Skip to main content

1.26 கோடி ரூபாய் நிலத்திற்காக விவசாயி கொலை! சாராய வியாபாரி உட்பட 2 பேர் கைது! 

Published on 07/12/2021 | Edited on 07/12/2021

 

 Rs 1.26 crore land farmer case 2 arrested including liquor dealer
சுப்ரமணி

 

ஆத்தூர் அருகே, வாரிசு இல்லாத சொத்தை அபகரிக்கும் திட்டத்துடன் விவசாயியை அடித்துக் கொலை செய்த வழக்கில் மூளையாக செயல்பட்ட சாராய வியாபாரி உள்ளிட்ட இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.

 

நாமக்கல் மாவட்டம், அரியாக்கவுண்டன்பட்டியைச் சேர்ந்தவர் சுப்பு என்கிற சுப்ரமணி (74). விவசாயியான இவர், திருமணம் செய்துகொள்ளாமல் தனியாக ஒரு வீட்டில் வசித்துவந்தார். இவருக்கு சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே கல்பகனூரில் சொந்தமாக 6 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. இந்த நிலத்தை, உள்ளூரைச் சேர்ந்த சாராய வியாபாரி பெருமாள் (55) என்பவருக்கு 1.26 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்ய கடந்த மார்ச் மாதம் ஒப்பந்தம் செய்திருந்தார். இதற்காக பெருமாள் அவருக்கு 10 லட்சம் ரூபாய் முன்பணமும் கொடுத்திருந்தார். 

 

இந்த ஒப்பந்தம் நடந்த சில நாள்களில், அதாவது கடந்த மார்ச் 23ஆம் தேதி விவசாயி சுப்ரமணி திடீரென்று மாயமானார். நாமகிரிப்பேட்டையைச் சேர்ந்த கனகம் என்பவர், தன்னுடைய உறவினர் சுப்ரமணியை காணவில்லை என்றும், அவரைக் கண்டுபிடித்து தருமாறும் உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுத்தாக்கல் செய்திருந்தார். 

 

உயர் நீதிமன்ற உத்தரவின்பேரில் நாமகிரிப்பேட்டை காவல் நிலையத்தினர் இதுகுறித்து வழக்குப் பதிவுசெய்தனர். முதற்கட்ட விசாரணையில் சுப்ரமணி காணாமல் போனது ஆத்தூர் சரகத்திற்குள் வந்ததால், இந்த வழக்கின் தொடர் விசாரணையை ஆத்தூர் காவல் நிலையத்திற்கு மாற்றினர். இதையடுத்து ஆத்தூர் காவல் நிலைய காவல்துறையினர் நடத்திய விசாரணையில், சுப்ரமணிக்கு குடும்பமோ, நேரடி வாரிசுகளோ இல்லாததை அறிந்த சாராய விபாயாரி பெருமாள், அவரிடம் கொடுத்த 10 லட்சம் ரூபாய் முன்பணத்தையும் பறித்துக்கொண்டு, வாரிசு இல்லாத சொத்தை முற்றிலும் அபகரிக்கும் நோக்கில் அவரை கொலை செய்திருப்பது தெரியவந்தது. 

 

 Rs 1.26 crore land farmer case 2 arrested including liquor dealer
பெருமாள்

 

தன்னுடைய திட்டத்திற்கு உள்ளூரைச் சேர்ந்த ராமதாஸ் (27), அறிவழகன், சக்திவேல், 19 வயது வாலிபர் உள்பட 6 பேரை ஈடுபடுத்தியுள்ளார். இவர்கள் அனைவரும் சுப்ரமணியை கொலை செய்து, சிவகங்காபுரத்தைச் சேர்ந்த விவசாயி சக்திவேலின் கரும்பு தோட்டத்தில் அவரின் சடலத்தைப் புதைத்துவிட்டதும் தெரியவந்தது. இந்தக் கொலை தொடர்பாக ராமதாஸ், அறிவழகன் மற்றும் 19 வயது சிறுவன் ஆகிய மூவரையும் முதற்கட்டமாக ஆத்தூர் காவல்துறையினர் கைது செய்தனர். 

