Skip to main content

ஓடும் ரயிலில் கர்ப்பிணிக்கு பாலியல் தொல்லை: கோவை திமுக பிரமுகர் கைது!

Published on 29/03/2019 | Edited on 29/03/2019

ஓடும் ரயிலில் தூங்கிக் கொண்டிருந்த கர்ப்பிணியிடம் பாலியல் தொல்லையில் ஈடுபட்டதாக கோவையைச் சேர்ந்த திமுக பிரமுகரை சேலம் ரயில்வே காவல்துறையினர் கைது செய்தனர்.

 

 

கோவையைச் சேர்ந்த கணவனும் அவருடைய கர்ப்பிணி மனைவியும் சென்னையில் ஒரு விழாவில் கலந்து கொள்வதற்காக கடந்த 5ம் தேதி சென்று இருந்தனர். பின்னர் அவர்கள் கடந்த 10ம் தேதி, சென்னையில் இருந்து நீலகிரி விரைவு ரயில் மூலமாக கோவை சென்றனர். அவர்கள் சென்ற அதே ரயில் பெட்டியில், கோவை மாவட்டம் இருகூரைச் சேர்ந்த திமுக தலைமைச் செயற்குழு உறுப்பினரான சந்திரன் (65) என்பவரும் பயணம் செய்தார். 

 

 Sexual harassment in pregnant woman in train: Coimbatore DMK member arrested

 

கர்ப்பிணி படுத்திருந்த இருக்கைக்கு மேல் இருக்கையில் சந்திரன் படுத்து இருந்தார். நள்ளிரவு நேரத்தில், சந்திரன் தூக்கத்தில் இருந்த அந்த கர்ப்பிணிக்கு பாலியல் தொல்லை கொடுத்தாக கூறப்படுகிறது. அந்த ரயில் சேலம் ரயில் நிலையம் வந்து சேர்ந்தபோது, தனக்கு பாலியல் தொல்லை கொடுத்த சந்திரன் மீது சேலம் ரயில்வே காவல்துறையினரிடம் புகார் அளித்தார். 

 

 

அப்போது பணியில் இருந்த தலைமைக் காவலர் கிருஷ்ணமூர்த்தி, இரண்டு தரப்பினரையும் நேரில் அழைத்து விசாரித்தார். ஒரு கட்டத்தில் அவர்கள் சமாதானமாக செல்வதாக கூறியதால், அதை எழுதி வாங்கிக்கொண்டு அனுப்பி விட்டார். ஆனால், கோவை சென்ற பிறகு அந்த கர்ப்பிணியின் கணவர், கோவை ரயில்நிலைய காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதுகுறித்து கோவை ரயில்வே காவல்துறையினர், சேலம் ரயில்வே காவல்துறைக்கு தகவல் அளித்தனர். அதையடுத்து, கர்ப்பிணியின் கணவரை சேலத்திற்கு வரவழைத்த காவல்துறையினர் மீண்டும் எழுத்து மூலம் புகார் பெற்று, பாலியல் தொல்லை கொடுத்த சந்திரன் மீது எப்ஐஆர் பதிவு செய்தனர்.

 

 

இதையடுத்து ரயில்வே காவல் ஆய்வாளர் இளவரசி, மற்றும் காவலர்கள் இருகூர் சென்று சந்திரனை கைது செய்தனர். விசாரணையில் சந்திரனுடன் வந்த மற்றொரு நபரும் கர்ப்பிணிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரிய வந்தது. காவல்துறை நடவடிக்கைக்கு பயந்து அவர் தலைமறைவாகிவிட்டார். இந்நிலையில், கைதான சந்திரனை சேலம் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். 

 

 

வழக்கை விசாரித்த நீதிமன்றம், சந்திரனை வரும் ஏப்ரல் 11ம் தேதி வரை காவலில் வைக்க உத்தரவிட்டது. இதையடுத்து காவல்துறையினர் அவரை கைது செய்து, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

 

 

இதற்கிடையே, கர்ப்பிணி அளித்த புகாரை சரிவர விசாரிக்காமல் சமாதானமாகப் போய்விடும்படி கூறிய ரயில்வே தலைமைக் காவலர் கிருஷ்ணமூர்த்தியை அதிரடியாக பணியிடைநீக்கம் செய்து, ரயில்வே எஸ்பி ரோகித் நாதன்ராஜகோபால் உத்தரவிட்டார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.