mysskin speech about cinema and temple

பேராண்மை, அரவான், கபாலி உள்ளிட்ட படங்களின் நடித்த தன்ஷிகா, கடைசியாக விஜய் சேதுபதியின் லாபம் படத்தில் நடித்திருந்தார். இப்போது தி புரூப் என்ற தலைப்பில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தை நடன இயக்குநர் ராதிகா இய்க்கியுள்ளார். இதன் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். கோல்டன் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு தீபக் என்பவர் இசையமைத்துள்ளார். இப்படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் மே 3ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இந்த நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் படக்குழுவினரோடு மிஷ்கின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அவர் படக்குழு குறித்து நிறைய விஷயங்களைப் பகிர்ந்து கொண்டார். அதன் ஒரு பகுதியில் சினிமா குறித்து பேசிய அவர், “கடவுளுக்கு அப்புறம் அண்ணாந்து பார்க்கக் கூடிய விஷயம் சினிமா மட்டும்தான். நான் என் சினிமவிற்கு மட்டும் பேசவில்லை எல்லா சினிமாவுக்கும் தான் பேசுகிறேன். மாதம் ஒரு முறை ஒரு படத்தை ஒரு குடும்பத்தில் இருக்கும் 5 பேர் பார்க்கவில்லை எனச் சொன்னால், அது குடும்பமே இல்லை.

கோவிலுக்கு போகாதீங்க. படத்துக்கு போங்க. பாவம் பண்ணுனவங்கதான் கோவிலுக்கு போவாங்க. அல்லது பாவம் பண்ணப்போறவங்க போவாங்க. ஆனால் சினிமாவில் அப்படி கிடையாது. தியேட்டருக்குப் போய் சிரிக்க போறீங்க. அழப்போறீங்க. அலாதியாகரசிக்க போறீங்க. சிரிப்பதற்கு பயிற்சி எடுக்கணும். ஆயிரம் பேர் வந்து உட்காந்திருப்பான். பக்கத்துல இருக்குறவன் யார்னே தெரியாது. அவனைப் பார்த்து சிரிப்பீங்க. அவன் விசிலடித்தால் நீங்களும் விசிலடித்து கட்டிப்பிடிப்பீங்க” என்றார்.