Skip to main content

“என்னய்யா டூட்டி பார்க்குறீங்க...” டிராபிக் இன்ஸ்பெக்டரை ஓபன் மைக்கில் விரட்டிய எஸ்.பி..!

Published on 13/05/2019 | Edited on 13/05/2019

நகரெங்கும் உள்ள வழக்கமான போக்குவரத்து நெரிசலில் தன்னுடைய வாகனமும் சிக்கி மெல்ல தவழ்ந்து முன்னேற, "என்னய்யா டூட்டி பார்க்குறீங்க.?" என நகர டிராபிக் இன்ஸ்பெக்டரை, மாவட்ட எஸ்.பி. ஓபன் மைக்கில் வறுத்தெடுக்க பரப்பரப்பாகியுள்ளது காரைக்குடி துணைச்சரக காவல்துறை.

 

trafic

 

பாரம்பரியத்திற்கும், கல்விக்கும் பெயர் பெற்ற சிவகங்கை மாவட்டம் காரைக்குடியின் மிகப்பெரிய சாபக்கேடு போக்குவரத்து நெரிசலே.!! நகரப் போக்குவரத்துப் போலீசாரால் கல்லூரி சாலை, பெரியார் சிலை, முதல் பீட் மற்றும் இரண்டாம் பீட் ஆகிய இடங்களில் தானியங்கிப் போக்குவரத்து சிக்னல் அமைத்தும், நகர் மற்றும் புறநகரில் 40க்கும் அதிகமான கண்காணிப்பு கேமரா அமைத்தும் இன்று வரை போக்குவரத்து நெரிசலையும், குற்றங்களையும் கட்டுப்படுத்த முடியவில்லை. காரைக்குடிப் போக்குவரத்து நெரிசல் தீராத தலைவலி எனத் தெரிந்தும் போக்குவரத்துப் போலீசில் இன்ஸ்பெக்டர் முத்துராமன், எஸ்.ஐ.வீரக்குமார் மற்றும் போலீசார் உள்ளிட்டோரின் மொத்த எண்ணிக்கை 20-க்குள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதில் ஒரு போலீஸ் மருத்துவ விடுப்பிலும், மூன்று போலீசார் தேர்தல் வாக்கு எண்ணிக்கை மையத்திலும் வேலைப் பார்க்க மீதமுள்ள போலீசாரைக் கொண்டு காரைக்குடி போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த வேண்டிய நிலை.


 

இந்நிலையில், காரைக்குடி அழகப்பா எஞ்சினியரிங்க் கல்லூரி வளாகத்தில் இருந்த சிவகங்கைப் பாராளுமன்றத் தேர்தலில் வாக்குப்பெட்டிகளின் பாதுகாப்புக் குறித்துப் பார்வையிட காரைக்குடி வந்துள்ளார் சிவகங்கை மாவட்ட எஸ்.பி.யான ஜெயச்சந்திரன். போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்து மிதந்து வரவேண்டிய சூழ்நிலையால் பழைய பேருந்து நிலையம் தாண்டி முதல் பீட், இரண்டாம் பீட் மற்றும் பெரியார் சிலை தாண்டுவதற்குள், அதிலும் அண்ணபூர்ணா ஹோட்டல் அருகிலும், விவால்டி அருகிலும் அப்பகுதியைக் கடப்பதற்குள் போதும் போதுமென்றாகிவிட்டது மாவட்ட எஸ்.பி.க்கு.  அதன் பின் என்ன நினைத்தாரோ தெரியவில்லை. "என்னய்யா டூட்டிப் பார்க்குறீங்க.? மர நிழலில் இருந்து கொண்டு வண்டியை பிடித்து அபராதம் போடுவதிலேயே இருக்காதீங்க..! மொத்தமே மூன்று பீட்டிலும் 6 பேர் தான் இருக்காங்க.. உங்களுக்கு டிராபிக் வேலை தெரியலையென்றால், ‘எனக்குத் தெரியாது’ எனக்கூறிவிட்டு வேறு எங்கேனும் செல்லுங்கள். வெளியில் டூட்டிக்குப் போனாலும் உங்க ஆட்களை வரவழையுங்க. போதாகுறைக்கு அருகிலுள்ள போலீஸ் ஸ்டேஷன்களில் ஆட்களை வரவழையுங்க. சாயந்திரத்திற்குள் சரியாகனும்" என ஓபன் மைக்கில் டிராபிக் இன்ஸ்பெக்டர் முத்துராமனை வறுத்தெடுத்துள்ளார் மாவட்ட எஸ்.பி. ஜெயச்சந்திரன்.


 

"எஸ்.பி.கோப்பபட்டதுல தப்பில்ல சார்.! இதுக்கு முன்னாடி இருந்தவங்க சாலையோர ஆக்ரமிப்புக்களை அகற்றுவதில் அக்கறைக் காட்டியதோடு மட்டுமில்லாமல், எங்கெங்கு போக்குவரத்து நெரிசல் இருக்குன்னு பார்ப்பதற்காக நகரெங்கும் ஒரு ரவுண்ட் சுற்றி வருவாங்க. இப்ப அது கிடையாது. முடிந்த வரைக்கும் வாகனத்தை நிறுத்தி வழக்குப்பதிவும், வசூல் செய்வதிலும் இருக்காங்க. அதுவும் டிராபிக்கான இடத்தில் இருந்து வாகன பரிசோதனை செய்றாங்க. இவங்களே பாதி போக்குவரத்து நெரிசலுக்குக் காரணம்" என்கின்றனர் விபரமறிந்தப் போலீசார். 

