துறையினருக்கு ஒத்துழைப்பு நல்கினால் மட்டுமே நல்ல முறையில் சிறப்பாக பணியாற்ற முடியும். அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும்” என பேசினார்.