முதலமைச்சரிடம் கஞ்சா பொட்டலத்துடன் மனு கொடுக்க வந்த பாஜக பிரமுகர் கைது செய்யப்பட்ட நிலையில் அவருக்கு நிபந்தனை ஜாமீன் விதிக்கப்பட்டுள்ளது.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஓய்வெடுப்பதற்காக கொடைக்கானல் சென்றுள்ள நிலையில் இதற்காக அவர் கடந்த 29ஆம் தேதி மதுரை விமான நிலையம் வந்திருந்தார். அப்போது தமிழக முதல்வரை சந்தித்து மனு கொடுப்பதற்காக பாஜகவினுடைய ஓபிசி அணியின் மாநில செயற்குழு உறுப்பினர் சங்கர் பாண்டியன் என்பவர் வந்திருந்தார். இதையறிந்த காவலர்கள் அவரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அவர் கஞ்சா பொட்டலத்துடன் முதல்வரை சந்தித்து மனு அளிக்க வந்திருப்பதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து அவனியாபுரம் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை செய்தனர்.
தொடர்ந்து அவர் மீது கலகம் செய்தல்; பிரச்சனையை ஏற்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் சங்கர் பாண்டி தரப்பில் ஜாமீன் கோரி மதுரை மாவட்ட ஆறாவது நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் நீதிபதி முத்துராமன் நிபந்தனையுடன் கூடிய ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளார். சங்கர் பாண்டி அவனியாபுரம் காவல் நிலையத்தில் தினந்தோறும் ஆஜராகி கையெழுத்து விட வேண்டும் என்ற நிபந்தனையுடன் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டிருக்கிறது.