தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் நல ஆணையம் நடத்துகின்ற மாநில அளவிலான அனைத்து கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டிகளின் துவக்க விழா இன்று (02/03/2022) சென்னைப் புதுக் கல்லூரியில் நடைபெற்றது.
விழாவுக்கு தமிழக சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் தலைமை தாங்கினார்.சிறுபான்மை நல ஆணையத்தின் தலைவர் சா.பீட்டர் அல்போன்ஸ் வரவேற்புரை ஆற்றினார். மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, உயர்கல்வித்துறை அமைச்சர் முனைவர் க.பொன்முடி ஆகியோர் உரையாற்றினர்.
இந்நிகழ்வில் த.மு.மு.க., ம.ம.க.வின் தலைவர் பேராசிரியர் முனைவர் எம்.எச்.ஜவாஹிருல்லாஹ், சட்டமன்ற உறுப்பினர்கள் டாக்டர் நா.எழிலன், முனைவர் ச.இனிகோ இருதயராஜ், புதுக்கல்லூரி முதல்வர் முனைவர் எஸ்.பஷீர் அகமது ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
மாணவர்கள் சார்பில் பேசிய மாணவ, மாணவிகளுக்குப் பரிசளிப்பும், பாராட்டும் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் மாநில அளவில் நியமிக்கப்பட்ட மாவட்டப் பொறுப்பாளர்கள், பேராசிரியர்கள், கல்வியாளர்கள்,மாநகர மாணவர்கள், அரசியல் இலக்கியப் பிரமுகர்கள் திரளாகக் கலந்து கொண்டு நிகழ்வினைச் சிறப்பித்தனர்.
நிகழ்வினை மாநில ஒருங்கிணைப்பாளர்கள் பேரா.முனைவர் ஜே.கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், பேரா.முனைவர் ஜெ.ஹாஜாகனி, சென்னை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பேரா.முனைவர் ஜெ.சுலைமான், புதுக்கல்லூரி துணை முதல்வர் முனைவர் வ.கமால் நாசர் ஆகியோர் செய்திருந்தனர்.