Skip to main content

கொடநாடுகொலை வழக்கில் சிறைக்கு போகப் போகிறார் எடப்பாடி! -ஸ்டாலின்

Published on 15/02/2019 | Edited on 15/02/2019

 

stalin


 

திமுக சார்பில் தமிழகம் முழுவதும் ஊராட்சி சபை கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டங்களில் திமுக தலைவர் ஸ்டாலினும் பெரும்பாலான மாவட்டத்தில் நடக்கும் ஊராட்சி சபை கூட்டத்தில் கலந்து கொண்டு வருகிறார். அதுபோல் திண்டுக்கல் மாவட்டம்,  நிலக்கோட்டை தொகுதியில் இருக்கும் பள்ளபட்டி ஊராட்சி சபைக் கூட்டத்திலும் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டார்.
 

முதலில் காஷ்மீரில் தீவிரவாதிகளால் தாக்கப்பட்டு வீரமரணமடைந்த இந்திய ராணுவ வீரர்களுக்கு ஒரு நிமிடம் அஞ்சலி செலுத்தினார். அதன்பின் பேசத் தொடங்கிய ஸ்டாலின்... கடந்த ஜனவரி 3ம் தேதியிலிருந்து தமிழகம் முழுவதும் ஊராட்சி சபைக் கூட்டம் நடந்ததின் மூலம் 95 சதவீதம் ஊராட்சி சபைக் கூட்டங்கள் முடிந்துவிட்டது. வரும் 17 ஆம் தேதியோடு ஊராட்சி சபைக்கூட்டம் முடிய உள்ளது.  இந்த ஊராட்சி சபைக்கூட்டம் மக்களுக்கு பயன்படும் விதமாக நடந்து வருகிறது. தற்போது மத்திய, மாநில அரசுகள் திடீரென ஒரு அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறார்கள். தேர்தல் வரப் போவதை முன்னிட்டு மத்திய அரசு ஆறாயிரம் தருவதாக கூறி முன்கூட்டி 2000 தர மோடி தயாராகி வருகிறார். அதுபோல் எடப்பாடியும் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு 2000 ரூபாய் தருகிறேன் என அதிரடி அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறார்.


இது ஓட்டுக்காக கொடுக்கக்கூடிய பணமே தவிர இந்த எடப்பாடி ஆட்சி இரண்டு வருடத்தில் எந்த ஒரு திட்டத்தையும் தமிழக மக்களுக்கு கொண்டுவரவில்லை. தலைவர் கலைஞர் ஆட்சியில் இருந்தபோது பல திட்டங்களை மக்களுக்கு கொண்டு வந்திருக்கிறார் பெண்களுக்கு சொத்தில் சம உரிமை, வேலைவாய்ப்பில் 30% இடஒதுக்கீடு, தாலிக்கு தங்கம் திட்டம், சுய உதவிக்குழு, மருத்துவக்கல்லூரி திட்டம், விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், விவசாயக் கடன் 7 கோடி தள்ளுபடி இப்படி பல திட்டங்களை மக்களுக்கு கொண்டுவந்தார்.


மக்கள் தங்களது தொகுதியிலுள்ள குறைகளைக் கூறினர். அதன்பின் இறுதியாக பேசிய ஸ்டாலின்... நீங்கள் கூறிய குறைகளையெல்லாம் கோடிக்கணக்கில் திட்டங்கள் கொண்டு வந்து செயல்படுத்த வேண்டிய அவசியமே இல்லை. இந்த அரசு உள்ளாட்சி தேர்தலை நடத்தி இருந்தால் அந்தந்த பகுதிகளில் தலைவர்களும், மெம்பர்களும் வந்து இருப்பார்கள். அவர்கள் மூலம் உங்கள் குறைகளை சொல்லி இருந்தால் அதை நிவர்த்தி செய்து இருப்பார்கள். நாங்களும் இப்படி ஒரு ஊராட்சி சபை கூட்டம் போட வேண்டியதில்லை. அதனாலதான் ஊராட்சி சபை கூட்டங்களை தமிழகம் முழுவதும் நடத்தி உங்களுடைய குறைகளை கோரிக்கைகளையும் திமுக ஆட்சி வந்தவுடன் உறுதியாக  நிறைவேற்றி கொடுப்போம் என்பதை உறுதியாகச் சொல்கிறேன் நாங்கள் எப்பொழுதுமே சொல்வதை செய்வோம், செய்வதைத்தான் சொல்வோம்.
 