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சென்னையில் ஒரு வருடத்திற்கு போக்குவரத்து மாற்றம்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Traffic change in Chennai for a year

சென்னை தெற்கு உஸ்மான் சாலை முதல் வடக்கு உஸ்மான் சாலை வரை மேம்பாலம் கட்டுமானப் பணி துவங்க உள்ளதால் நாளை (27.04.2024) முதல் அடுத்த ஆண்டு ஏப்ரல் 26 ஆம் தேதி (26.04.2025) வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், “மேட்லி சந்திப்பு தெற்கு உஸ்மான் சாலை முதல் வடக்கு உஸ்மான் சாலை வரை மேம்பாலம் கட்டுமானப் பணி துவங்க உள்ளதால் 27.04.2024 முதல் 26.04.2025 வரை ஒரு வருடத்திற்கு போக்குவரத்து மாற்றுப்பாதைகளில் செயல்படுத்தப்படுகிறது. அதன்படி வடக்கு உஸ்மான் சாலையில் இருந்து தி.நகர் பேருந்து நிலையம் நோக்கி வரும் வாகனங்கள் பனகல் பார்க் அருகில் உள்ள உஸ்மான் சாலை மேம்பாலத்தில் செல்லத் தடை செய்யப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக வாகனங்கள் மேம்பாலத்தின் அனுகு (சர்வீஸ் ரோடு) சாலை வழியாக சென்று பிரகாசம் சாலை, பாஷ்யம் சாலை, தியாகராயர் சாலை, பர்கிட் சாலை வழியாக தி.நகர் பேருந்து நிலையத்தை அடையலாம். 

Traffic change in Chennai for a year

பர்கிட் சாலை, மூப்பாரப்பன் தெரு சந்திப்பில் இருந்து மேட்லி நோக்கி செல்வதற்கு பேருந்துகள் மட்டும் அனுமதிக்கப்படும். மற்ற வாகனங்கள் மூப்பாரப்பன் தெரு, மூசா தெரு, தெற்கு தண்டபானி தெரு, மன்னார் தெரு வழியாக உஸ்மான் சாலை மூலம் தி.நகர் பேருந்து நிலையத்தை அடையலாம். தி. நகர் பேருந்து நிலையத்திலிருந்து சைதாப்பேட்டை அண்ணா சாலையை அடைய தெற்கு உஸ்மான் சாலை சென்று கண்ணம்மாபேட்டை சந்திப்பை அடைந்து தென்மேற்கு போக் சாலையில் சென்று சிஐடி நகர் நான்காவது பிரதான சாலை, சிஐடி நகர் மூன்றாவது பிரதான சாலை சென்று அண்ணா சாலையை அடையலாம். 

Traffic change in Chennai for a year

சிஐடி நகர் 1ஆவது பிரதான சாலையிலிருந்து வடக்கு உஸ்மான் சாலைக்குச் செல்லும் வாகனங்கள் கண்ணம்மாபேட்டை சந்திப்பில் தென்மேற்கு போக் சாலை வழியாகச் சென்று வெங்கட் நாராயணா சாலையில் சென்று நாகேஸ்வரன் ராவ் சாலை வழியாக வடக்கு உஸ்மான் சாலையை அடையலாம். தி.நகர் பேருந்து நிலையத்திலிருந்து வடக்கு உஸ்மான் சாலையை அடைய மேட்லி ரவுண்டானாவில் இருந்து பர்கிட் ரோடு சென்று வெங்கட் நாராயண சாலை வழியாக நாகேஸ்வர ராவ் சாலையில் இடதுபுறம் திரும்பி வடக்கு உஸ்மான் சாலையை அடையலாம். எனவே வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

தேர்தலுக்கு பின் சென்னை திரும்பும் மக்கள்; திணறும் பரனூர்

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
People returning to Chennai after elections; The stifling Paranur toll plaza

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று முன்தினம் (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு நேற்று முன்தினம் வாக்குப்பதிவு நடைபெற்றது.

ஏற்கனவே சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு இலட்சக்கணக்கானோர் வாக்களிப்பதற்காக சென்றிருந்தனர். இதன் காரணமாக ரயில் நிலையங்கள் மற்றும் பேருந்து நிலையங்களில் கூட்டம் அதிகரித்து காணப்பட்டிருந்தது. தொடர்ந்து வெள்ளி, சனி, ஞாயிறு என மூன்று நாட்கள் விடுமுறை என்பதால் கூட்டநெரிசல் அதிகமாக காணப்பட்டது. இந்நிலையில் தற்போது மூன்று நாள் விடுமுறை முடிந்து சென்னைக்கு அதிகப்படியான மக்கள் திரும்புவதால் பல்வேறு இடங்களில் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக சென்னை அடுத்துள்ள பரனூர் சுங்கச்சாவடியில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்படுகிறது.