Skip to main content

மதுவுக்குப் பதிலாகப் போதை மாத்திரைகள்... இளைஞர் மரணம்!

Published on 06/05/2020 | Edited on 06/05/2020

 

ramanathapuram youth incident police investigation


மது போதைக்கு அடிமையாகிவிட்ட இளைஞர் ஒருவர், மது கிடைக்காத நிலையில், போதைக்காக மாத்திரைகளையும், மருந்துகளையும் குடித்து பரிதாபமாக உயிரிழந்ததார். இதனால் மருந்தக உரிமையாளரைக் கைது செய்து சிறையிலடைத்தது மாவட்ட காவல்துறை.
 

கரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக நாடெங்கிலும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால் அத்தியாவசியப் பொருட்கள் நீங்கலாக மதுக்கடைகள் அனைத்தும் மூடப்பட்டன. தொடக்கக் காலகட்டத்தில் பதுக்கி வைத்திருந்த மதுபானங்கள் ஐந்து, ஆறு மடங்கு கூடுதல் விலையில் விற்கப்பட்டன. மது கிடைத்தால் போதும் என்றளவில் விலையைக் கண்டுகொள்ளவில்லை குடிமகன்கள். நாளடைவில் இதற்கும் தட்டுப்பாடு ஏற்படவே, மருந்தகத்தில் தூக்கத்திற்காக வழங்கப்படும் ALPARZOLAM வகையிலான மாத்திரையும், இருமலுக்குப் பரிந்துரைக்கப்படும் CODEINENE வகையிலான மருந்தும் குடிமகன்களின் போதையைச் சற்றே தணித்தன. மருத்துவர் ஆலோசனையின் பெயரில் விற்கப்பட்டும் இம்மருந்து, மாத்திரைகளைப் பணம் கிடைக்கிறதே என்பதற்காகக் கூடுதல் விலைக்கு விற்று வருகின்றன பல மருந்தகங்கள். இதனை வாங்கி விற்பதற்கென தனியாகக் கூட்டம் செயல்பட்டு வந்ததும் அம்பலமாகியுள்ளன.
 

ramanathapuram youth incident police investigation


இதில் ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை தாலுகா திணையத்தூரிலுள்ள ஸ்ரீ அம்மன் மருந்தகத்தில், மதுவுக்கு அடிமையான தொண்டிப் பகுதியைச் சேர்ந்த சதாம் உசேன் எனும் இளைஞர் ALPARZOLAM வகையிலான ANXIT 0.5 மாத்திரையை மருத்துவ ஆலோசனையில்லாமல் வாங்கி போதைக்காக உட்கொண்டு வந்துள்ளார். நாளடைவில் அதிகளவில் மாத்திரைகளை உட்கொண்டதால் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார். 
 

இது மாவட்ட எஸ்.பி.க்கு ரகசியத் தகவலாகச் செல்ல, தொண்டி காவல் நிலைய எஸ்.ஐ.சரவணன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தொண்டி எஸ்.ஐ.சரவணன், திருவாடனை அரசு மருத்துவர் மணிமுத்து, மருந்தாளுனர்கள் மற்றும் காவலர்கள் இணைந்து புகாருக்குரிய ஸ்ரீ அம்மன் மருந்தகத்தைக் கண்காணித்து வந்த நிலையில், தொண்டியைச் சேர்ந்த பயாஸ் மற்றும் சியாத் ஆகிய இளைஞர்கள் மருத்துவப் பரிந்துரையின்றி மேற்கண்ட தூக்க மாத்திரை அட்டை இரண்டினை ரூ.1,000-த்திற்கும், 100 மிலி பாட்டில் ஒன்று ரூ.150 வீதம் ரூ.8,250-க்கு 55 பாட்டில்கள் வாங்கியதும் தெரியவர கையும் களவுமாகப் பிடித்து விசாரிக்கையில், இங்கிருந்து வாங்கி பல மடங்கு கூடுதல் விலைக்கு விற்பனை செய்வது தங்களின் வழக்கமென ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்க, மருந்தக உரிமையாளர் மாரி மற்றும் விற்பனைக்காக வாங்கிய இருவரையும் "போதை மருந்துகள் மற்றும் உளவெறியூட்டும் பொருட்கள் சட்டம் 1985 இன் படி வழக்குப் பதிவுசெய்து மூவரையும் கைது செய்துள்ளது மாவட்டக் காவல்துறை. 

போதைக்கு அடிமையாகி மாத்திரைகளை மருந்துகளை உட்கொண்டு உயிரிழந்த சதாம் உசேனுக்கு கர்ப்பிணி மனைவி இருப்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட ஆயுதங்கள்; ரோபோக்களைக் கொண்டு சோதனை

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 seized at home; Testing with robots

மேற்கு வங்கத்தில் வீடு ஒன்றிலிருந்து ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் தற்போது அந்தப் பகுதியில் ரோபோக்களைக் கொண்டு ஆயுதங்களை பறிமுதல் செய்ய பாதுகாப்புப் படையினர் அதிகப்படியாக குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் 18-வது மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் சந்தோஷ்காளி விவகாரம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மேற்கு வங்கத்தில் சந்தோஷ்காளி பகுதியில் ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக சிபிஐ போலீசாருக்கு தகவல் வந்தது. தேர்தல் வன்முறையில் பயன்படுத்துவதற்காக ஆயுதங்கள் குவிக்கப்பட்டுள்ளதாக சந்தேகம் எழுந்த நிலையில் சிபிஐ  போலீசார் சந்தோஷ்காளி பகுதியில் சோதனை நடத்த முடிவு செய்தனர்.

அதனைத் தொடர்ந்து வீடு ஒன்றில் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் மேலும் அங்கு அதிகப்படியான ஆயுதங்கள் இருக்க வாய்ப்பு இருப்பதாக சிபிஐக்கு சந்தேகம் எழுந்தது. மனிதர்களால் ஆய்வு செய்தால் குண்டு வெடிப்பு உள்ளிட்ட அசம்பாவிதங்கள் நடைபெறலாம் என்ற யூகத்தின் அடிப்படையில் தேசிய பாதுகாப்புப் படையினர் வரவழைக்கப்பட்டனர். தேசிய பாதுகாப்புப் படையின் சார்பாக ரோபோ கருவிகள் மூலமாக வெடிகுண்டு மற்றும் ஆயுதங்கள் அங்கிருந்து பறிமுதல் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் அதிகப்படியாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் மட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே அங்கு திரிணாமுல் காங்கிரஸ் முன்னாள் நிர்வாகி ஷாஜகான் என்பவர் சந்தோஷ்காளி பகுதியில் ஆதரவாளர்களைத் திரட்டி ஆயுதங்களை வைத்து வன்முறையில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.