 

ராமதாஸ், அறிவழகன் ஆகியோரை சடலம் புதைக்கப்பட்ட இடத்திற்கு அழைத்துச்சென்று அந்த இடத்தைக் காட்டும்படி கூறினர். ஆனால் அவர்கள் கூறிய இடத்தில் சடலம் ஏதும் கிடைக்கவில்லை. மூன்று நாட்களாக தொடர்ந்து ஜேசிபி இயந்திரம் மூலம் தோண்டிப் பார்த்தும் சடலம் புதைக்கப்பட்ட இடம் சரியாக தெரியவில்லை. இதையடுத்து பிடிபட்ட மூவரையும் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைத்தனர். இதற்கிடையே, தலைமறைவாக இருந்த பெருமாள், சக்திவேல், நரசிங்கபுரம் தினேஷ், ஓலப்பாடியைச் சேர்ந்த முஸ்தபா ஆகியோரை காவல்துறையினர் தேடிவந்தனர். 

 

இவர்களில் தினேஷ், ஆத்தூர் குற்றவியல் நீதித்துறை நடுவர் ரங்கராஜன் முன்னிலையிலும், முஸ்தபா ஆத்தூர் ஊரக காவல் நிலைய ஆய்வாளர் ரஜினிகாந்த் முன்னிலையிலும் டிச. 5ஆம் தேதி மாலையில் சரணடைந்தனர். ஏற்கனவே கைதானவர்களில் ராமதாஸ், அறிவழகன் ஆகிய இருவரையும் இரண்டு நாள்கள் காவலில் எடுத்து விசாரித்தனர். சரணடைந்தவர்களுள் ஒருவரான முஸ்தபாவையும், சடலம் புதைக்கப்பட்டதாகச் சொல்லப்படும் இடத்திற்கு அழைத்துச்சென்று விசாரித்தனர். அப்போதும் சுப்ரமணியின் சடலமோ அவருடைய எலும்புகளோ கிடைக்கவில்லை. 

 

 Rs 1.26 crore land farmer case 2 arrested including liquor dealer
சக்திவேல்

 

இந்நிலையில், முக்கிய குற்றவாளியாகக் கருதப்படும் சாராய வியாபாரி பெருமாள், சக்திவேல் ஆகிய இருவரும் நீதிமன்றத்தில் சரணடைவதற்காக சேலத்தில் பதுங்கியிருப்பதாக காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. ஆய்வாளர் ரஜினிகாந்த் தலைமையிலான காவல்துறையினர் ரகசிய இடத்தில் பதுங்கியிருந்த அவர்கள் இருவரையும் டிச. 5ஆம் தேதி இரவு கைது செய்தனர். அவர்களையும், திங்கள்கிழமை (டிச. 6) காலையில் சம்பவ இடத்திற்கு அழைத்துச் சென்று காவல்துறையினர் விசாரணை நடத்தினர். 

 

இதில் முன்னுக்குப் பின் முரணான தகவல்களைக் கூறியதால் காவல்துறையினர் குழப்பமடைந்தனர். சடலம் புதைக்கப்பட்டு 8 மாதங்களுக்கு மேலான நிலையில், அதன் எலும்புத்துண்டுகள் கூட கிடைக்காதது தொடர்ந்து மர்மமாக இருக்கிறது. உண்மையில், சடலத்தை அவர்கள் சக்திவேலின் தோட்டத்தில்தான் புதைத்தார்களா அல்லது வேறு எங்காவது புதைத்துவிட்டு நாடகம் ஆடுகிறார்களா என்பது குறித்தும் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர். 

 

விவசாயி சுப்ரமணி கொலை சம்பவம் ஆத்தூர் சுற்றுவட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.