ஊழல், கோமாளித்தனம் மந்திரிகளின் ஆட்சிதான் நடக்கிறது. அதுபோல் ஜெ வின் கொடநாடு பங்களாவில் ஐந்துபேர் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். அந்த கொலைக்கு எடப்பாடியும் உடந்தை என்று நாங்கள் சொல்லவில்லை, அதில் சம்பந்தப்பட்டவர்கள் சொல்லியிருக்கிறார்கள். அந்த அளவுக்கு கொலைகார ஆட்சிதான் இங்கே நடக்கிறது. அதுபோல் கூடிய விரைவில் இந்த கொலைவழக்கு மூலம் எடப்பாடியும் சிறைக்குப் போகப்போவது உறுதி என்று கூறினார். இந்த ஊராட்சி சபை கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும் கழக துணை பொதுச் செயலாளருமான ஐ.பெரியசாமி. தொகுதி பொறுப்பாளர் சாமிநாதன். ஒட்டன்சத்திரம் சட்டமன்ற உறுப்பினரும் மேற்கு  மாவட்ட செயலாளரும்மான சக்கரபாணி. பழனி சட்டமன்ற உறுப்பினரும் கிழக்கு மாவட்ட செயலாளருமான ஐ.பி. செந்தில்குமார் உள்பட மாவட்ட பொறுப் பாளர்களுடன்  நகர. ஒன்றிய. பொறுப்பாளர்கள் மற்றும் சார்புஅணி பொறுப்பாளர்களும் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.

சார்ந்த செய்திகள்

Next Story

முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற திண்டுக்கல் தொகுதி வேட்பாளர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Chief Minister Stalin congratulates Dindigul candidate Sachithanantham

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் சிபிஎம். கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் சச்சிதானந்தத்தை திமுக மாநில துணைப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகிய இருவருடன் மாவட்டச் செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி செந்தில் குமார் ஆகியோரும் சென்னைக்கு நேரில் அழைத்து சென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற வைத்தனர்.

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறப் போகிறீர்கள் என்ற செய்தி கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன் எனக் கூறியதோடு எவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவீர்கள் எனக் கேட்டபோது சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியசாத்தில் வெற்றி பெறுவேன் எனக்கூறினார். அப்போது உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, இல்லை 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சிபிஎம் வேட்பாளர் வெற்றி பெறுவார் எனக் கூறினார்.   

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் ஐ.பெரியசாமியை பார்த்து நீங்கள் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என கூறுகிறீர்களா? எனக் கேட்டவுடன் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், உங்களின் வழிகாட்டுதலின் படி திண்டுக்கல் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தோம். தமிழக அரசின் நலத்திட்டங்களை பாராட்டி திண்டுக்கல் தொகுதியில் உள்ள வாக்காளர்கள் திமுக தலைமையிலான கூட்டணிக்கு அமோகமான வாக்குகளை அளித்துள்ளனர் என்றார். இந்த சந்திப்பின் போது  அமைச்சர் துரைமுருகன், அமைச்சர்  ஐ.பெரியசாமி,  அமைச்சர் சக்கரபாணி,  எம்.எல்.ஏ., ஐ.பி.செ ந்தில்குமார், ஆத்தூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கள்ளிப்பட்டி மணி, சிபிஎம்.வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் உடன் இருந்தனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தது குறித்து திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி சச்சிதானந்தம் கூறுகையில், “திமுக சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றிகளை தெரிந்து கொள்ள எவ்வளவு ஆர்வம் காட்டினாரோ அந்த அளவிற்கு கூட்டணி கட்சி சார்பாக (சிபிஎம்) போட்டியிட்ட எனது வெற்றி குறித்தும் தமிழக முதல்வர் ஆர்வமுடன் கேட்டதும், தொடர்ந்து மக்கள் பணியை சிறப்பாக செய்யுங்கள் என வாழ்த்தியதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நேரத்தில் எனது வெற்றிக்கு அயராது உழைத்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும், அமைச்சர் சக்கரபாணிக்கும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஐ.பி. செந்தில்குமாருக்கும் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் என்றும் நான் உறுதுணையாக இருப்பேன்” என்று கூறினார்

Next Story

'வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உத்தரவாதம்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns


18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் களைகட்டி வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும்.

அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்குக் கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார். பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது.

பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்துள்ளனர். சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns

இந்நிலையில் பிரதமர் மோடியின் பேச்சுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 'பிரதமர் மோடியின் நச்சு பேச்சு கேவலமானது, மிகவும் வருந்தத்தக்கது. மக்களின் கோபத்திற்கு அஞ்சி மத உணர்வுகளைத் தூண்டி வெறுப்பு பேச்சை நாடி உள்ளார் பிரதமர் மோடி. பிரதமரின் அப்பட்டமான வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடுநிலைமையைக் கைவிட்டு விட்டது. வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உண்மையான உத்தரவாதம்' என  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.